RSS

இக்குதே கண்கள் விக்குதே

கடந்த இரண்டு நாட்களாக வித்தகனில். ஜோஷ்வா ஸ்ரீதரின் முந்தைய படமான வெப்பம் அளவுக்கு இல்லை என்றாலும் நன்றாகவே உள்ளன. என் விருப்பத்திற்குரிய பாடகிகள் ஷ்ரேயா, சின்மயி, ஷ்வேதா பாடிய மூன்று மெலடிகள் காதுகளில் ரீங்காரமிடும் வகை. அதிலும் அதிகமாக கேட்டது ஷ்ரேயா-ஹரிஹரன் பாடிய இக்குதே கண்கள் விக்குதே பாடல்தான். Best of the Album.

முன்பெல்லாம் ஒரு ஆல்பத்தில் ஷ்ரேயா கோஷால் பெயருள்ள பாடலைத்தான் முதலில் கேட்பேன். அதைக் கேட்டால் மற்ற பாடல்களைக் கேட்காமல் இக்னோர் செய்துவிடுவதால் இப்போதெல்லாம் எல்லாப் பாடல்களைக் கேட்டபின் ஷ்ரேயாவின் பாடலை இறுதியாக கேட்கிறேன். ஆனாலும் அதுதான் பிடிக்கிறது. கொடியசைந்ததும் காற்று வந்ததா காற்று வந்ததும் கொடியசைந்ததா என்பதுபோல் சிறந்த பாடலை ஷ்ரேயாவிற்குக் கொடுக்கிறார்களா இல்லை ஷ்ரேயா பாடுவதால் அது சிறந்த பாடலாகி விடுகிறதா? 😉

காதல் சொட்டச் சொட்ட பார்த்திபன் எழுதிய வரிகள் மிகவும் கவர்ந்தன.

இக்குதே கண்கள் விக்குதே
ஈரம் சொட்ட முத்தம் தாராயோ
இட்டுதே வெட்கம் முட்டுதே
நீயும் தட்ப வெட்பம் தீர்ப்பாயோ

அட்டையாய் ஒட்டியே
உணர்ச்சியை உறிஞ்சியே
வெறும் சக்கையாய் சாய்கிறேன்
நீ துப்பிடும் பார்வையால்

அதிகாலை செய்தித்தாள் போலே
நுழைந்தாயே… கதவோரம்
ஓ.. நிழல் தானே என நான் நடந்தேனே
தொடர்ந்தாயே… அழகாக

நிழலுக்கும் புவியிர்ப்பு விசை கொண்டாயே
மிதக்கும் நிலை தரை மீதே நான் கொண்டேனே

அன்பை வெடிக்க வைத்து என்னை இழக்க செய்த
கண்ணே கன்னி வெடிகுண்டே

புடவைக்குள் ஒரு போர்க்களம்
கூறாயுதங்கள் ஓராயிரமே இவளிடம்
வெல்வதோ மடி வீழ்வதோ
போரிடுவதே பேரின்பமே பெருந்தவம்

இருட்டாக்கும் உன்னால் மின்வெட்டாய்
அணைத்தாயே மணி நேரம்
ஓ.. மின்சாரம் உற்பத்தி செய்தோம்
ஏராளம் இதழோரம்

கவனம் கொள் கணிதத்தில் என்னை கொல்லாதே
கணக்கின்றி வழக்கின்றி இன்பம் துய்ப்போமே

மறுகன்னம் காட்டி முத்தம் வாங்கித் தின்னும்
சிலுவைக் காதல் பெண்ணே…

(இக்குதே)

 
1 Comment

Posted by on November 10, 2011 in Music, Shreya Ghoshal

 

கங்கை நீரும் கானல் நீரும்

கல்லூரிப் பருவம் வரை தீவிர ரஹ்மான் ரசிகனாக இருந்த என்னை இளையராஜாவின் பக்தனாக மாற்றிய பாடல்களுள் ஒன்று. மனம் சரியில்லாத ஒரு நாள் இந்தப் பாடலைக் கேட்டபோது மயிலிறகால் வருடிய இதம் கிடைத்தது. அதிலிருந்து எப்போது மனது பாரமாக இருந்தாலும் நான் தேடும் சுமைதாங்கி ராஜாவின் இசையில் முதலில் இந்தப் பாடல்தான் கேட்பேன். சிந்து பைரவி ராகத்தில் அமைந்த அற்புதமான பாடல். குறிப்பாக இரண்டாம் இடையிசைச்சரத்தில் வரும் குழலோசை – Ultimate. வாலியின் வரிகளும் ராஜாவின் இசையும் இணைந்து மனதை இலேசாக்கும். பிரியமானவரின் தோளில் சாய்ந்துகொண்டு கவலைகளை மறப்பது போன்ற அனுபவத்தைக் கொடுக்கும்.

பல வருடங்களாக இப்பாடலின் ஒரு வரியில் ஒரு சந்தேகம் இருக்கிறது. கானல் நீரால் தீராத தாகம் கங்கை நீரால் தீர்ந்ததடி என்று ஒரு வரி வரும். இந்த வரி ஒரு பொதுவான உண்மை. கங்கை நீரால்தான் தாகத்தைத் தீர்க்க முடியும், கானல் நீரால் ஒருபோதும் முடியாது. அப்படியிருக்கையில் இந்த வரி மிகச் சாதாரணமாக இருக்கிறது. கதையின்படி மனைவியால் சந்தோஷத்தை இழந்த நாயகன் வழியில் சந்திக்கும் ஒரு பெண்ணிடம் தன் மன பாரத்தை இறக்கி வைக்கிறான். வாழ்க்கைத்துணையை கங்கை நீருக்கும், வழித்துணையை கானல் நீருக்கும் அல்லவா உருவகப் படுத்தியிருக்க வேண்டும்? அதுவே கங்கை நீரால் தீராத தாகம் கானல் நீரால் தீர்ந்ததடி என்றிருந்தால் கவித்துவமாக இருந்திருக்கும்.

இரண்டு வருடங்களுக்கு முன் நண்பர் மகேஷ் தன் பதிவொன்றில் இந்தப் பாடலைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தபோதும் இதைப் பின்னூட்டமாக இட்டேன். இப்போது அவர் வலைப்பூவை நீக்கிவிட்டார். விகடன் மேடையில் வாசகர் கேள்விகளுக்குப் பதிலளித்த கே.பி.யிடம் கேட்கத் தோன்றியது. சோம்பேறித்தனத்தால் எழுதிப் போடவில்லை. ட்விட்டரில் மதன்கார்க்கியிடம் இதுபற்றி கேட்டபோது என்னுடன் அவர் உடன்பட்டார். வாலியைச் சந்திக்க நேர்ந்தால் இந்தச் சந்தேகத்தைக் கேட்கச் சொல்லியிருக்கிறேன். பார்ப்போம்!

என்.சொக்கனின் தாள்/தாழ் சந்தேகத்திற்குப் பிறகு இதைப் பதிவு செய்யத் தோன்றியது.

 
10 Comments

Posted by on October 23, 2011 in Chummaa, Ilayaraja, K.Balachander, Music

 

அவள் ஒரு தொடர்கதையும் நானும்

அவள் ஒரு தொடர்கதை – என்னுள் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய படம். எனது 12-வது வயதில் பார்த்து பிரமிப்பூட்டி இயக்குனர் ஆகும் ஆசையைத் தூண்டியது. அதுவரை பாலசந்தரின் சின்னத்திரை மூலமாகத்தான் அறிமுகமாகி இருந்தார். அதன்பின் கே.பி.யின் படங்களைத் தேடித் தேடித் பார்த்தேன். அப்போது சன் மூவீஸ் சேனல் மிகவும் உதவியாக இருந்தது. 13 வயதைத் தொட்டிருக்கும் என் மாமா பெண் இன்னும் Harry Potter-ஐயும் கார்ட்டூனையும் மட்டுமே பார்க்கிறாள் 😦
அவள் ஒரு தொடர்கதை இரவுக்காட்சி பார்த்துவிட்டு சைக்கிளை திரையரங்கிலேயே விட்டுவிட்டு, வீட்டுக்கு வந்து தன் அப்பாவிடம் டோஸ் வாங்கியதாகவும், பின் பாலசந்தரிடம் உதவி இயக்குனராகும் வாய்ப்பு கேட்டு சென்றதாகவும் இயக்குனர் வஸந்த் ஒரு பேட்டியில் சொன்னார். அதைக் கேட்டதும் என்னைப் போலவே இன்னொருவருக்கும் அதே போன்ற தாக்கம் இருந்திருக்கிறதே என்று என் பிரமிப்பு இரட்டிப்பானது.
எம்.எஸ்.பெருமாளின் மூலக்கதையைக் கொண்டு கே.பி. திரைக்கதை-வசனம் எழுதி இயக்கிய இப்படம்  மலையாளத்தில் Aval oru Thudarukatha (Dubbing), தெலுங்கில் Anthu leni Katha, கன்னடத்தில் Benkiyalli Aralida Hoovu, ஹிந்தியில் Jeevan Dhaara, பெங்காலியில் Kabita என்று பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரித்விக் கட்டக்கின் Meghe Dhaka Tara படத்தின் தழுவல்தான் இப்படம் என்று சொல்லப்பட்டாலும் (நான் இன்னும் பார்க்கவில்லை) பெங்காலியிலும் ரீமேக் ஆனது ஆச்சரியம்.
பெங்காலி உட்பட அனைத்து மொழிகளிலும் கமல் ஒரு பாத்திரத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் மேலாளர் கதாபாத்திரம், கன்னடத்தில் பஸ் கண்டக்டர் கதாபாத்திரம், பெங்காலியில் அதே விகடகவி கதாபாத்திரம் என்று செய்தவர் ஹிந்தியில் மட்டும் தவற விட்டுவிட்டார். கன்னட அ.ஒ.தொ சுஹாசினியும் கமல்ஹாசனும் இணைந்து நடித்த இரண்டே படங்களில் ஒன்று. மற்றொன்று Y.Gee.மகேந்திரன்-சுஹாசினி நடித்த உருவங்கள் மாறலாம். சிவாஜி கடவுளாக நடித்தார். ரஜினி, கமல், ஜெயஷங்கர் உள்ளிட்டோர் Cameo Appearance செய்தனர். நல்ல வேளையாக அவள் ஒரு தொடர்கதை படத்தில் இப்படி ஒரு பாட்டு இல்லாமல் போனது.
கே.பி.யின் பெண் கதாபாத்திரங்களில் எனக்கு மிகவும் பிடித்தது கவிதா – நடமாடும் நெருப்புராட்(ச்)சஸி (அடுத்து சிந்து) அண்ணியின் காய்ச்சலுக்கு மருந்து வாங்க பணம் கொடுக்காமல் உதட்டுச்சாயம் வாங்க பணம் கொடுத்தனுப்புவது செயற்கையான, சினிமாத்தனமான குணாதிசயம் என்றாலும் அவளது திமிர் எனக்கு மிகவும் பிடிக்கும்.  முதல் படத்திலேயே கனமான கதாபாத்திரத்தை சுஜாதா அனாயாசமாக செய்திருப்பார். அவர் வாழ்நாள் முழுவதற்கும் இந்தப் படமே போதும். ஜெயப்ரதாவுக்கும், மாலா சின்ஹாவுக்கும் சுஜாதா அளவுக்கு திமிரும் மிடுக்கும் இல்லை. தெலுங்கில் மூர்த்தியாக ரஜினி கலக்கியிருப்பார் 🙂 கன்னடத்திலும் ஹிந்தியிலும் பார்த்ததில்லை. சுஹாசினியும் ரேகாவும் திறமையான நடிகைகள் என்றாலும் சுஜாதா அளவுக்குச் செய்திருப்பார்களா என்று பார்க்க வேண்டும். CD/DVD பல நாட்களாகத் தேடுகிறேன். பெங்களூருவில் கூட கிடைக்கவில்லை 😦
இன்றைய காலக்கட்டத்திற்கும் Relevant-ஆக இருக்கும் இப்படத்தை ரீமேக் செய்தால் இப்போதுள்ள கதாநாயகியரில் கவிதா கதாபாத்திரத்திற்கு யார் பொருந்துவார்? இப்போது இருப்பவர்கள் எல்லாம் எங்கே நடிக்கிறார்கள் என்று கேட்கிறீர்களா?. சில நாட்கள் முன்பு வரை என் சாய்ஸ் ஸ்நேஹா, பின் பத்மப்ரியா. இப்போது அனுஷ்கா 😉
 
4 Comments

Posted by on October 9, 2011 in Chummaa, Movies

 

வசந்தபாலனும் வணிகக் குப்பைகளும்

இன்று மாலை பலரும் சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளில் முறையே சந்திரமுகி மற்றும் சிவாஜி படங்களை விளம்பர இடைவேளைகளில் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர். ட்விட்டரிலும் கூட இப்படங்கள் இடைவேளை இன்றி ஓடிக்கொண்டிருந்தன. அறை நண்பர்கள் அனைவரும் டிவி முன் இருக்கையில் நான் மட்டும் மற்றொரு அறையில் பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்தேன். சந்திரமுகி இறுதிக் காட்சி மட்டும் ஜோதிகாவுக்காக பார்க்கச் சென்றேன். நண்பர் ஒருவர் ‘உடம்பு சரியில்லையா?‘ என்று கேட்டார். இல்லை என்றதும் ‘அப்பறம் ஏன் இவ்ளோ நேரம் படம் பாக்க வரல?’ என்றார். இரண்டு படங்களும் எனக்குப் பிடிக்காது என்று சொன்னதும் ஒரு வினோத ஜந்துவைப் பார்ப்பது போல் பார்த்தனர்.

சந்திரமுகியின் ஒரிஜினல் மணிச்சித்ரத்தாழ் தான் பிடிக்கும். ரஜினிக்காக வைக்கப்பட்ட    ஹீரோயிசக் காட்சிகளும் வடிவேலுவுடன் தோன்றும் மட்டமான நகைச்சுவைக் காட்சிகளும்  எரிச்சலின் உச்சம். ஆனாலும் ஜோதிகாவையும் ரஜினியின் வில்லத்தனமும் மிகவும் பிடிக்கும் என்பதால் இறுதிக் காட்சி மட்டும் பார்ப்பேன். தனது அனேக மலையாளப் படங்களைத் தமிழிலும் இயக்கும் ஃபாசில் ஏன் மணிச்சித்ரத்தாழை மட்டும் விட்டு வைத்தார்? ஷோபனாவையே நடிக்க வைத்திருக்கலாம். அல்லது அன்றைய பானுப்ரியா கூட அழகாகப் பொருந்தியிருப்பார்.

ஷங்கர் படத்தில் எனக்குப் பிடிக்காத படம் சிவாஜி. அதற்கு முன் வரை பாய்ஸ். நான் முதல் நாள் முதல் ஷோ பார்த்த முதல் ரஜினி படம் சிவாஜி. கல்கத்தாவில் இருந்தபோது தமிழ்ப் படங்களே வராது. நான் இருந்த மூன்று வருடங்களில் வெளியான இரண்டே படங்கள் சிவாஜி மற்றும் தசாவதாரம். அதனால் இரண்டையும் முதல் நாளே பார்த்தேன்.  தசாவதாரத்தை நான்கு முறை பார்த்தேன். ஆனால் சிவாஜியை ஒரு முறைக்கு மேல் பார்க்க முடியவில்லை. அது போன்ற ஒரு பிரம்மாண்டக் குப்பையை எடுக்க ஷங்கர் தேவையில்லை  ரஜினியின் ஒப்பனையில் மட்டுமே ஷங்கர் தெரிந்தார். இறுதியில் வரும் மொட்டை பாஸாக ரஜினி வரும் காட்சிகள் மட்டும் பிடிக்கும். ஆனால் எந்திரனில் ரஜினி தன்னை முழுவதும் இயக்குனரிடம் ஒப்படைத்து கடினமாக உழைத்திருந்தது Making of Endhiran-ல் பார்த்து பிரமித்துவிட்டேன்.  இனிமேலாவது ஹீரோவாக நடிக்காமல் அமிதாப் பச்சன் போல் கதையின் நாயகனாக படங்களைத் தேர்வு செய்து அவர் நடிக்க வேண்டும்.
இரண்டு படங்கள் முடிந்ததும் ஜெயா டிவியில் அரவான் இசை வெளியீட்டு விழா கொஞ்சம் பார்க்க நேர்ந்தது. அதற்கு சற்று முன் தான் பாடல்களைத் தரவிறக்கிக் கொண்டிருந்தேன். அறை நண்பர் ஒருவர் வசந்தபாலன் யார் என்று கேட்டார். ‘வெயில்‘, ‘அங்காடித் தெரு‘ படங்களை இயக்கியவர்.ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர். ஆல்பம் என்ற படத்தை முதலில் இயக்கினார்’ என்றேன். ‘அங்காடித் தெரு’ மட்டும் கேள்விப் பட்டிருப்பதாகவும் மற்ற எதுவும் ஹிட் ஆகவில்லையே என்றார். ஹிட் ஆகும் படங்கள் எல்லாம் நல்ல படங்கள் அல்ல என்று சொன்னேன். நல்ல படங்கள் தோல்வியடைந்து வணிகக் குப்பைகள் வெற்றிபெறும்போது ஒரு சினிமா ஆர்வலனாக மிகுந்த வேதனை அளிக்கிறது.
 ‘நல்ல படங்களை மட்டுமே எடுப்பேன் என்று ஒரு வெறியோடு இருப்பவர் வசந்தபாலன்’ என்று சேரன் சொன்னார். சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் என்ற நாவலில் ஒரு பகுதியை அரவான் படத்தின் கருவாக்கியுள்ளார். வசந்தபாலன் வணிகரீதியாக சமரசமும் செய்துகொள்ளாமல் தரமான படைப்புகளைக் கொடுக்க முயற்சிக்கும் ஓர் இயக்குனர். என்னைப் பொறுத்தவரை பாலு மகேந்திரா, மகேந்திரன் போன்றவர்களைப் போல் வரக்கூடியவர். *ஈரம்* படத்திலிருந்து ஆதியைப் பிடித்தது, பிரத்யேகமாக அவரது குரல் மிகவும் பிடிக்கும். பன்னிரண்டாம் நூற்றாண்டில் நடக்கும் பீரியட் கதை என்பதும், என் அபிமான பாடகர் கார்த்திக் முதன்முறையாக இசை அமைத்துள்ளார் என்பதும் எதிர்ப்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. ஹிந்தி நடிகர் கபீர் பேடி, மலையாள நடிகை ஸ்வேதா மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நிடித்துள்ளனர். நடிகர் பரத் கேமியோ ரோலில் நடித்துள்ளார். தமிழ் இலக்கியவாதிகள் சிலர் கலந்து கொண்டிருந்தது ஆச்சரியத்தை அளித்தது. அரவான் வெற்றி பெற வாழ்த்துகள்!
 
Leave a comment

Posted by on October 7, 2011 in Chummaa, Movies

 

ஷுபோ மஹாளையா!

மஹாளய அமாவாசை – மிகவும் புனிதமாகக் கருதப்படும் இந்நாள் நம் ஊரில் பித்ருக்களை நினைத்து வணங்குகிறோம். வங்காளத்தில் இன்றுதான் துர்கா பூஜா பந்தல்களில் வைக்கப்படும் துர்கை சிலைகளுக்குக் கண் வரைவார்கள். துர்க்கை சிலை செய்வதற்கான முதல்பிடி மண்ணாக ஒரு விலைமகளின் காலடி மண்ணைத்தான் பயன்படுத்துவார்கள். இதையொட்டி நரசய்யா எழுதிய ஒரு சிறுகதையை விகடனில் படித்த நினைவு. பெயர் நினைவில்லை.

ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில்தான் சேர்வேன் என்று அடம்பிடித்து அம்மாவின் இமோஷனல் ப்ளாக்மெயிலால் தோல்வியடைந்து துளியும் ஆர்வமில்லாத பொறியியல் படிப்பில் பொறியில் சிக்கிய எலிபோல் கல்லூரியில் சிக்கிய நாள். 27.9.2000, an unforgettable day in my life. 11 வருடங்கள் போனதே தெரியவில்லை.

What a coincidence! அன்றும் மஹாளய அமாவாசை 🙂

ஷுபோ மஹாளையா !

 
4 Comments

Posted by on September 27, 2011 in Celebrations, Functions

 

கார்த்திக் ஜாக்கிரதை

கார்த்திக் என்ற என் பெயரை எனக்குப் பிடிக்காமல் இருந்தது. பத்துப் பசங்களில் குறைந்தது நான்கு ‘கார்த்திக்‘களாவது இருப்பார்கள். பள்ளியில் என்னுடன் ஐந்து கார்த்திக்கள் படித்தனர். அதனால் இனிஷியலை வைத்துதான் கூப்பிடுவார்கள். “ஏ.கார்த்திக்” என்று பள்ளி நாட்கள் முழுதும் விளிக்கப் பட்டேன். நண்பர்களுக்கு ஃபோன் செய்து (அப்போதெல்லாம் லேண்ட்லைன்) ‘கார்த்திக் பேசறேன்‘ என்றால் ‘எந்த கார்த்திக்?’ என்றுதான் எப்போதும் பதில் வரும். இவ்வளவு பொதுவான பெயரை வைத்ததற்கு என் அம்மாவை பலமுறை வைதுள்ளேன். நான் பிறந்தபோது இது வழக்கில் அதிகம் இல்லாத பெயர் என்று சொல்வார்.

வழக்கமாக திரைப்படங்களில் கதாநாயகனுக்கு ராஜா, ராமு, பாலு, சிவா, கண்ணன் இவற்றில் ஏதாவது ஒரு பெயர் இருக்கும். முதன் முதலில் ‘காதல் தேசம்’ படத்தில்தான் கதாநாயகனுக்கு கார்த்திக் என்று பெயர் வைக்கப்பட்டது ஆனால் ‘அலைபாயுதே‘வுக்குப் பிறகுதான் கார்த்திக் என்ற பெயர் மிகவும் Modern & Smart பசங்களுக்கு உரித்தான பெயராக மாறியது 😉 தேங்க்ஸ் டு மணிரத்னம். மாதவனும் நானும் ஒரே நாளில் பிறந்தோம். என்ன, அவர் பதினான்கு வருடங்கள் முன்னதாகப் பிறந்து விட்டார் 🙂 அதிலிருந்து என் பெயர் எனக்குப் பிடிக்க ஆரம்பித்துவிட்டது. (அன்றிலிருந்து ஷாலினி போல் ஒரு ஷக்தியைத் தேடிக் கொண்டிருக்கிறேன்). கல்லூரியில் சேர்ந்த வருடம் அந்தப் படம் வெளியானது. யாராவது என் பெயரைக் கேட்டு நான் சொன்ன பின் ‘கார்த்திக் நீ பணக்காரனா? கிளாஸ்ல லாஸ்டா? அடிக்கடி ஃபெயில் ஆவியா?’ என்று அலைபாயுதே வசனத்தைக் கண்டிப்பாக சொல்வார்கள். பிறகு உன்னாலே உன்னாலே, மொழி, தீராத விளையாட்டுப் பிள்ளை படங்களைத் தொடர்ந்து கார்த்திக் என்றால் Lover Boy/Casanova மாதிரியான கதாபாத்திரம் என்று உருவகப் படுத்தப்பட்டுவிட்டது. (‘ரிதம்’ படத்தில் அர்ஜுன் பெயர் கார்த்திகேயன் என்பதால் இங்கு சேர்க்கவில்லை)

விண்ணைத்தாண்டி வருவாயா வருவதற்கு முன் அந்தப் படத்தின் நாயகன் பெயர் கார்த்திக் என்று மட்டும் இருக்கக் கூடாது என்று நினைத்திருந்தேன். அப்போது எனக்கு சிம்புவைப் பிடிக்காததால் அந்த எண்ணம். டிரெயிலரில் கார்த்திக் பெயரைக் கேட்டதும் போச்சுடா! என்று நொந்துகொண்டேன். ஆனால் அலைபாயுதேவைவிட வி.தா.வா.வில் கார்த்திக் என்ற பெயர் மிகவும் ஸ்பெஷல் ஆகிவிட்டது. என் பெயர் மீது மிகவும் கர்வம் கொள்ள ஆரம்பித்துவிட்டேன். Thanks a lot to கௌதம். சின்மயி குரலில் கார்த்திக் என்று கொஞ்சலாகவும் குழைவாகவும் கேட்டால் ஒன்பதாம் மேகத்தில் பறப்பேன். (அதாங்க Cloud Nine) அந்தப் படத்தில் எத்தனை முறை கார்த்திக் என்று வருகிறது என பலமுறை எண்ணிப் பார்த்து தோல்வி அடைந்துள்ளேன். சின்மயிகூட அந்தப் படத்தின் டப்பிங் முடிந்தபின் ‘கார்த்திக்… கார்த்திக்‘ என்று தூக்கத்தில் பிதற்றியுள்ளார் 🙂

பாலிவுட்டில் கார்த்திக்கிற்கு இணையான பெயர் ராஜ்/ராகுல். ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’, ‘குச் குச் ஹோத்தா ஹை’ படங்களுக்குப் பின் ஷாருக்கானால் பிரபலமானது. எனக்குப் பிடிக்கவே பிடிக்காத கார்த்திக் கதாபாத்திரம் என்றால் ‘சர்வம்’ படத்தில் வரும் ஆர்யாவினுடையது. ஆதவன் எழுதிய கார்த்திக் என்ற சிறுகதை சமீபத்தில் படித்தேன். என்னை மிகவும் கவர்ந்து விட்டது. நான்கைந்து முறை படித்து விட்டேன் 🙂

ஆனால் இந்த செல்வராகவன் என் பெயரை நாறடித்து விட்டார். மயக்கம் என்ன படத்தின் பாடல்கள் வந்தபோதே எனக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும் செல்வாவுக்காக கண்டிப்பாக படத்தைப் பார்க்கவேண்டும் என்று நினைத்தேன். இப்போது ட்ரெயிலரைப் பார்த்த பின்பு படத்தைப் பார்க்கவே கூடாது என்று முடிவு செய்துள்ளேன். மயக்கம் என்ன படத்தில் கார்த்திக் என்பது தனுஷுடைய பெயரா இல்லை வேறொருவர் என்று தெரியவில்லை. தனுஷுக்கு அந்தப் பெயர் பொருந்தவே பொருந்தாது. இதைப் பார்த்ததில் இருந்து எங்கள் வீட்டிலும் கார்த்திக் ஜாக்கிரதை என்று ஒரு போர்டு மாட்ட என் தம்பி கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறான். நண்பர்கள் அனைவரும் கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் Hate U செல்வா.

ஆனாலும் படம் வெளியாகும் தேதிக்கு ஒருவாரம் முன் சத்யம் திரையரங்கின் இணையதளத்தில் முன்பதிவு செய்வதற்காக நள்ளிரவில் கண்விழித்துக் கொண்டுடிருப்பேன் என்பது வேறு விஷயம் 🙂 திவ்யா, அனிதா கதாபாத்திரங்கள் போல கார்த்திக்கையும் ஒரு மறக்கமுடியாத பாத்திரமாக சித்தரிப்பார் என்ற நம்பிக்கை கொஞ்சம் இருக்கிறது.

 
12 Comments

Posted by on September 25, 2011 in Chummaa

 

எங்கேயும் எப்போதும்

இந்தப் படத்தின் எதிர்பார்ப்புக்கு ஒரே காரணம் ஹாலிவுட் நிறுவனமான Fox Star தயாரிக்கும் முதல் தமிழ்ப் படம் என்பது மட்டுமே. தவிர இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் படம். வேறு எந்த ஒரு நட்சத்திர அந்தஸ்தும் இல்லாததால் எவ்விதமான ஓர் எதிர்பார்ப்பும் முன்தீர்மானமும் இருக்கவில்லை. பாடல்களைக் கூட முன்னமே கேட்க்காமல் படத்தில்தான் முதன் முறை கேட்டேன். பல வருடங்களுக்குப் பிறகு நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் எடுத்துக் கொண்டு ஈரோட்டில் பார்த்தேன். (கடைசியாக அங்கு பார்த்த ‘வாரணம் ஆயிரம்’ படத்திற்குக்கூட வரிசையில் நிற்கவில்லை)

சென்னையில் இருந்து திருச்சிக்குச் செல்லும் தனியார் பேருந்தும், திருச்சியில் இருந்து சென்னைக்குச் செல்லும் அரசுப் பேருந்தும் சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் விழுப்புரம் அருகே மோதிக்கொண்டு விபத்துக்குள்ளாவதோடு படம் தொடங்குகிறது. அந்தப் பயணத்திற்கு முன்னும் பயணத்தின்போதும் நடக்கும் காட்சிகளை பொதுவாக குழப்பமளிக்கும் நான்-லீனியர் உத்தி மூலம் தெளிவாக காட்சிப் படுத்தியுள்ளார் அறிமுக இயக்குனர் எம்.சரவணன். ஜெய்-அஞ்சலி, ஷர்வானந்த்-அனன்யா ஜோடிகளின் கதைகள் கிளைகளாக விரியும் காட்சிகள் மிகவும் அருமை. இறுதியில் யாரெல்லாம் இருந்தார்கள், இறந்தார்கள், காதலர்கள் என்ன ஆனார்கள் என்று பரபரப்பான இறுதிக் காட்சியில்தான் சொல்ல வந்த செய்தியை, பிரசார நெடியின்றி நுண்மையாக பதிவு செய்துள்ளார். கொஞ்சம் அசந்தாலும் டாகுமெண்டரி போல் ஆகிவிடக் கூடிய படத்தை ஜனரஞ்சகமாக கொடுத்திருக்கும் இயக்குனர் சரவணனுக்கு பெரிய பூங்கொத்து.

திருச்சியில் வரும் ஜெய்-அஞ்சலி காதல் காட்சிகள் புதுமையானவை. மிகவும் பிராக்டிகலான பெண்ணாக தடாலடியாக வரும் அஞ்சலி அப்பாவியான ஜெய்யை ரொம்பவே இம்சிக்கிறார். ஆனாலும் ஆனந்த இம்சை. படம் முழுவதும் அஞ்சலியை ஜெய் ‘நீங்க’ ‘வாங்க’ என்று அழைப்பதும் அஞ்சலி ஜெய்யை ஏகவசனத்தில் அழைப்பதும் அழகாகவே உள்ளது. நேர்முகத் தேர்வுக்கு திருச்சியில் இருந்து சென்னைக்குப் புதிதாக வரும் அனன்யா வழியில் உதவி செய்யும் ஷர்வானந்த் மீது முதலில் சந்தேகமும் பின்பு வழக்கம்போல் காதலும் கொள்கிறார்.ஒரே நாளில் காதல் மலருமா என்று நமக்கு இயல்பாக எழும் கேள்வியை கதாபாத்திரம் மூலமே எழுப்பி இன்னொரு கதாபாத்திரம் மூலமே விடையளிக்க வைத்தது இயக்குனரின் சாமர்த்தியம். படத்தில் தனியாக காமெடி டிராக் இல்லை. இவர்களைக் கொண்டே நகைச்சுவையைப் படம் முழுதும் இழைய விட்டுருக்கிறார் இயக்குனர். அஞ்சலி கிடைத்த பந்துகளில் எல்லாம் சிக்ஸர் அடித்து விளாசி ஆச்சரியப் படுத்துகிறார். ஜெய்யும் அபத்தமான ஹீரோயிசம் எதுவும் இன்றி இயல்பாக நடித்துள்ளார். ஷர்வானந்த் மற்றும் அனன்யாவும் நிறைவாக நடித்துள்ளனர்.

ஒரு பாடலைத் தவிர அனைத்து பாடல்களும் மாண்டேஜ் பாடல்கள். கதையுடனும் காட்சிகளுடனும் நகரும் பாடல்கள்தான் எப்போதும் என் சாய்ஸ். பாடல்கள் மனதில் பதியாவிடினும் காட்சிகள் பதிந்து விடுகின்றன. படத்தின் பாடல்களை விட அதிகம் ஈர்த்தவை பேருந்தில் ஒலிக்கும் இளையராஜா பாடல்கள்தான். ஆரண்ய காண்டம் போல் இதிலும் பின்னணியில் ராஜாவின் பாடல்கள் வரும் இடங்களில் நம்மையும் அறியாமல் உதடுகள் அப்பாடல்களை முணுமுணுக்க ஆரம்பித்துவிடும். மெதுவாக செல்ல ஆரம்பித்திருக்கும் பேருந்தில் ஸ்வர்ணலதாவும் எஸ்.பி.பி.யும் இணைந்து ‘எ/உன்னைத் தொட்டு’ என்று பாடும்போது நாமும் அந்தப் பேருந்தில் பயணிக்க ஆரம்பித்து விடுகிறோம். Characterization-ல் மிகுந்த அக்கறை எடுத்துள்ளார் இயக்குனர். சிறு கதாபாத்திரம் கூட மனதில் பதிந்து விடுகிறது. பேருந்தில் அம்மாவைத் தூங்கவிடாத குழந்தை முதல் ஃபோனில் முகம் தெரியாதவரிடம் ‘சாப்டீங்களா?’ என்று கேட்கும் முகம் காட்டாத குழந்தை வரை கச்சிதம். மனைவியைப் பிரிய மனமின்றி அவளுடனே பேருந்தில் வரும் கணவன் பாத்திரம் மட்டும் செயற்கையாக திணிக்கப் பட்டதுபோல் இருக்கிறது. ஒளிப்பதிவாளர் வேல்றாசும் படத்தொகுப்பாளர் கிஷோரும் இயக்குனருக்குப் பக்க(கா) பலம். சத்யாவின் இசை நிறைவு.

ஆரம்பக் காட்சியே வாகன விபத்து காட்டப்பட்டதும் Alejandro González Iñárritu-ன் அமோரேஸ் பெர்ரோஸ், 21 Grams போன்ற படங்களின் தாக்கத்தில் உருவானது என யூகித்து விடலாம். ஆனால் அதன் தாக்கத்தில் மணிரத்னம் இயக்கிய ‘ஆய்த எழுத்தை’ விட நன்றாக உள்ளது. காரணம் அதிக சிக்கல் இல்லாத தெளிவான திரைக்கதை. பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளைப் புள்ளிகளாக்கி, திரைக்கதை என்ற கோடு மூலம் அவர்களை இணைத்து, கதாபாத்திரங்களின் இயல்பான நடிப்பு, மிக யதார்த்தமான வசனங்கள், அற்புதமான ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, நிறைவான இசை போன்ற வண்ணங்கள் கொண்டு அழகிய திரைக்கோலமிட்டுள்ள இயக்குனர் சரவணன் நம்பிக்கை அளிக்கிறார். எங்கேயும் எப்போதும் கவனம் தேவை என்று சொல்லி நம் கவனத்தை ஈர்க்கிறார். குடும்பத்துடன் சென்று நிச்சயம் பார்க்கலாம்.

பி.கு: ஈரோட்டில் இதுவரை படம் முடிந்ததும் மக்கள் கைதட்டி நான் பார்த்ததில்லை. இயக்குனருக்கு ‘ஓ’ கூட போட்டார்கள்!

 
1 Comment

Posted by on September 22, 2011 in Movie Reviews, Movies

 

Happy B’day Asha Bhonsle

இன்று 78வது பிறந்தநாள் கொண்டாடும் பாடகி ஆஷா போன்ஸ்லேவின் ஆகச்சிறந்த பாடலாக நான் கருதுவது. எப்போதுமே அதிரடியாக பாடும் ஆஷா, தன் அக்கா லதா மங்கேஷ்கரைப் போல் மிக மென்மையாகவும் இனிமையாகவும் பாடிய பாடல். தேசிய விருதுக்கான எல்லா தகுதிகளையும் கொண்ட பாடல்.

அதேபோல் குல்ஸாரின் வரிகள் அபாரமானவை. தன்னை ஒரு பெண்ணாக பாவித்து எழுதியிருப்பார் என எண்ணுகிறேன். பிரிந்து போன காதலனுக்குக் காதலி எழுதுவது போன்ற பாடல். கூட்டுக் குடும்பத்தில் வாழும் மனைவி ஒருத்தி வெளியூரில் இருக்கும் தன் கணவனுக்குக் கடிதம் எழுதுவது போல் லா.ச.ரா. எழுதிய ‘பாற்கடல்’ சிறுகதை போல.

 
Leave a comment

Posted by on September 8, 2011 in Birthdays, Music

 

வாடா பின்லேடா

மங்காத்தாவில் ‘வாடா பின்லேடா’ என்ற கருத்தாழமிக்க ஒரு பாடலைக் கேட்டதுமே பிடித்துவிட்டது. பாடலாசிரியர் வேறு யாராக இருக்கும்? ‘பத்மஸ்ரீ’ கவிஞர் வாலிதான்! என்னமாய் எழுதி இருக்கிறார்! தேசிய விருதுக்குப் பரிந்துரைக்கிறேன் :)பாய்ஸ் படத்தில் வரும் முன்னாவின் அறிமுகக் காட்சியில் வரும் கவிதையை எழுதியவரும் ‘வாலி’தானா?

பாடலைப் பாடிய மிர்ச்சி சுச்சி – செம்ம ஹாட்டு மச்சி. பாடகர் க்ரிஷ்ஷின் குரல்கூட வித்தியாசமாக உள்ளது. வரிகள் ஒவ்வொன்றும் மணி மணியாய் உள்ளன. உதா – ‘நூலாடை நிற்காத இடுப்பு; நீ வந்து சோறாக்கும் அடுப்பு’. – Marvelous! மேலும் வரிகளுக்குப் பாடலைக் கேட்டுத் தெரிந்துகொள்ளவும். Beautiful… Wonderful… Marvelous…(ஆரண்ய காண்டம் ஜாக்கி ஷ்ராஃப் குரலில் படிக்கவும் ;-)) பின் லேடனைக் கொல்வதற்கு முன்னமே எழுதப் பட்டிருக்க வேண்டும். சென்சாரில் கத்தரிக்கப் படாமல் முழுவதுமாக திரையில் வருமா என்பது சந்தேகம்தான்.

வைரமுத்துவின் வாரிசு மதன் கார்க்கி பாடலாசிரியராக வந்தாலும் அவரது வாரிசு ‘ஹைக்கூ கார்க்கி’ வளர்ந்து பாடலாசிரியராக வந்தாலும் வாலி இதுபோன்ற பாடல்களை இளமை ததும்ப எழுதி தமிழ்த் துண்டு ஆட்டுவார் 🙂

சஹானாவிற்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்த தெய்வீகமான ‘தர்மவதி’ ராகத்தில் இப்பாடல் அமைந்துள்ளது. இதை அருமையான மெலடி பாடலாக இசையமைக்காமல் யுவன் இப்படி கில்மா பாடல் ஆக்கிவிட்டாரே வருத்தம் என்ற இருந்தாலும் இடையிசை துணுக்குகளில் அதைச் சரி செய்து விட்டார். ‘ஹலோ மை டியர் ராங் நம்பர்’ (மன்மத லீலை) மீண்டும் மீண்டும் வா (விக்ரம்), ஒட்டகத்தக் கட்டிக்கோ என்று அவர் முன்னோடிகள் கூட இதுமாதிரி Erotic பாடல்களுக்கு இந்த ராகத்தில் இசையமைத்திருக்கிறார்களே!

தர்மவதியில் அமைந்த சில பாடல்கள்

ஒரு நாள் இரவு – காவியத்தலைவி
என்னுள்ளில் எங்கோ – ரோசாப்பூ ரவிக்கைக்காரி (Evergreen ! Esp 2nd interlude)
இளஞ்சோலை பூத்ததா – உனக்காகவே வாழ்கிறேன் (Simply ILAYARAJA)
தத்தித்தோம் – அழகன்
எழுதுகிறேன் ஒரு கடிதம் – கல்கி
வானவில்லே வானவில்லே – ரமணா
தவமின்றி கிடைத்த வரமே – அன்பு

தர்மவதியின் ஹிந்துஸ்தானி இணையான/ஜன்யமான ‘மதுவந்தியி’ல் அமைந்த பாடல்கள்

நந்தா நீ என் நிலா – நந்தா என் நிலா (இந்த ராகத்தில் ஆகச்சிறந்த பாடல்)
கனா காணும் காலங்கள் – 7/ஜி ரெயின்போ காலனி
கண்ட நாள் முதலாய் – கண்ட நாள் முதல்

 
2 Comments

Posted by on August 12, 2011 in Chummaa, Music

 

2nd Blogoversary

இந்த வலைப்பூவைத் துவங்கி இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன. முதலாம் ஆண்டின் நிறைவின் போது எழுதியதுபோல் இரண்டாம் ஆண்டு குறைவான பதிவுகள் எழுதியிருந்தாலும் நிறைவாக எழுதி இருக்கிறேன் என்று மகிழ்கிறேன். படித்ததுப் பார்த்து விட்டு நன்றாக இல்லை என்று சொல்வது எவ்வளவு சுலபம் என்று எழுதும்போதுதான் தெரிகிறது. கடந்த வருடத்தில் இருந்து தமிழில் எழுதத் தொடங்கி இருந்தாலும் டிசம்பரில் இருந்துதான் என் எழுத்து கொஞ்சம் தேறி இருப்பதாக நினைக்கிறேன். என் வலைப்பூவை வாசிக்கும் வெகு சில வாசகர்களுக்கு இந்த மாற்றங்கள் தெரிந்திருக்கும். அடுத்த ஆண்டு மேலும் சில நல்ல பதிவுகளுடன் என் எழுத்தில் மேலும் மேன்மை கூடும் என்ற நம்பிக்கையோடு இந்தத் தளத்தை வாசிப்பவர்களுக்கும், மறுமொழி இடுபவர்களுக்கும் இடாதவர்களுக்கும் நன்றி கூற விரும்புகிறேன்.

 
Leave a comment

Posted by on August 7, 2011 in Celebrations, Milestones