RSS

Category Archives: Movie Reviews

எங்கேயும் எப்போதும்

இந்தப் படத்தின் எதிர்பார்ப்புக்கு ஒரே காரணம் ஹாலிவுட் நிறுவனமான Fox Star தயாரிக்கும் முதல் தமிழ்ப் படம் என்பது மட்டுமே. தவிர இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் படம். வேறு எந்த ஒரு நட்சத்திர அந்தஸ்தும் இல்லாததால் எவ்விதமான ஓர் எதிர்பார்ப்பும் முன்தீர்மானமும் இருக்கவில்லை. பாடல்களைக் கூட முன்னமே கேட்க்காமல் படத்தில்தான் முதன் முறை கேட்டேன். பல வருடங்களுக்குப் பிறகு நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் எடுத்துக் கொண்டு ஈரோட்டில் பார்த்தேன். (கடைசியாக அங்கு பார்த்த ‘வாரணம் ஆயிரம்’ படத்திற்குக்கூட வரிசையில் நிற்கவில்லை)

சென்னையில் இருந்து திருச்சிக்குச் செல்லும் தனியார் பேருந்தும், திருச்சியில் இருந்து சென்னைக்குச் செல்லும் அரசுப் பேருந்தும் சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் விழுப்புரம் அருகே மோதிக்கொண்டு விபத்துக்குள்ளாவதோடு படம் தொடங்குகிறது. அந்தப் பயணத்திற்கு முன்னும் பயணத்தின்போதும் நடக்கும் காட்சிகளை பொதுவாக குழப்பமளிக்கும் நான்-லீனியர் உத்தி மூலம் தெளிவாக காட்சிப் படுத்தியுள்ளார் அறிமுக இயக்குனர் எம்.சரவணன். ஜெய்-அஞ்சலி, ஷர்வானந்த்-அனன்யா ஜோடிகளின் கதைகள் கிளைகளாக விரியும் காட்சிகள் மிகவும் அருமை. இறுதியில் யாரெல்லாம் இருந்தார்கள், இறந்தார்கள், காதலர்கள் என்ன ஆனார்கள் என்று பரபரப்பான இறுதிக் காட்சியில்தான் சொல்ல வந்த செய்தியை, பிரசார நெடியின்றி நுண்மையாக பதிவு செய்துள்ளார். கொஞ்சம் அசந்தாலும் டாகுமெண்டரி போல் ஆகிவிடக் கூடிய படத்தை ஜனரஞ்சகமாக கொடுத்திருக்கும் இயக்குனர் சரவணனுக்கு பெரிய பூங்கொத்து.

திருச்சியில் வரும் ஜெய்-அஞ்சலி காதல் காட்சிகள் புதுமையானவை. மிகவும் பிராக்டிகலான பெண்ணாக தடாலடியாக வரும் அஞ்சலி அப்பாவியான ஜெய்யை ரொம்பவே இம்சிக்கிறார். ஆனாலும் ஆனந்த இம்சை. படம் முழுவதும் அஞ்சலியை ஜெய் ‘நீங்க’ ‘வாங்க’ என்று அழைப்பதும் அஞ்சலி ஜெய்யை ஏகவசனத்தில் அழைப்பதும் அழகாகவே உள்ளது. நேர்முகத் தேர்வுக்கு திருச்சியில் இருந்து சென்னைக்குப் புதிதாக வரும் அனன்யா வழியில் உதவி செய்யும் ஷர்வானந்த் மீது முதலில் சந்தேகமும் பின்பு வழக்கம்போல் காதலும் கொள்கிறார்.ஒரே நாளில் காதல் மலருமா என்று நமக்கு இயல்பாக எழும் கேள்வியை கதாபாத்திரம் மூலமே எழுப்பி இன்னொரு கதாபாத்திரம் மூலமே விடையளிக்க வைத்தது இயக்குனரின் சாமர்த்தியம். படத்தில் தனியாக காமெடி டிராக் இல்லை. இவர்களைக் கொண்டே நகைச்சுவையைப் படம் முழுதும் இழைய விட்டுருக்கிறார் இயக்குனர். அஞ்சலி கிடைத்த பந்துகளில் எல்லாம் சிக்ஸர் அடித்து விளாசி ஆச்சரியப் படுத்துகிறார். ஜெய்யும் அபத்தமான ஹீரோயிசம் எதுவும் இன்றி இயல்பாக நடித்துள்ளார். ஷர்வானந்த் மற்றும் அனன்யாவும் நிறைவாக நடித்துள்ளனர்.

ஒரு பாடலைத் தவிர அனைத்து பாடல்களும் மாண்டேஜ் பாடல்கள். கதையுடனும் காட்சிகளுடனும் நகரும் பாடல்கள்தான் எப்போதும் என் சாய்ஸ். பாடல்கள் மனதில் பதியாவிடினும் காட்சிகள் பதிந்து விடுகின்றன. படத்தின் பாடல்களை விட அதிகம் ஈர்த்தவை பேருந்தில் ஒலிக்கும் இளையராஜா பாடல்கள்தான். ஆரண்ய காண்டம் போல் இதிலும் பின்னணியில் ராஜாவின் பாடல்கள் வரும் இடங்களில் நம்மையும் அறியாமல் உதடுகள் அப்பாடல்களை முணுமுணுக்க ஆரம்பித்துவிடும். மெதுவாக செல்ல ஆரம்பித்திருக்கும் பேருந்தில் ஸ்வர்ணலதாவும் எஸ்.பி.பி.யும் இணைந்து ‘எ/உன்னைத் தொட்டு’ என்று பாடும்போது நாமும் அந்தப் பேருந்தில் பயணிக்க ஆரம்பித்து விடுகிறோம். Characterization-ல் மிகுந்த அக்கறை எடுத்துள்ளார் இயக்குனர். சிறு கதாபாத்திரம் கூட மனதில் பதிந்து விடுகிறது. பேருந்தில் அம்மாவைத் தூங்கவிடாத குழந்தை முதல் ஃபோனில் முகம் தெரியாதவரிடம் ‘சாப்டீங்களா?’ என்று கேட்கும் முகம் காட்டாத குழந்தை வரை கச்சிதம். மனைவியைப் பிரிய மனமின்றி அவளுடனே பேருந்தில் வரும் கணவன் பாத்திரம் மட்டும் செயற்கையாக திணிக்கப் பட்டதுபோல் இருக்கிறது. ஒளிப்பதிவாளர் வேல்றாசும் படத்தொகுப்பாளர் கிஷோரும் இயக்குனருக்குப் பக்க(கா) பலம். சத்யாவின் இசை நிறைவு.

ஆரம்பக் காட்சியே வாகன விபத்து காட்டப்பட்டதும் Alejandro González Iñárritu-ன் அமோரேஸ் பெர்ரோஸ், 21 Grams போன்ற படங்களின் தாக்கத்தில் உருவானது என யூகித்து விடலாம். ஆனால் அதன் தாக்கத்தில் மணிரத்னம் இயக்கிய ‘ஆய்த எழுத்தை’ விட நன்றாக உள்ளது. காரணம் அதிக சிக்கல் இல்லாத தெளிவான திரைக்கதை. பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளைப் புள்ளிகளாக்கி, திரைக்கதை என்ற கோடு மூலம் அவர்களை இணைத்து, கதாபாத்திரங்களின் இயல்பான நடிப்பு, மிக யதார்த்தமான வசனங்கள், அற்புதமான ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, நிறைவான இசை போன்ற வண்ணங்கள் கொண்டு அழகிய திரைக்கோலமிட்டுள்ள இயக்குனர் சரவணன் நம்பிக்கை அளிக்கிறார். எங்கேயும் எப்போதும் கவனம் தேவை என்று சொல்லி நம் கவனத்தை ஈர்க்கிறார். குடும்பத்துடன் சென்று நிச்சயம் பார்க்கலாம்.

பி.கு: ஈரோட்டில் இதுவரை படம் முடிந்ததும் மக்கள் கைதட்டி நான் பார்த்ததில்லை. இயக்குனருக்கு ‘ஓ’ கூட போட்டார்கள்!

 
1 Comment

Posted by on September 22, 2011 in Movie Reviews, Movies

 

தெய்வத்திருமகள் – An Indianized Pizza

Disclaimer: 21.7.2011 அன்று Google Buzz-ல் எழுதியது. படம் வெளியாகி பலரும் பார்த்துவிட்ட நிலையில் சில காட்சிகளைக் குறிப்பிட்டு இப்பதிவில் சேர்த்துள்ளேன்.

‘அமெரிக்காக்காரனுக்கு சாப்பிட ப்ரெட் பட்டர் இருந்தா போதும். நம் ஆட்களுக்கு சாம்பார், ரசம், கூட்டு, பொறியல், அப்பளம் ஊறுகாய் என்று சகலமும் வேண்டும்’ என்று சுஜாதா சொன்னார். நம் மக்கள் நூடுல்ஸ், பீட்ஸாவைக் கூட கரம் மசாலா, கொத்துமல்லி கறிவேப்பிலையுடன்தான் சாப்பிட விரும்புகின்றனர். உணவு வகைகளை Authentic-ஆக சாப்பிடப் பிடித்தவர்களுக்கு அவ்வாறு சாப்பிடப்பிடிக்காது. தெய்வத்திருமகள் படமும் ஒரு Indianized Pizza போலதான் இருக்கிறது.

I am Sam பார்ப்பதற்கு முன் இதைப் பார்த்திருந்தால் நானும் எல்லோரைப் போலவும் நெகிழ்ந்து, கண்ணைக் கசக்கி, அழுது சிலாகித்திருப்பேன் – கிகுஜிரோவுக்கு முன் பார்த்த நந்தலாலாவைப் போல. எந்தவித முன் தீர்மானமுமின்றி பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தும் முடியாமல் போனது. குழந்தைக்கு ஷூ வாங்கும் காட்சி, விக்ரமின் நண்பர்கள் கோர்ட்டில் சாட்சி சொல்லும் காட்சி போன்றவற்றை அப்பட்டமாகக் காப்பியடித்து மற்ற காட்சிகளை சாமர்த்தியமாக மாற்றிவிட்டார் இயக்குனர். திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்தது சற்று ஆறுதலளித்தது. இறுதியில் நாயகனும் நாயகியும் சேர்ந்தே ஆக வேண்டும் என்ற தமிழ் சினிமா ஃபார்முலாவை உடைத்தெறிந்ததற்காக இயக்குனரைப் பாராட்டலாம். நிலாவாக நடித்திருக்கும் கொள்ளை சாரா அழகாலும் அபாரமான நடிப்பாலும் நம் மனத்தைக் கொள்ளை கொள்கிறாள். நிலாவைப் பற்றி நண்பர் கார்க்கியின் பதிவு

அவன் இவன் படம் பார்த்து விஷாலுக்கு தேசிய விருதுக்குப் பரிந்துரைத்தவர்கள் இப்போது விக்ரமுக்குப் பரிந்துரைக்க ஆரம்பித்து விட்டனர். விக்ரம் நன்றாக நடித்திருக்கிறார். ஆனால் I am Sam-ல் ஷான் பென் நடித்தது போலவே தெரியாது. அதுதான் ஹாலிவுட்டுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம். சில செயற்கையான சினிமாத்தனமான காட்சிகள் எரிச்சலூட்டுகின்றன. நாசர் மகனுக்கு விக்ரம் மருந்து வாங்கித் தரும் காட்சி எரிச்சலின் உச்சக்கட்டம். மென்சொகத்தைப் பிழிய வேண்டுமென்றே இதுபோல் பல காட்சிகள் திணிக்கப்பட்டுள்ளன.

தேவையே இல்லையென்றாலும் ‘விழிகளில் ஒரு வானவில்’ பாடலும், பிக்ச்சரைசேஷனும் அருமையோ அருமை! (அனுஷ்காவும் ;-)). அதேபோல் ‘கத சொல்லப் போறேன்’ பாடல் ஒரு குழந்தையின் கண்ணோட்டத்தில் படமாக்கி இருப்பது நன்றாக இருந்தது. I am Sam-ல் இல்லாத மூன்று நல்ல விஷயங்கள் தெய்வத்திருமகள்-ல் இருக்கின்றன – அனுஷ்கா, அமலா பால், சந்தானம். விஜய் அவார்ட் நிகழ்ச்சியில் சந்தானம் தனது காட்சிகள் அனைத்தும் ஆண்களுடனே இருப்பதாக வருத்தப் பட்டார். ஆனால் இதில் படம் முழுவதும் அனுஷ்காவுடனேயே வருகிறார்.

இரண்டு அழகான கதாநாயகியர் இருந்தும் கவர்ச்சிப் பாடல்கள் இல்லை விக்ரமுக்கு சண்டைக் காட்சிகள் இல்லை, சந்தானத்துக்கு தனி காமெடி ட்ராக் இல்லை. குடும்பத்துடன் சென்று பார்க்கும்படியான படம் தந்ததற்காக விஜய்க்கு மீண்டும் பாராட்டுகள். அதே சமயம் ஆடுகளம், ஆரண்ய காண்டம், போன்ற படங்கள் வந்து நம் ரசனையை மேலெழுப்பி அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்கையில், Melodrama, Sentiment என்று சோகத்தைப் பிழிந்து அழவைத்தால்தான் மக்கள் ரசிப்பார்கள் என்று நம் ரசனையை வளர விடாமல் மட்டுப் படுத்துவது ஒரு சினிமா ஆர்வலனாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

பின்குறிப்பு: வெகு சில அயல் சினிமாக்களைப் பார்த்த எனக்கே திருப்தியில்லாதபோது ஒலக சினிமா ரசிகர்களுக்கு எப்படி இருக்குமோ தெரியவில்லை 🙂

 
Leave a comment

Posted by on July 28, 2011 in Movie Reviews, Movies

 

180 – நூற்றெண்பது

சில படங்கள் பாடல்களுக்காகவே பார்க்கத் தூண்டும். சென்ற வருடம் பையா படம் அப்படித்தான் கதையே இன்றி பார்க்க நேர்ந்தது. இந்த வருடம் எங்கேயும் காதலைத் தொடர்ந்து 180. (நூற்றெண்பது என்று தலைப்பை மாற்றியது பிடிக்கவில்லை) எங்கேயும் காதல் பார்ப்பதற்கு முதல் நாள் ‘வானம்’ படத்தின் இடைவேளையில் 180 trailer பார்த்து பிரமித்து விட்டேன். அதி அற்புதமான ஒளிப்பதிவுதான் காரணம். ‘மணிரத்னம் படமா?’ என்று அம்மா சந்தேகமாக கேட்டார். அதுவே படத்திற்கு மிகப் பெரிய பிளஸ். ஆனால் அடுத்த நாள் எங்கேயும் காதல் பார்த்து நொந்து போனதால், 180-௦க்கு ஒளிப்பதிவு பாடல்களைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்கக் கூடாது என்று முடிவு செய்தேன். சத்யம் திரையரங்கின் கூட்டுத் தயாரிப்பு என்பதால் சத்யம்-ல் தான் பார்க்க வேண்டும் என்று முதல் நாள் முதல் ஷோ பதிவு செய்தேன். நான் எதிர்பார்த்த இரண்டு விஷயங்கள் நிறைவைத் தந்ததால் படம் பெரிய ஏமாற்றம் அளிக்கவில்லை.

சமீபமாக தமிழ் சினிமாவில் யதார்த்தம் என்ற பெயரில் சவரம் செய்யாத முகம், பரட்டைத் தலையுடன் இருக்கும் அழுக்குக் கதாநாயகர்களைக் காட்டி, மதுரையைக் களமாகக் கொண்டு அரிவாள், கத்தி, ரத்தம், வன்முறை, பஞ்ச டயலாக், என்றெல்லாம் காட்டி உயிரை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். அவற்றிலிருந்து மிகப் பெரிய ஆறுதல் இப்படம். சென்னையில் உயர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அழகான நாயகன் நாயகியைப் பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. விண்ணைத்தாண்டி வருவாயாவிற்குப் பிறகு, சொல்லப்போனால் அதைவிட கலர்ஃபுல்லான அட்டகாசமான ஒளிப்பதிவுடன் மிகுந்த அழகியல் தன்மையுடன் உள்ளது இப்படம். அதற்காகவே இயக்குனர் ஜெயேந்திராவைப் பாராட்டலாம். ராஜீவ் மேனன் போல் இவரும் விளம்பரப் படங்களை இயக்கியுள்ளார் என அறிகிறேன்.

தான் ஆறு மாதத்தில் (நூற்றெண்பது நாட்களில்) இறந்து விடுவோம் தெரியும் ஒருவன், நேற்றைப் பற்றி யோசிக்காமல், நாளை பற்றி கவலைப் படாமல், இன்று, இப்போது ஒவ்வொரு கணங்களையும் சந்தோஷமாக கழிக்கிறான். இதுதான் படத்தின் ஒன்லைன். பல நாட்களுக்குப் பின் தமிழில் சித்தார்த். கச்சிதமாகப் பொருந்துகிறார். நாயகி நித்யா மேனனும் இளம் பெண் பத்திரிகையாளர் பாத்திரத்திற்கு பாந்தமாக இருக்கிறார். இவருக்கு அழகான பேசும் கண்கள். கேரளா கஃபே என்ற மலையாளப் படத்தில் பத்து குறும்படங்களுள் ஒன்றில் ஜெகதியுடன் பஸ்ஸில் கலாய்க்கும் ஒரு குறும்புப் பெண்ணாக நடித்தபோதே கவர்ந்தார். இதில் சற்று பூசினாற்போல் இருக்கிறார். இப்படி இருந்தால்தான் தமிழ் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்று யாராவது சொல்லி விட்டார்களா? பல காட்சிகளில் அன்தஹீன் என்ற பெங்காலிப் படத்தில் நடித்த ராதிகா ஆப்தேவை நினைவு படுத்துகிறார். இன்னொரு கதாநாயகியாக வரும் ப்ரியா ஆனந்த் ‘லீடர்’ படத்தில் செய்த துரு துரு பெண் கதாபாத்திரத்தில் வந்து உயரம் குறைவாக இருந்தாலும் தம் பாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். மௌலி, கீதாவும் வந்து போகிறார்கள்.

படத்தின் முக்கிய இரு நாயகர்கள் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் மற்றும் இசையமைப்பாளர் ஷரத் மதன் கார்க்கியின் பாடல் வரிகளையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். கடைசியில் வரும் போர்ச்சுகீசியப் பாடலுக்கும் சேர்த்து. உவேசுலா ஊது, சந்திக்காத கண்களில், நீ கோரினால் பாடல்கள், ஏஜே பாடல்கள் படமாக்க பட்ட விதம் அருமை. பாலசுப்ரமணித்திற்கு படத்தைப் போலவே வண்ணமயமான எதிர்காலம் இருக்கிறது. காட்சிகள் ஒவ்வொன்றையும் கண்களில் ஒற்றிக் கொள்ளலாம். Crystal Clear! ஹாசினி பேசும் படம் நிகழ்ச்சியில் வந்தால் சுஹாசினி கொண்டாடி விடுவார். பாடல்களில் கவர்ந்த ஷரத் பின்னணி இசையில் அவ்வளவாக கவரவில்லை.

கண்களுக்கும் காதுகளுக்கும் ராஜபோக விருந்தளித்த இயக்குனர் கதை திரைக்கதை விஷயத்தில் பத்திய சாப்பாடு போட்டுவிட்டார். மிகவும் சாதாரண கதை, தொய்வான திரைக்கதை படத்தின் மைனஸ். ‘அயன்’, ‘கோ’ படங்களுக்கு விறுவிறுப்பான திரைக்கதை, வசனம் எழுதிய எழுத்தாளர்கள் சுபா இதில் கோட்டை விட்டது வருத்தமாக உள்ளது.
சில காட்சிகள் கிங், ஓய் படங்களை நினைவு படுத்துகின்றன. மெஸ் வைப்பது, ஒரே பாடலில் குழந்தைத் தொழிலாளர்களுக்கு கல்வி அளிப்பது என்று நாகடத்தனமான விக்ரமன் பாணி காட்சிகள் சகிக்க முடியவில்லை. இரண்டாம் பாதி ஆரம்பித்ததும் முதல் பாதியே பரவா இல்லை என்றாகி விட்டது. ஒரு மருத்துவர் தம் உடல்நிலையைப் பற்றி அறிந்தால் இவ்வளவு பாதிக்கப் படுவாரா? எமனாக ஒரு கோட் அணிந்த நீக்ரோவைக் காண்பிக்கின்றனர். அவைதான் படத்தின் மிகப் பெரிய காமெடிக் காட்சிகள்.

பாடல்கள் மற்றும் ஒளிப்பதிவில் இருந்த புதுமை காட்சிகளில் இருந்து கொஞ்சம் சுவாரசியம் கூட்டியிருந்தால் நிச்சயம் ரசித்திருக்கலாம். நல்ல வேளையாக இறுதிக் காட்சி அழுவாச்சியாக இல்லாமல், இரண்டு நாயகியரில் ஒருவருடனும் சேராமல் பாசிட்டிவாக முடிக்கப் பட்டது சற்று ஆறுதலளித்தது. ஆனால் ஒரு காட்சியில் ஆறு மாதம் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. படத்தின் தலைப்பு Justify செய்யப்படவில்லை அட்டகாசமான ஒளிப்பதிவுக்காகவும் பாடல்களுக்காகவும், திரையரங்கு முழுதும் விசிலடித்து ஆரவாரம் செய்யும் சித்தார்த் ரசிகைகளை சைட் அடிப்பதற்காகவும் படத்தை ஒரே ஒரு முறை பார்க்கலாம். இல்லாவிட்டாலும் தீபாவளிக்குள் விஜய் டிவியில் ஒளிபரப்பினால் பார்க்கலாம்! சென்னை வாசிகள் சத்யம்/எஸ்கேப் திரையரங்குகளில் பார்த்தால் தெள்ளத் தெளிவான ஒளிப்பதிவை ரசிக்கலாம்.

 
2 Comments

Posted by on June 26, 2011 in Movie Reviews, Movies

 

ஆரண்ய காண்டம் – சுந்தர காண்டம்

Disclaimer: படம் பார்க்காதவர்கள் இதைப் படிக்க வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.

பொதுவாக எனக்கு ஆக்ஷன்/வன்முறை அதிகமுள்ள திரைப்படங்கள் பிடிக்காது. நாயகன், தளபதி விதிவிலக்குகள் . தமிழர்களால் அதிகம் ரசிக்கப்படும் ஹாலிவுட் ஆக்ஷன் படங்களான டெர்மினடர் போன்ற படங்களைக் கூட பார்க்கமாட்டேன். ‘காக்க காக்க’ படத்தைக் கூட சூர்யா-ஜோதிகா காதல் காட்சிகள் மட்டுமே பார்ப்பேன். ஒரு நாள் எதேச்சையாக நண்பனின் மடிக்கணினியில் வெகு நாட்களாக பார்க்காமலிருந்த ‘புதுப்பேட்டை’ மற்றும் ‘அஞ்சாதே’ படங்களைப் பார்த்து ஸ்தம்பித்துவிட்டேன். அதிலிருந்து ஆக்ஷன் கம் ட்ராமா படங்களைப் பார்க்க ஆரம்பித்தேன். டிரெய்லர் வந்ததிலிருந்தே ஆரண்ய காண்டம் ஓர் எதிர்பார்ப்பை உண்டாக்கியது. சர்வதேச விருது பெற்ற படம் என்றபோது இன்னும் கூடியது. கடந்த ஆறு மாதங்களாக காத்திருக்கும் ஒரு படம். தணிக்கைக் குழுவின் கத்திரிக்குப் மிகுந்த Work Pressure கொடுத்து எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துவிட்டு சற்று தாமதமாக வந்தாலும் It’s Worth the Wait!

ஆரண்ய காண்டம் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு சுரேஷ் கண்ணன் ‘தமிழ் சினிமாவின் மஞ்சள் நீராட்டு விழா’ என்று தமது Buzz-ல் தெரிவித்திருந்தார். ஆம் தமிழ் சினிமா இதுபோன்ற முயற்சிகளால் முதிர்ச்சி பெற்று வயதுக்கு வந்துவிட்டது! முதிர்ச்சி என்பது வயதில் இல்லை என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். பக்குவப்பட்ட ரசிகர்களுக்கானது. வழக்கமான சினிமாவின் சூத்திரங்களை சுக்கல் சுக்கலாக்கி புதியதொரு அனுபவத்தைக் கொடுத்தது. சற்றே வித்தியாசமான Gangster படம். படத்தில் நல்லவர்களே இல்லை எனலாம். ஹீரோ, ஹீரோயின், வில்லன், காமெடியன் என்று எவரும் இல்லை. அனைவரும் கதாபாத்திரங்கள்! அதிலும் வில்லன்கள். அதிபயங்கர டெசிபெல்லில் அலறும் வில்லன்களைப் பார்த்து பழகிப்போன நமக்கு மணிரத்னம் படத்தில் பேசுவதுபோல் பேசும் இந்த வில்லன்கள் மிகுந்த ஆறுதல் அளிக்கின்றனர். ஏகப்பட்ட கெட்ட வார்த்தைகள் இருந்தாலும், Raw-வாக, யதார்த்தமாக இருக்கிறது.

முதல் காட்சியே தமிழ் சினிமா கண்டிராத ஒரு காட்சி. தான் கட்டாயப் படுத்தி ‘வைத்திருக்கும்’ பெண் சுப்புவுடன் (யாஸ்மின் பொன்னப்பா) முழுமையாக சல்லாபிக்க முடியாத ஒரு முக்கால் கிழட்டு தாதா சிங்கம்பெருமாள் (ஜாக்கி ஷ்ராஃப்) அவளை அடித்துத் துன்புறுத்துகிறான். வெளியில் அவரது அடியாட்கள் Auntyகளை மடக்குவது எப்படி என்று சுவாரசியமாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். சிங்கம்பெருமாளின் பிரதான சிஷ்யனான பசுபதி (சம்பத்) அவருக்கு வயதாகிவிட்டதால் (டொக்கு ஆகிவிட்டதென்று சொல்லப்படுகிறது) தான் ரிஸ்க் எடுத்து தனியாக வியாபாரத்தை ஆரம்பிப்பதாகக் கூறியதும், இருவருக்கும் ஈகோ மோதல் ஆரம்பமாகிறது. பசுபதியிடம் தனியாக ஆரம்பிக்கச் சொல்லிவிட்டு அவனைப் போட்டுத் தள்ளி அவன் கடத்திய போதை மருந்தை எடுத்து வர தன் ஆட்களை அனுப்புகிறான். சேவல் சண்டை மூலம் பணம் பெற்று தன் கடனை அடைக்க கிராமத்திலிருந்து வரும் ஒரு அப்பா மகன் ஜோடியிடம் அந்த போதை மருந்து கிடைக்கிறது. போதை மருந்தைத் தேடிவரும் கஜேந்திரன் (ராம்போ ராஜ்குமார்) என்ற இன்னொரு தாதாவின் கும்பல் இருவரையும் துரத்துகிறது. இதற்கிடையில் சிங்கம்பெருமாளின் நம்பிக்கையைப் பெற்ற காயடித்த காளை போலிருக்கும் அடியாள் சப்பையும் (ரவி கிருஷ்ணா) அவரது கீப் சுப்புவும் சேர்ந்து அவரை ஏமாற்றி பணத்தை எடுத்து மும்பை செல்ல திட்டமிடுகின்றனர்.இறுதியில் என்ன ஆகிறது என்பதை விறுவிறுப்பான திரைக்கதையால் சொல்லி அசத்தலான ஓர் அனுபவத்தைத் தந்திருக்கிறார் அறிமுக இயக்குனர் குமாரராஜா.

முதலில் தயாரிப்பாளர் எஸ்.பி.சரணுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள். சென்னை-28, குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும், நாணயம் போன்று தொடர்ந்து பல வித்தியாசமான முயற்சிகளைத் தயாரித்து புதியவர்களுக்கு ஆதரவளித்து தமிழ் சினிமாவில் ஓர் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தியுள்ளார். அடுத்து அறிமுக இயக்குனர் குமாரராஜா. ‘ஓரம்போ’ படத்தின் வசனகர்த்தா. (புதுமையான முயற்சி என்று பலரும் சொல்லியும் இன்னும் நான் அப்படத்தைப் பார்க்கவில்லை)இதிலும் வசனங்கள் நறுக்குதெரித்தாற்போல் இருக்கின்றன. அன்றாட வாழ்வில் பேசப்படும் வசனங்களைக் கொஞ்சம் மெருகூட்டியிருக்கிறார். “சப்பையும் ஒரு ஆம்பளைதான், எல்லா ஆம்பளைங்களும் சப்பைதான்”, “உன் அப்பாவை உனக்கு ரொம்ப பிடிக்குமா? அப்படியில்ல..ஆனா அவர் என் அப்பா..”; “மவனே! நீ மட்டும் உயிரோட இருந்தே உண்ணக் கொன்னுருப்பேண்டா” போன்று விசிலடிக்க வைக்கும் வாசனைகள் மூலம் சிக்ஸர் அடிக்கிறார் குமாரராஜா!

பின் கனக்கச்சிதமான பாத்திரத் தேர்வு. ஜாக்கி ஷ்ராஃபை எப்படி தேர்ந்தெடுத்தார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. ரங்கீலாவில் பார்த்தவரா இவர்! வசனத்தை விட உடல்மொழியிலேயே அதிகம் பேசுகிறார்! நல்ல வேளை! பிரகாஷ் ராஜைத் தேர்வு செய்யாமல் இருந்தவரை நிம்மதி. சம்பத் வழக்கம்போல் அருமை. ரவிகிருஷ்ணா 7-ஜிக்குப் பிறகு சொல்லிக்கொள்ளும்படியான ஒரு பாத்திரம். அந்த அப்பா-மகன் ஜோடியை எங்கிருந்து பிடித்தனர்? அதிலும் கொடுக்காப்புள்ளியாக வரும் அந்தச் சிறுவன் Simply Superb! ஒரே உறுத்தல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப் படும் படங்களில் சிறுவர்களை எப்படி நடிக்க வைக்கின்றனர்? அதுவும் தன் அப்பாவிடமே கெட்ட வார்த்தைகள் சரமாரியாக உதிர்க்கிறான்! யாஸ்மின் பொன்னப்பா பெங்களூர் மாடல் என்று படித்தேன். அவர் தன் பங்கைச் செவ்வனே செய்திருக்கிறார். முதலில் பூஜாவை அணுகி பின் இவரைத் தேர்ந்தெடுத்த செய்தியை அறிந்ததும் இவரைக் கொஞ்சம் பிடிக்காமல் போய் விட்டது. Miss you Pooja 😦

படத்தில் கதாநாயகன் இல்லை என்று முதலில் சொன்னேன். திருத்திக் கொள்கிறேன். இரண்டு பிரதான நாயகர்கள் உள்ளனர். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ஒளிப்பதிவாளர் வினோத். அதிஅற்புதமான பின்னணி இசை மூலம் இளையராஜாவின் வாரிசென மீண்டும் நிரூபித்துள்ளார் யுவன். வன்முறைக் காட்சிகளுக்கு ரொமாண்டிக்கான இசையும் ரோமான்ஸின்போது கொஞ்சம் திகிலான இசையும் இழைத்து புதுமை செய்திருக்கிறார். குறிப்பாக கொடுக்காப்புள்ளி பையை மறைத்துவைக்குபோது வரும் பின்னணி இசையும் இறுதியில் பசுபதி மற்றும் கஜேந்திரன் மோதிக்கொண்டு சண்டையிடுமிடத்தில் வரும் பின்னணி இசையும் உலகத்தரம்! படத்தில் பாடல்களே இல்லை. ஆன்னால் பின்னாணியில் ஆங்காங்கே பாடல்கள் ஒலிப்பது, குறிப்பாக இளையராஜாவின் பாடல்கள் ஒலிக்கும்போது பரம சுகம். மணிரத்னம் படமா என்று எண்ணுமளவு அருமையான ஒளிப்பதிவு. நிழல் உலகைக் காட்டுவதால் அதிகம் இருளில் படமாக்கப் பட்டிருக்கிறதோ?

பலரால் சிலாகிக்கப்படும் இத்திரைப்படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. சிங்கம்பெருமாளின் ஆட்களிடமிருந்து தப்பித்து ஓடும் பசுபதி, அவரது மனைவிக்கு ஆபத்து என்று தெரிந்தும் அவருக்கு ஒரு ஃபோன் செய்து எச்சரிக்காமல் இருப்பது பெரிய குறை. அவர் தப்பிச் செல்ல பைக் கிடைத்தது போல் காட்டுவதில் இருந்த கவனம் இதில் செலுத்தியிருக்க வேண்டாமா> அட்லீஸ்ட் அவர் மொபைலுக்கு அழைக்க முயற்சி செய்து ‘Not Reachable’/’Switched off’ என்று வருவது போலாவது காட்டியிருக்கலாம். உயிருக்கு பயந்து ஓடும் பசுபதி ஓட ஓட புத்திசாலித்தனமான முடிவுகள் எடுப்பதைக் கூட ஓரளவு ஒத்துக்கொள்ளலாம் ஆனால் இறுதிச் சண்டைக் காட்சியில் அவனுக்கு ஒன்றுமே ஆகாமல் அசால்ட்டாக கஜேந்திரனைப் போட்டுத் தள்ளுவது எல்லாம் கொஞ்சம் நெருடுகிறது.இருந்தாலும் படம் முடிந்ததும் மனதுக்கு ஒரு நிறைவைத் தருகிறது.

க்வெண்டின் டாரண்டினோ படத்தைத் தமிழில் பார்த்ததுபோல் இருந்தது. Guy Ritchie படங்களை இதனுடன் ஒப்பிடுகின்றனர். ஆனால் நான் அவரது படங்களைப் பார்த்ததில்லை. பார்க்கும் எண்ணம் தோன்றியிருக்கிறது. ஹிந்தியில் அனுராக் காஷ்யப் படங்களைப் பார்த்து வியந்திருக்கிறேன். Cliche கதைகளில்கூட ஒரு Niche plot இருக்கும். அதுபோல் க்ளீஷேவான தாதா கதையில் (சொல்லப்போனால் கதையே இல்லை, வெறும் திரைக்கதை மட்டும்தான்) புதுமையான விஷயங்களைப் புகுத்தி பார்வையாளர்களை புத்திசாலிகளாக எண்ணிய இயக்குனருக்கு Hats Off!
நல்லதொரு படம் பார்த்து மனதுக்கு மிக நிறைவாய் இருந்தது. ஆனால் நான் வழக்கமாக படம் பார்க்கும் நண்பர்களுடன் பார்க்க முடியாததால் தனியாக பார்த்து அவர்களை மிகவும் மிஸ் செய்தேன் 😦

ஆரண்ய காண்டம் – ஆகா 🙂

ஆரண்ய காண்டம் படத்தின் பின்னணி இசைத்துணுக்குகளைத் தரவிறக்கம் செய்து கேட்கவும் http://www.backgroundscore.com/2011/06/aaranya-kaandam-background-score.html

 
1 Comment

Posted by on June 17, 2011 in Movie Reviews, Movies

 

KO – Just கோ for it

வாரம் ஒரு படம் பார்த்துக் கொண்டிருந்த என்னை. உலகக் கோப்பை, தேர்தல் போன்றவை இரண்டு மாதங்களாக பட்டினி போட்டுவிட்டன. அப்படியோர் அகோரப் பசியில் இருந்த எனக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் கிடைத்த Continental Delight – கோ. படம் அவ்வளவு Rich & Colourful ஆக உள்ளது. முதல் பந்திலேயே சிக்சர் அடித்து விசில் போட வைத்துவிட்டார் இயக்குனர். ரஜினி, கமல், இளையராஜா, ஜெயகாந்தன், சச்சின், டோனி என அமர்க்களமான ஸ்டில் புகைப்படங்கள் டைட்டிலிலேயே அசத்திவிட்டார். நல்ல ஒரு Appetizer போல் பசியை மேலும் கிளப்பி விட்டது.

ஜீவா ஒரு புகைப்பட நிருபர் என்று அனைவரும் அறிந்ததே. முதல்வன் அர்ஜுனின் நினைவு வருவதைத் தடுக்க முடியவில்லை. முடிந்தவரை தன் தனித்தன்மையை வெளிப்படுத்திருக்கிறார் ஜீவா. அவருடன் சினிமா செய்திகள் எழுதும் பியா அவரை ஒருதலையாக காதலிக்கிறார். வி.தா.வா வில் கௌதம் மேனனின் படங்களைப் பரிகாசம் செய்வது போல் இதிலும் கே.வி.ஆனந்தின் முந்தைய படத்தை பரிகாசம் செய்து ஒரு வசனம் பேசுகிறார் பியா.
அரசியல் செய்திகள் எழுதும் ஒரு துணிச்சலான நிருபராக அவர்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் சேர்கிறார் கார்த்திகா. வழக்கமான சினிமா ஃபார்முலாவின்படி ஜீவாவுக்கும் கார்த்திகாவுக்கும் காதல் மலர்கிறது. ஆனால் பியாவின் காதல் அறிந்து கார்த்திகா விலக முயல்கிறார். ‘குவியமில்லாக் காட்சிப் பேழை’ என்று மதன் கார்க்கியின் அற்புதமான சொல்லாடலுக்குப் பொருத்தமாக அமைந்திருந்தன அந்த மாண்டேஜ் ஷாட்டுகள்.

அஜ்மலும் அவரது நண்பர்களும் அரசியலில் நுழைந்து ஊழலை ஒழித்து நல்லாட்சியைத் தரும் ஆர்வத்தில் முதல்வர் பிரகாஷ் ராஜ் (இருவர் தமிழ்செல்வன் Version 2.0) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் கோட்டா சீனிவாச ராவ் (நல்ல வேலையாக பெண் கதாபாத்திரம் இல்லை) இருவரையும் எதிர்த்து தேர்தலில் போட்டியிடுகின்றனர். (ஆய்த எழுத்து சூர்யா). அஜ்மல் தாக்கப் படுகிறார். பின் அவர் பேசும் மேடையில் வெடிகுண்டு வெடிக்கப்படுகிறது. அதனால் வெறுத்துப் பொய் தேர்தல் வேண்டாம் என்று ஒதுங்கும் அஜ்மலுக்கு ஜீவா ஆறுதலளித்து நிற்க வைக்கிறார். இளைஞர்கள் ஜெயிக்கின்றனரா என்பது பல சுவாரஸ்ய திருப்பங்கள் கொண்ட கிளைமாக்ஸ். இறுதியில் வரும் சண்டைக் காட்சிகளும், ஒளிப்பதிவும் A1. இந்தப் படம் மட்டும் தமிழகத் தேர்தலுக்கு முன் வெளியாகியிருந்திருந்தால் பல சலசலப்புகள் ஏற்பட்டிருக்கும்.

படத்தின் பெரிய பலங்கள் விறுவிறுப்பான திரைக்கதை, ஒளிப்பதிவு (இம்முறை கே.வி. ஆனந்த் ஒளிப்பதிவு செய்யாமல் ரிச்சர்ட் எம். நாதன் என்பவர் பிரமாதப் படுத்தி இருக்கிறார்), படத்தொகுப்பு (படத்தொகுப்பாளர் ஆண்டனி ஒரு காட்சியில் வருகிறார், வசனங்கள். ஐஃபோன், டேட்டா கார்ட், மேக்புக், பென் டிரைவ் என்று தொழில்நுட்ப வளர்ச்சியை மிகச்சிறப்பாக உபயோகப் படுத்தியுள்ளனர். குறிப்பாக இறுதிக் காட்சியில் 3G வீடியோ கால். ஜீவா தன் பாத்திரத்தை உணர்ந்து underplay செய்திருக்கிறார். ஜீவாவுக்கு இணையான மிகவும் பொருத்தமான கதாபாத்திரம் அஜ்மலுக்கு. அஞ்சாதேவிற்குப் பிறகு அசத்தியிருக்கிறார். இரண்டு கதாநாயகிகள் இருந்தும் அவர்களை ஊறுகாய் ஆக்காமல் நல்ல ஸ்கோப் உள்ள கதாபாத்திரங்கள் தரப்பட்டிருக்கின்றன. புதுமுகம் கார்த்திகா (என்ன ஹைட்) துணிச்சலான பெண் நிருபர் பாத்திரத்திற்குக் கச்சிதமாக பொருந்துகிறார்.ஆளை விழுங்கும் கண்களும் வில்லினையொத்த புருவங்களும் நிறைய பேசுகின்றன. (எனக்கு அந்தக் காலத்து மாதவியின் புருவங்கள் மிகவம் பிடிக்கும் :-)). சில கோணங்களில் அப்படியே ராதா. இருந்தாலும் ராதும்மா மாதிரி வராதும்மா. பியா இதிலும் நூடுல்ஸ் தலை, அரைகுறை ஆடைகளுடன் வருகிறார். ஆனால் செல்ல ராட்சசியாக நன்றாக நடித்திருக்கிறார். பிற்பாதியில் இவரால்தான் கதையே நகர்கிறது. நல்ல வேளையாக அஜ்மலுக்கு ஜோடியாக்கி டூயட் பாட வைக்கவில்லை 🙂

பாடல்கள் வெளிவந்த புதிதில் என்னமோ ஏதோ தவிர என்னக்கு எதையும் பிடிக்கவில்லை. அனால் காட்சிப்படுத்திய விதம் அற்புதம். முதல் பாதியின் பாடல்கள் நம்மை இருக்கையோடு கட்டிப் போட்டு விடுகின்றன. அக நக பாடலில் சூர்யா, கார்த்தி, தமன்னா, ஜெயம் ரவி, மிர்ச்சி சிவா, அப்பாஸ், இயக்குனர் சசிக்குமார், ஜெய், பரத், க்ரிஷ், அதர்வா, அனுஜா ஐயர் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே ஆடியிருக்கிறது. இவர்களுடன் ஹாரிஸ் ஜெயராஜும், மதன் கார்க்கியும் கூட வருகிறார்கள். என்னமோ ஏதோ பாடல் பற்றி முதலிலே சொல்லிவிட்டேன். ஜீவா அதில் uber cool. அமளி துமளி பாடல்களின் லொகேஷன்கள் WOW என்று வாய் பிளக்க வைக்கின்றன. பள்ளத்தாக்குகளின் முகடுகளில் காதலர்கள் ஆடுகையில் எங்கே கீழே விழுவிடுவார்களோ என்று நெஞ்சம் பதைபதைக்கிறது. குறிப்பாக இரண்டு மலைகளுக்கு நடுவே அந்தரத்தில் இருக்கும் பாறை – Marvelous! நெற்றிப் பொட்டில் பாடல் கதையுடன் நகரும் காட்சிகளைக் கொண்டது. ஃபேஸ்புக் ட்விட்டரை எல்லாம் பெரிய திரையில் பார்க்கையில் மனம் குதூகலிக்கிறது. இடைவேளைக்குப் பின் வரும் வெண்பனியே பாடல் பெரிய குறை. எக்ஸ்ப்ரெஸ் வேகத்தில் போய்க்கொண்டிருக்கும் திரைக்கதையில் ஒரு ஸ்பீட் பிரேக்கர். இரண்டாம் இடைவேளை போல் மக்கள் வெளியே போய் விட்டனர். அப்பாடலுக்காக மெனக்கெட்ட கலை இயக்குனரின் உழைப்பு வீணாகிவிட்டது. ஆனால் Frozen in Love என்பதற்கேற்ப அந்தப் பனிச் சிற்பங்கள் கொள்ளை அழகு. அந்தப் பாடலை நீக்கியிருந்தாலோ, வேறு சூழ்நிலையில் அமைதிருந்தாலோ இன்னும் நன்றாக இருந்திருக்கும். கார்த்திகாவிற்கு பின்னணி குரல் கொடுத்த சின்மயிக்கு ஒரு முழுப்பாடல் கொடுத்திருக்கலாம் 😦

கோட்டா சீனிவாச ராவும், பிரகாஷ் ராஜும் ஹை டெசிபெல்லில் அலறாமல், ஓவர் ஆக்க்ஷன் செய்யாமல் இருந்தது பெரிய ஆறுதல். ஜெகன் அயனில் வந்தது போலின்றி கொஞ்சமாக வந்து போகிறார், கொஞ்சம் வெந்தும் போகிறார். போஸ் வெங்கட் இறுதிக் காட்சியில் போற்றும் படியான நடிப்பு. அதேபோல் சன் மியூசிக்கில் Anchorஆக இருந்த காஜல் (எ) தமிழ்ச்செல்வி (மானாட மயிலாட புகழ் Sandy-யின் மனைவி?) ஆச்சரியப் படுத்திவிட்டார். வசனகர்த்தா சுபாவில் சுரேஷ் ஓரிரு காட்சிகளில் தென்பட்டார். அதேபோல் ஜீவாவின் அப்பா அம்மாவாக வரும் ‘பட்டிமன்ற’ புகழ் ராஜாவும், வனிதா க்ருஷ்ணசந்தரும் ஒரே ஒரு காட்சிக்கு மட்டும் வந்து போகின்றனர். பைக்கில் வீலிங் விட்டுக்கொண்டு புகைப்படம் எடுப்பதெல்லாம் கொஞ்சம் ஓவர். யார் கண்ணுக்கும் தெரியாத விஷயங்கள் ஜீவாவிற்கு மட்டும் தெரிகிறது. மென்பொருள் நிறுவனம் போல் இருக்கும் பத்திரிகை அலுவலகம் எங்கு இருக்கிறது?

முதல்வன் ஆய்த எழுத்து போன்ற படங்களை நினைவு படித்தினாலும், தன் விறுவிறு திரைக்கதையால் ஈர்க்கிறார் கே.வி.ஆனந்த். ஹாட் ட்ரிக் அடித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ‘கனா கண்டேன்’ ஹிட் ஆகவில்லை என்றாலும் கூட, மூன்று தரமான படங்களைக் கொடுத்த வகையில் கே.வி.ஆனந்துக்கு வாழ்த்துகள். படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரும் நம்பிக்கையை விதைத்திருக்கிறது.

நானும் ஓர் இதழாளர் ஆகாமல் விட்டேனே என்ற வருத்தம் எஞ்சியது!

 
4 Comments

Posted by on April 24, 2011 in Movie Reviews, Movies

 

நடுநிசி நாய்கள்

25-Feb-2011

Disclaimer: படத்தின் முக்கியமான திருப்பங்கள் முடிச்சுகள் சொல்லப்படவில்லை. கண்டிப்பாக வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கவேண்டும். தயவுசெய்து குடும்பத்தோடு பார்க்கவேண்டாம்.  காதலியுடனோ தொழிகளுடனோ சென்று ஆண்கள் நெளிய வேண்டாம்.

பெயர்க் காரணம்: ‘பசுவய்யா’ என்ற பெயரில் எழுத்தாளர் சுந்தர ராமசாமி எழுதிய கவிதைகளை நடுநிசி நாய்கள் என்ற பெயரில் தொகுப்பாக வெளியிட்டார். மணிரத்னத்தை அடுத்து, தன் படங்களுக்கு தொடர்ந்து தமிழில் அழகாக பெயர்கள் வைக்கும் கௌதம் மேனன் இப்படத்திற்கு இப்பெயரைத் தேர்ந்தெடுத்ததற்கு காரணம் இரவில் கனவில் நாய்கள் வந்தால் கேடுகள் நடக்கும் என்ற நம்பிக்கை. கோவலன் மாதவி வீட்டிற்குச் சென்றபோது கண்ணகியின் கனவில் நாய்கள் குரைத்தன என்று சிலப்பதிகாரத்தில் உள்ளதாம். (ஆனால் படத்தில் யார் கனவிலும் நாய்கள் வரவில்லை)
உபயம்: http://ozeeya.com/ta/hot-news-tamil-archive/4490-2011-02-10-06-50-27

இப்படத்தை பல நாட்களாக எதிர்பார்த்திருந்தேன். முதல் நாள் முதல் காட்சியே பார்க்க வேண்டும் என்பதால் விடுப்பு எடுக்குமாறு நண்பர்களுக்குச் சொல்லியிருந்தேன். ஆனால் படம் வெளியானபோது நான் தில்லியில் இருந்ததால் என்னால் முதல் நாள் பார்க்க முடியவில்லை. அங்கு ரிலீஸ் ஆகவில்லை. ஆடுபுலி என்ற மொக்கைப் படம் கூட அங்கு வெளிவந்திருந்தது.  Worldwide Release என்று டிவியில்  சொல்லிக்கொண்டிருந்த கௌதம் மேனன் மீது கொஞ்சம் கோபம் கூட வந்தது. சென்னை வந்ததும் பார்த்து விட வேண்டும் என்றிருந்தேன். அதனால் இயக்குனரின் பிறந்த நாளான இன்று பார்த்தேன். சென்ற வருடம் Birthday Treat-ஆக விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை அளித்திருந்தார். அது ஃ பைவ் ஸ்டார் ஹோட்டலில் தந்த ட்ரீட் என்றால் இது ஒரு காஃ பி ஷாப்பில் தந்த ட்ரீட். Still it’s a Treat!

படம் வந்த இரண்டே நாட்களில் வழக்கம்போல் அதைப்பற்றி விமர்சித்து கூறு போட்டு விட்டனர் நம் மக்கள். கலாச்சார சீர்கேடு என்றும் படத்தைப் பார்க்காமல் புறக்கணிப்போம் என்றும் அறைகூவல் விடுத்தனர். ஆனால் அந்த அளவுக்கும் மோசமில்லை. எனக்குப் பிடித்திருந்தது. நான் எப்போதும் பார்க்கும் ECR, OMR, IT Express Highway, Sathyam Theater போன்ற இடங்களைப் பார்க்கையில் சந்தோஷமாகவும் இருந்தது.

தொழில்நுட்ப ரீதியில் அனைவரது பாராட்டைப் பெற்றதில் எள்ளளவும் சந்தேகமில்லை. த்ரில்லருக்கே உரித்தான ஒளிப்பதிவும், கோணங்களும் காட்டி ஈரதிற்குப் பின்  மனோஜ் பரமஹம்சா ஈர்த்திருக்கிறார்.  ஆண்டனியின் ஒளிப்பதிவும் வழக்கம்போல் Crisp. ஆனால் Thriller படங்களுக்கு காட்சிகளைவிட திகிலூட்டக் கூடியது பின்னணி இசை. ஒரு திகிலான காட்சி வரும்போது கண்களை மூடிக் கொண்டாலும் அதன் இசை நம்மை பயமுறுத்தும். சிகப்பு ரோஜாக்கள், நூறாவது நாள் போன்ற படங்களின் பின்னணி இசை இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. பள்ளி நாட்களில் அந்த இசையைக் கேட்டாலே பயந்து விடுவேன் இப்படத்தில் பின்னணி இசை இல்லை என்ற குறையே இல்லை. இயற்கையாக வரும் சப்தங்களையே ஒலிப்பதிவு செய்துள்ளனர். அபாரம். நடிப்பைப் பொறுத்த வரை score செய்வது மீனாக்ஷியாக வரும் ஸ்வப்னா அப்ரஹாம் (சின்னத்திரை யுவஸ்ரீ சாயலில் இருக்கிறார்) மற்றும் வீராவாக வரும் வீரா. ஒரு பாடகியான முன்னவரும், உதவி இயக்குனரான பின்னவரும் நிகழ்த்தியிருப்பது அற்புதம். சமீராவும் தம் பங்கைச் சிறப்பாகவே செய்திருக்கிறார். பாலிவுட் படங்களில் ரகசியா ரேஞ்சுக்கு Item song ஆடும் இவரை Dignified மேக்னாவாக மாற்றினார் கௌதம். அதற்கடுத்து இப்படத்தையும் அவர் பெருமையாக சொல்லிக்கொள்ளலாம். இன்ஸ்பெக்டராக வருபவரும் அரவிந்தாக வருபவரும் குறும்படங்களில் நடித்தவர்கள் போல் இருந்தனர்.

கதைகூட பலருக்குப் பிடித்திருந்தது. காட்சிப் படுத்தலும், வசனங்களும், குறிப்பாக Flash Back-க்கும்தான் பலருக்குப் பிடிக்கவில்லை. சிறுவயதில் Child Abuse எனப்படும் பாலியல் கொடுமைக்கு ஆளாகும் ஒருவன் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டு ஒரு சைக்கோ ஆகிறான். பெரிதானதும்  பெண்களுடன் உறவுகொண்டு அவர்களைக் கொல்கிறான். ஏற்கனவே சிகப்பு ரோஜாக்கள் (இயக்குனரே இப்படத்தை சிகப்பு ரோஜாக்களுடன் ஒப்பிடுகின்றார்), மூடுபனி, மன்மதன் போன்ற படங்களில் இதுபோல் வந்துவிட்டதால், சற்று வித்தியாசமான Flash Back-ஐ  இயக்குனர் காட்டியுள்ளார். அதில் காட்டப் படுவதுபோல் இதுவரை நாம் கண்டிராததால் ஆனால் எங்கோ ஒரு மூலையில் நடந்திருக்கிறது என்பதை ஜீரணிக்க முடியவில்லை.

பெண்கள் அனைவரும் இப்படத்தில் வருவதுபோல் இல்லை. இப்படியும் சில பெண்கள் இருக்கின்றனர் என்று காட்டியுள்ளார். சிகப்பு ரோஜாக்களில் கமல் ஒரு Casanova போல் பெண்களை முதலில் மயக்கியபின்தான் உறவு கொண்டு கொல்வார். இதில் பலவந்தமாக சில பெண்களைக் கடத்தி வருகிறான். இயக்குனர் எந்தக் காட்சியையும் திணிக்கவில்லை. பார்வையாளர்களுக்கு கிலியூட்டவே இப்படம் கிளர்ச்சியூட்ட அல்ல. எஸ்.ஜே சூர்யா வாலியில் காட்டியது இயல்பாக இருந்தது. நியூ, அ ஆ படங்களில் காட்டியது கிளர்ச்சிக்காக. (சாருவின் அந்தக் கால மற்றும் இந்தக் கால எழுத்துகள் போல் :-)) இதில் வக்கிரம் என்று காட்டப்படுவது கசப்பான உண்மை.

படங்களில் குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. சிறுவயது வீராவாக வரும் சிறுவன் பெரிய வீரா போலவே இருக்கிறானே என்று ‘அட’ போட்டால், பத்தாவது படிக்கும் பையனாக பெரிய வீரா வருவது பொருந்தவே இல்லை. சமீராவுக்கு வழக்கம்போல் சின்மயி குரல். ஆனால் வசனங்களுக்கு மட்டும். பெரும்பாலான அவரது அலறல்களும் அழுகைகளும்  வேறொருவர் குரல் குரல் போல் ஒலித்தன. (அலறல் கூட இனிமையாய் இருப்பது ஸ்ரீதேவிக்கு மட்டுமே ;-)). இறுதியில் மனநல மருத்துவர் கொடுக்கும் லெக்சர் ஒரு டாக்குமென்ட்ரி போல் ஆகிவிட்டது சிறுவயதுமுதல் பம்பாயில் வளர்ந்த ஒருவன் தமிழ் கெட்ட வார்த்தைகளைவிட ஹிந்தி கெட்ட வார்த்தைகளையே அதிகம் உபயோகிப்பான். கௌதமின் Trade Mark-ஆன சென்னை கெட்ட வார்த்தை சென்னைவாசிகளைப் போல் மற்றவர்களுக்கு அவ்வளவு இயல்பாக, சரளமாக வராது என்பது என் அவதானிப்பு. தர்க்கப் பிழைகளையெல்லாம் சுட்டிக்காட்டுகிறேன்! Buzz என்னை மிகவும் கெடுத்துவிட்டது 😉

ஹாலிவுட் படங்களை சிலாகிக்கும் பலர் அதுபோன்ற முயற்சிகள் தமிழில் வந்தால் ஏற்றுக் கொள்வதில்லை. உண்மையில் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லை. இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு ஒரு Attitude வேண்டும். ‘A’ Certificate கொடுத்த படத்தில் ஆபாசக் காட்சிகள் உள்ளன என்று சொல்வதே முட்டாள்த்தனம். பலர் குடும்பங்களுடன் வந்திருந்தனர், காதலியுடன் வந்திருந்தனர். ஒருவர் மனைவி, பதின்ம வயதில் உள்ள மகனையும் மகளையும் கூடிக்கொண்டு வந்திருந்தார். இவர்களைத்தான் முதலில் கண்டிக்க வேண்டும். இயக்குனரை அல்ல. கைக்குழந்தையை எடுத்துக் கொண்டு வந்திருந்தவரை என்ன சொல்வதென்றே தெரியவில்லை. முக்கியக் கட்டங்களில் எல்லாம் குழந்தை அழுதுகொண்டே இருந்தது.

இந்தப் படத்தை கௌதம் எடுத்ததுதான் பெரிய தப்பு என்பது போலாகிவிட்டது. பாய்ஸ் படத்தை ஷங்கர் எடுத்ததுபோல, கே.பி மன்மத லீலை எடுத்தது போல்! இதையே செல்வராகவன் அல்லது ஓர் அறிமுக இயக்குனர் எடுத்திருந்தால் நிச்சயம் இந்த அளவுக்கு அவதூறுகள் இருந்திருக்காது என நினைக்கிறேன். பாய்ஸ், துள்ளுவதோ இளமை, மன்மதன் போன்ற படங்களில் தேவையின்றி கிளர்ச்சிக்காக திணிக்கப் பட்ட காட்சிகள் இருக்கின்றன. இதில் அப்படி ஒன்றும் எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை எதிர்ப்புகள் வந்ததால் சில காட்சிகளை நீக்கி விட்டார்களா என்று தெரியவில்லை. ஆயிரத்தில் ஒருவன் படத்தை முதல் நாள் பார்த்துவிட்டு இரண்டாம் நாள் பார்க்கும்போது சில காட்சிகள் நீக்கப்பட்டிருந்து எனக்கு பிடித்திருந்தது. முதல் நாள் பார்க்காததன் விளைவுகள் இவை.

சிகப்பு ரோஜாக்கள் வெளிவந்த புதிதில் பாரதிராஜா இதுபோன்ற விமர்சனங்களை எதிர்கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன். 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில் போன்ற படங்களைத் தொடர்ந்து இப்படி ஒரு படத்தை சாதாரண ரசிகர்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்களா என்பது ஐயமே. அதுபோல் கௌதமிடமிருந்து இன்னொரு விண்ணைத்தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம் போன்ற படங்களை எதிர்பார்த்துச் சென்று ஏமாந்தவர்களே இதை நன்றாக இல்லை, கேவலமாக இருக்கிறது என்று சொல்கின்றனர். ஒரு படைப்பாளி எப்போதும் ஒரே மாதிரி படங்களைத்தான் எடுக்க வேண்டும் என்னும் எண்ணத்தை மாற்றிக் கொள்வது நல்லது.

இதுபோன்ற பாலிவுட்டில் சகஜமாகிவிட்டது. மதூர் பண்டார்க்கரின் சாந்தினி பார், பேஜ் த்ரீ, ஃபேஷன், திபாகர் பேனர்ஜீயின் Love. Sex aur Dhoka போன்ற படங்களை சாதாரண தமிழ் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது தமிழ்த்திரையுலகில் இன்னும் ஆரோக்கியமான சூழல் உருவாகவில்லை என்பதையே காட்டுகிறது. பத்து ஆண்டுகள் கழித்து இப்படத்தைப் புரிந்துகொள்வார்கள் என நம்பலாம்.

படம் முடிந்து அரங்கில்  பல ஜீன்ஸ் டி-ஷர்ட் அணிந்த பல பெண்களைப் பார்க்கையில் சுகன்யாக்களும், சந்த்யாக்களுமாகவே தெரிந்தனர் . யுத்தம் செய் படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு முறை பெண்களை கவனமாக இருக்கச் சொல்லியிருக்கும் படம்.

Kudos to Gautam Vasudev Menon for the Daring Attempt 🙂 and Happy Birthday too 🙂

P.S: சென்ற வார விகடனில் ஆண்களின் அல்லல்களை எழுதியிருந்த பாரதி தம்பியைத்தொடர்ந்து இப்போது ஆண்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகளைக் காட்டியிருப்பது ஆண்களுக்குக் குரல் கொடுக்கக் கூட ஆட்கள் இருக்கிறார்களே என்று ஆறுதலாக இருக்கிறது!

 
11 Comments

Posted by on February 26, 2011 in Movie Reviews, Movies

 

யுத்தம் செய்

இரண்டாம் நாளே பார்த்துவிட்டேன். இப்போதுதான் நேரம் கிடைத்தது.


படம் பார்க்கச் சென்ற ஒரே காரணம் மிஷ்கின் மட்டுமே. (மூன்று காரணங்கள்: 1.மிஷ்கின் 2.மிஷ்கின் 3.மிஷ்கின் என்று சொன்னால் CSKவைக் காப்பி அடித்தது போல் ஆகிவிடும்) கதாநாயகன் சேரனுக்கு போலீஸ் வேடம் என்றதும் சிரிப்புதான் வந்தது. ராமன் தேடிய சீதையில் நவ்யா நாயரிடம் அடிவாங்கும் அப்பாவி இளைஞனாக மட்டுமே ஏற்றுகக் கொள்ளக் கூடிய தோற்றம். பாடல்களை முன்பே கேட்கவில்லை. யாரோ புதிய இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், முக்கியமாக
கதாநாயகி என்று யாரும் இல்லை. இப்படி எந்தவித நிறைகளின்றி எதிர்பார்ப்புமின்றி போன என் நம்பிக்கையைக் குலைக்காமல் மேலும் ஆச்சரியங்களில் ஆழ்த்திவிட்டார் இயக்குனர் மிஷ்கின்.

இப்படி ஒரு படம் பார்த்து வெகுகாலம் ஆகிவிட்டது என்று சொல்ல முடியாது. இப்படி ஒரு படத்தை நான் இதற்குமுன் பார்த்ததே இல்லை. காதலை மட்டுமே இன்னும் நம்பியிருக்கும் தமிழ்ச்சினிமாவில் இப்படம் நிச்சயம் ஓர் ஆறுதல், த்ரில்லர் திரைப்படங்களில் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். ஆரம்பம் தொடங்கி இறுதி வரை மர்மம் கொண்ட த்ரில்லர் வகை திரைப் படங்களை தமிழில் பார்த்ததில்லை. த்ரில்லராக இருந்தாலும் அதிலும் காதலை நுழைத்து டூயட் பாடலைச் செருகி, கிளர்ச்சியூட்டும் காட்சிகளைப் புகுத்தி ஒரு வழி செய்துவிடுவார்கள். ஆனால் மர்ம முடிச்சுகள் கொண்ட த்ரில்லரை அதன் அழகியல் கெடாமல் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியதுபோல் இயக்கியதற்கு மிஷ்கினுக்கு ஒரு பூங்கொத்து! (இன்னும் எத்தனை நாளைக்குதான் பூச்செண்டையும் பூங்கொத்தையுமே கொடுக்கறது  புதுசா ஏதாவது கொடுக்கணும் 🙂 )

போலீஸ் கதாப்பாத்திரம் என்றால் திடகாத்திரமான உடலும், எப்போதும் விறைப்பாக இருந்து கர்ஜிக்கும் குரலும் இருக்கும் என்ற மரபைத் தகர்த்திருக்கிறார் மிஷ்கின். சிபிசியிடிக்கு மூளையும் Presence of mind-ம் மட்டுமே அவசியம் உடல் அல்ல என்று ஜேகே கதாப்பாத்திரத்தில் சேரன் கச்சிதமாகப் பொருந்தி உணர்த்தியுள்ளார். மம்மூட்டியையும் அவ்வப்போது கமலையும் இதுபோன்ற கதாபாத்திரத்தில் ஜோலித்துள்ளனர். இப்போது சேரனும் மிளிர்கிறார். வழக்கமான Melodramatic நடிப்பை மூட்டை கட்டிவைத்து செய்து முழுக்க முழுக்க தன்னை ஓர் இயக்குனரின் நடிகனாக மிஷ்கினிடம் ஒப்படைத்து அடுத்த பூங்கொத்தைப் பெறுகிறார் சேரன். குறிப்பாக நகவெட்டியை மட்டும் வைத்துக்கொண்டு வரும் சண்டை கலக்கல். ஆனாலும் வழக்கமான சோகமூஞ்சி சேரன் இறுதியில் வரும் தங்கை செண்டிமெண்ட் காட்சியில் தலைநீட்டுகிறார். But not an issue.

ஒளிப்பதிவும் பின்னணி இசையும் சிறப்பாக அமைந்தாலே த்ரில்லர் படங்கள் 75 %  வெற்றி பெற்றுவிடும். ஈரம் மற்றும் யாவரும் நலம் நல்ல உதாரணங்கள். இவ்விரு படங்களையும் மிஞ்சி விட்டது இப்படத்தின் பிரமிப்பூட்டும் பின்னணி இசையும், துல்லியமான ஒளிப்பதிவும் கோணங்களும் . புதியவர்களான கே (கார்த்திக்?) மற்றும் சத்யாவிற்கு முறையே பூங்கொத்துகள். இசையையும் ஒளிப்பதிவையும் மட்டும் சிலாகிக்கும் பலர் ஒலிப்பதிவையும், படத்தொகுப்பையும்  மறந்துவிடுகின்றனர். ஒலிப்பதிவாளரும், படத்தொகுப்பாளரும் பாராட்டுக்குரியவர்கள். குறிப்பாக ஒரே இடத்தில் காட்சிகள் அன்றும் இன்றுமாக மாறும்போது  அபாரம். இதேபோல் வேறு சில படங்களில் வந்திருக்கிறது. யாரேனும் நினைவு படுத்தினால் நல்லது.

தன் முந்தைய படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு பதில் புதியவர்களை அறிமுகப் படுத்திஇருந்தாலும்  அவற்றை விட (நந்தலாலாவின் பின்னணி இசையைக் கணக்கில் கொள்ளவில்லை) சிறப்பாகவே அமைந்துள்ளது. அவரது வழக்கமான பாணியில் பாடல் இடம் பெற்றிருந்தாலும் இப்படத்தில் இடைச்செருகல் போல் தெரியவில்லை. கதையை நியாயப் படுத்தும் விதமாகவே அமைந்துள்ளது. அதுவும் படு சீரியசாக போய்க்கொண்டிருக்கும் படத்தில் சாரு தோன்றும் காட்சிகள் நல்ல நகைச்சுவை. அதுவும் ஆர்மோனியம் வாசிக்கும் அந்த விரல்கள்! சிக்கில் ஷண்முகசுந்தரமாக சிவாஜி நாதஸ்வரம் வாசித்ததை எல்லாம் தூள் தூள் ஆக்கிவிட்டார் சாரு 😉 இருந்தாலும் அமீருக்கு இது தேவையா??

Casting பிரமாதம். வழக்கமாக குணசித்திர வேடங்களுக்கேன்றே சில default நடிகர்கள் தமிழில் இருந்து வந்தனர். நாகேஷ், மனோரமா, தேங்காய் சீனிவாசனைத் தொடர்து சிவகுமார், ஜெய்ஷங்கர், விஜயகுமார், லக்ஷ்மி, ஸ்ரீவித்யா, சுமித்ரா, ஜெயசித்ரா, டெல்லி கணேஷ். பின் நாசர், பிரகாஷ் ராஜ், நிழல்கள் ரவி, டெல்லி குமார், கிட்டி, கலைராணி, ஜானகி சபேஷ், ராஜசேகர்.

அதுபோல் இப்போது சில புதியவர்கள் ஆச்சரியப் படுத்துகின்றனர். முதலில் ஜெயப்ரகாஷ். பசங்க, நாடோடிகள், வம்சம், நான் மகான் அல்ல என்று மனிதர் எந்த வேடத்திலும் பிச்சு உதறுபவர். இவரைப் பற்றி பதிவர்/நண்பர் கார்க்கி ஒரு பதிவு எழுத முற்பட்டது குறிப்பிடத்தக்கது ஆடுகளம் படத்தில் நல்ல கதாபாத்திரம் தரப்படவில்லை குறித்து மிகவும் வருந்தினேன். இறுதியில் அவர் பேசும் நாலு வரி வசனம் நறுக் என்று இதயத்தில் குத்துகிறது. அக்காட்சியில் காமிரா கோணமும் அருமை. அடுத்து லக்ஷ்மி ராமகிருஷ்ணன். ஈரம் படத்தில் எதிர் வீட்டு Auntyயாக வந்து நீருக்கு இரையாகி, பாஸ் என்கிற பாஸ்கரனில் நகைச்சுவை அம்மாவாக வந்தாலும் இன்னும் என்னாலும் என் நண்பர்களாலும் விண்ணைத்தாண்டி வருவாயா ஜெஸ்ஸியின் அம்மா  என்றே எப்போதும் அறியப்படுவார். ஆனால் இனி ‘யுத்தம் செய்’ இவரது அடையாளமாக ஆகப் போகிறது. அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டார். ரோஹிணியைத் தொடர்ந்து இவருக்கும் மொட்டை போட்டுவிட்டார் மிஷ்கின். ஆனால் வீண் போகவில்லை. இனி குணசித்திர அப்பா அம்மா வேடங்கள் என்றால் கூப்பிடு ஜெயப்ரகாஷ் லக்ஷ்மியை என்ற நிலைமை வந்துவிடும் .

செல்வா என்ற கதாநாயகனை (கோல்மால், சக்திவேல் படங்கள் ஞாபகம் வரவில்லையா? ராஜாவின் அருமையான ‘மல்லிக மொட்டு மனச தொட்டு’ என்ற பாடலில் வருவாரே அவரேதான்! டாக்டர் ராஜசேகரின் தம்பி) பலரும் மறந்திருக்கையில் இப்படத்தில் மீண்டும் வந்திருக்கிறார் வில்லனாக. அதேபோல் யுகேந்திரன். மாணிக்க விநாயகம் இதுபோன்ற ஒரு பாத்திரத்திற்கு எப்படி ஒப்புக் கொண்டார் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. இவரும் நன்றாகவே செய்திருக்கிறார். பிரசன்னாவையும் பாண்டியராஜனையும்  வில்லன்களாக யாராவது நினைத்திருப்பார்களா? மிஷ்கின் மீது இப்போதும் அந்த வியப்பு இருக்கிறது! கொலைசெய்யப் படும் ஒரு மகனின் அம்மாவாக ஒரு சினிமா வாடையே இல்லாத ஒரு பெண் அசத்தியுள்ளார். சேரனின் உதவியாளராக வரும் தீபா ஷாவின் முகம் முதலில் பொருந்தாததுபோல் இருந்தாலும் பிறகு பழகிவிட்டது. தமிழ் முகம் உள்ள பெண்களே கிடைக்கவில்லையா? சேரனின் சீனியராக வரும் நரேன் (‘ஆடுகளம்’ ரத்தினசாமி) தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார்.

ஜெயமோகன் கதைகளைப் படித்தாலே சிறுகதை எழுதலாம் என்று எழுத்தாளர் அ.முத்துலிங்கம் தம் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அதுபோல்  மிஷ்கின் படங்களைப் பார்த்து திரைப்பட இயக்கம் கற்றுக் கொள்ளலாம்! அந்த அளவுக்கு காட்சிக்குக் காட்சி பிரமிக்க வைக்கிறார். தன் வழக்கமான Longshots ,கால்களின் close-up, top angle -கள் என்று கண்களுக்கு விருந்து படைத்துள்ளார் மிஷ்கின். தகேஷி கிடாநோவிடமிருந்தும் அகிரா குரோசாவாவிடமிருந்தும் சுட்டுவிட்டார் என்று பல அறிவுஜீவிகள் சொல்லலாம். நந்தலாலாவின் மூலம் கிகுஜிரோ என்பதுபோல் இதன் மூலமும் ஒரு கொரியப் படம் என்று பரவலாக சொல்லப்படுகிறது. நான் அதைப் பார்க்கவில்லை. அதனால் சுடப் பட்டதா என்று தெரியவில்லை. கமலும், மணிரத்னமும் சுடவில்லையா? தான் வியந்து ரசித்த ஒன்றைத் தம் நாட்டு மக்களும் ரசிக்க வேண்டும் என்ற எண்ணம் வரவேற்கப் பட்டாலும் அதை தைரியமாக ஒப்புக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுதல் அவசியம்.

படத்தில் குறைகள் என்று எனக்குத் தெரிந்தது நகவெட்டி சண்டைக் காட்சியில் சேரனை அடிக்க வருபவர்கள் ஒருவராக, இருவராக, மூவராக என்று அடிமேல் அடிவைத்து நகர்வது
சொல்லிக் கொடுத்த Choreography போல் உள்ளது. அதேபோல் இறுதியில் லக்ஷ்மி நடக்கும் போதும் உள்ளது. (நந்தலாலா விமர்சனத்தில் சுஹாசினி சொன்னது!). தனது பிரதேயக்மான காட்சிகள் என்று கால்களையும் Long Shot களையும் மிஷ்கின் தன் அடுத்த படத்திலும் காட்டினால் சலிப்பு ஏற்பட்டுவிடும். இறுதிக் காட்சியின் லொகேஷன் அஞ்சாதே படத்தில் வருவது போலவே இருப்பதைத் தவிர்த்திருக்கலாம். சமீபத்தில் வெளிவந்த ஈசன் படம் போல் உள்ளது என்று பலரும் சொல்கின்றனர். நான் பார்க்கவில்லை. ஆனால் அதைவிட பன்மடங்கு நன்றாகவே இருக்கிறதாம். ஈசனைப் பார்க்க வேண்டும்.

அந்தக் கடைசி Long-shot ஏதோ ஓர் அயல் சினிமாவை நினைவூட்டினாலும் கண்கள் பனிக்கச் செய்தது. The film deserves Standing Ovation. நூறு சதவிகித நிறைவை அளித்தது. நன்றி மிஷ்கின் 🙂

மிஷ்கின் தமது ஒளிப்பதிவாளர்களை மிகவும் நேசிப்பவர் போலிருக்கிறது. ஒரு கதாபாத்திரத்திற்கு தன் முந்தைய படங்களின் ஒளிப்பதிவாளரான மகேஷ் முத்துஸ்வாமியின் பெயரை வைத்ததோடு மட்டுமின்றி, படம் முடிந்து “A Film by Mysskin” என்று போடாமல் ‘ஒளிப்பதிவு-சத்யா’ என்று போட்டது பாராட்டத்தக்கது. இறுதி வரை மிஷ்கின் பெயரே வரவில்லையே என்று நண்பன் சொன்னான். Longshot-ல் கால்களின் Close-up காட்டியதிலேயே ‘இயக்கம் -மிஷ்கின்’ என்ற குறியீடு உள்ளதே என்றேன் அவனிடம் 🙂

ஒரு படமாக ரசிக்க முயன்றாலும் இதுபோன்ற குற்றங்கள் நம்மைச் சுற்றி நடக்கின்றன
என்று நினைக்கையில் திக் என்கிறது. பெண்கள் அந்நியர்களிடம் மட்டுமின்றி அன்னியோன்யமானவர்களிடமும் கவனமாக செயல்பட வேண்டுமென்ற எச்சரிக்கை மணியை சற்று பலமாகவே அடிக்கிறது.

பி.கு : த்ரில்லர் படங்கள் மா…ஆஆஆதம் போலிருக்கிறது. பயணம், நடுநிசி நாய்கள், ஆரண்ய காண்டம் என்று வரிசையாக இம்மாதம் சினிமா ரசிகர்களுக்கு விருந்து. ‘கோ’ கூட அயன் போல் விறுவிறுப்பாக இருக்கும் என நம்பலாம். அடுத்து வரும் படங்கள் குறிப்பாக நடுநிசி நாய்கள் இந்த அளவு இருக்குமா இல்லை இன்னும் சிறப்பாக இருக்குமா இல்லை கௌதம்  காதலைச் செருகி சொதப்பிவிடுவாரோ என்ற பயம் கலந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
12 Comments

Posted by on February 9, 2011 in Movie Reviews, Movies

 

ஆடுகளம் – என் பார்வையில்

பொதுவாக எனக்கு Action படங்கள் பிடிக்காது- நல்ல கதையம்சம் இருந்தாலொழிய. நாயகன், தளபதி போன்ற படங்கள் கூட சிறு வயதில் பிடிக்காமல் சற்று பக்குவமடைந்ததும் மிகவும் பிடித்தன. பார்த்ததும் பிடித்த படங்கள் தேவர் மகன், புதுப்பேட்டை, பொல்லாதவன். பொல்லாதவன் படத்தின் திரைக்கதையை மிகவும் ரசித்தேன். அதே கூட்டணியின் படம் என்பதால் ஆடுகளம் படத்திற்கு நிறைய எதிர்பார்ப்பிருந்தது. மேலும் ஜி.வி.யின் இசையில் ‘யாத்தே யாத்தே’ மற்றும் ‘அய்யய்யோ’ பாடல்கள் மனதைக் கொள்ளை கொண்டு  எதிர்பார்ப்பை அதிகரித்தன. இப்போதெல்லாம் ஒரு சில படங்களைத் தவிர்த்து மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்கச் சென்றால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஆனால் ஆடுகளம் என்னை ஏமாற்றாமல் முழுத் திருப்தியளித்தது.  மற்றவர்களுக்கு எப்படியோ, எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஆடுகளத்தின் கதைக்களமே தமிழ் சினிமாவுக்குப் புதிது. சேவல்சண்டை பல நாடுகளில் நடத்தப் பட்டாலும் அதன் மூலம் தமிழர்களுடையது (துவக்கத்தில் ஒரு Montage with narration கூட சொல்லப்படுகின்றது). இன்றும் கிராமங்களில் ஜல்லிக்கட்டுக்கு இணையாக திருவிழாக்களில் பொழுதுபோக்காகவும், சூதாட்டமாகவும், கௌரவத்திற்காகவும் நடத்தப்படும் சேவல் சண்டையை படத்தின் களமாக எடுத்திருக்கிறார். கிழக்குச் சீமையிலே படத்தில் சேவல் சண்டையை பாரதிராஜா ஒரு காட்சியில் பதிவு செய்திருந்தாலும் ஆடுகளத்தில் விஸ்தாரமாக கையாளப் பட்டிருக்கிறது. நாயகன் அறிமுகப் பாடல், பன்ச் டையலாக், குத்துப் பாட்டு, திணிக்கப்பட்ட சண்டைக் காட்சிகள் எதுவுமின்றி எவ்வித காம்ப்ரமைசும் செய்துகொள்ளாமல் இப்படியொரு யதார்த்தமான படத்தைத் தந்ததற்கு இயக்குனர் வெற்றிமாறனுக்கு முதலில் ஒரு பூங்கொத்து (பூந்தோட்டத்தையே தரலாம்). இரண்டாவது இயல்பாக நடித்திருக்கும் நடிகர்களுக்கு.
‘கருப்பு’ கதப்பாத்திரத்துக்கு தனுஷ் கனக்கச்சிதம்- Tailor-made Character! மதுரைத்தமிழ் பேசி (வசுவுகள் அனைத்தும் பீப் பீப் பீப்), அம்மாவைக் கூட ‘கொண்டே…போடுவேன்’ என்று முரட்டு சுபாவம் கொண்ட, கொண்டைகள் சிலுப்பும் சண்டைச் சேவல் போல் கோபம்கொண்டு, உரிச்ச கோழி டாப்ஸீயிடம் ‘ஐ யாம் லவ் யூ” என்று குழைந்து முதல் பாதி முழுதும் தனுஷின் அமர்க்களமான அதகளம். நிச்சயம் அவரது சினிமா வாழ்வில் ஒரு மைல்கல்! தனுஷ் தன் அப்பாவைவிட மதிக்கும் ‘பேட்டைக்காரன்’ ஜெயபாலனுக்கும் (யார் இவர்? அசத்தியிருக்கிறார் 🙂 ராதாரவி குரல் கொடுத்திருக்கிறார்!) உள்ளூர் காவல் அதிகாரி ரத்தினசாமிக்கும் (‘பாலுமகேந்திரா கதை நேரம்’ புகழ் நரேன். இனி வெள்ளித் திரையிலும் அதிகம் வலம் வருவார்!) சேவல் சண்டை எதிராளிகள். ஜெயபாலானை வீழ்த்தி ‘பேட்டைக்காரன்’ பட்டத்தை வெல்வதே நரேனின் லட்சியம். ஜெயபாலனின் வலது கையான துரையும் (விக் வைத்த கிஷோர்! வழக்கம்போல் கலக்கியிருக்கிறார்!) இளம் சீடனான கருப்பும் அவருக்கு உறுதுணையாக இருந்து எப்போதும் ஜெயித்து வருகின்றனர். இடையில் ஆங்கிலோ இந்தியப் பெண்ணான ஐரீனுடன் கண்டதும் காதல் கொள்கிறார்.
படத்தின் முக்கிய இரண்டு வில்லன்கள் பொறாமை மற்றும் ஈகோ. சந்தர்ப்பமும் சூழ்நிலைகளும் எப்படியெல்லாம் மனிதர்களை மாற்றுகின்றன என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். அவருக்கு பக்கபலமாக இருப்பவர் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். அதிலும் அதிகமாக வரும் இரவுக் காட்சிகளை இயல்பான Lighting-குடன் நடிகர்களின் உணர்ச்சிகளை அபாரமாக ஒளிப்பதிவு செய்துள்ளார். சேவல் சண்டை CG வேலை என்பது ஓரிரு காட்சிகளுள் மட்டுமே தெரிகிறது. யதார்த்தமான வசனங்கள் மேலும் அழகூட்டுகின்றன. தனுஷ் தன் அம்மாவிடமும் டாப்ஸீயுடனும் பேசும் வசனங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. ஜி.வி.பிரகாஷின் இசை ‘யாத்தே யாத்தே’ என்று காதலில் துள்ள வைத்து, ‘ஒத்த சொல்லால’ என்று குத்தாட்டம் போட வைத்து (லுங்கியை ஏத்திக்கட்டி தனுஷ் ஆடும் ஆட்டம் சூப்பர்! ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்), ‘ஏன் வெண்ணிலவே’ என்று காதலில் கரைந்துருகி, ‘அய்யய்யோ’ என்று செல்லமாக சிணுங்க வைக்கிறது. என்னை மிகவும் கவர்ந்த இன்னொரு விஷயம் பாடல்களைப் படமாக்கிய விதம். எந்த ஒரு பாடலும் திணிக்கப் படாமல், நாயகன் நாயகி பாடுவது போன்றோ, கனவுப் பாடல்களோ இல்லாமல் கதையோடு காட்சிகளாக நகர்வது மிக அழகாய் காட்சிப் படுத்தப் பட்டிருக்கிறது. மதுரை என்றால் சண்டை இல்லாமலா. இதிலும் இருக்கின்றன. ஆனால்வழக்கமான மதுரைப் படங்களில் வரும் அரிவாள் கலாச்சாரமும் வன்முறையும் இன்றி கிராமத்துக் காரர்களுக்கே உரித்தான இயல்பான கோபங்களால் வரும் இயல்பான யதார்த்தமான சண்டைகள் கொஞ்சம் ஆறுதல் அளிக்கின்றன.
லொகேஷன்களும் கண்களுக்குக் குளிர்ச்சியாய் இருக்கின்றன. அதுவும் மலைப்பகுதியில் இருக்கும் பேட்டைக்காரனின் வீடு இருக்கும் பகுதி கொள்ளை அழகு. கதையின் அனைத்து பாத்திரங்களும், மனதில் பதிகின்றன. தனுஷின் அம்மா, நண்பன், பேட்டைக்காரனின் மனைவி, ரத்தினசாமியின் அம்மா, சேவல் தோற்கும் தருவாயில் அழும் சிறுவன், என்று அனைவரும் தம் பங்கைத் திறம்படச் செய்துள்ளனர். ஆனால் ஐரீன் அப்பாவின் நண்பராக வரும் அருமையான நடிகர் ஜெயபிரகாஷை (பசங்க, நான் மகான் அல்ல, வம்சம்) அநியாயமாக வீணடித்துவிட்டார் இயக்குனர். அவருக்கு ஓர் அழுத்தமான பாத்திரம் இருக்குமென நம்பி ஏமாற்றம் அடைந்தேன். அதேபோல் நாயகியின் வீட்டிலுள்ளோர் அவரது பக்கத்துக்கு வீட்டுக்காரரான கூலிங்கிளாஸ் இளைஞன் அளவுக்கு பதியவில்லை.
படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக, ஜனரஞ்சகமாக இருப்பதால், அந்த அளவு வேகமாக நகராத கொஞ்சம் வித்தியாசமான (சிறுகதை போன்ற) முடிவுடன் இருக்கும் இரண்டாம் பாதி (‘ஒரு படத்தை பாதிப்பாதியாக கூறு போடுவது எனக்குப் பிடிக்காது’ என்று சொல்லிக்கொண்டால்தான் விமர்சகன் என்று மதிப்பார்கள் 🙂 ) பலருக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் மாற்றுக்கருத்து கொண்ட, சினிமாவை பொழுதுபோக்காக அன்றி உண்மையாக நேசிப்பவர்களுக்கு, தமிழ் சினிமா மேலும் முன்னேற நினைப்பவர்களுக்கு இதன் முடிவு பிடிக்கும் (என்று நினைக்கிறேன்). உலகம் என்னும் ஆடுகளத்தில் வாழ்க்கை என்னும் விளையாட்டு மனிதர்களால் எப்படி விளையாடப்படுகிறது என்பதை விறுவிறுப்பான திரைக்கதையுடனும் வித்தியாசமான முடிவுடனும் அற்புதமாக பதிவு செய்திருக்கிறார் வெற்றிமாறன். வெற்றிமாறனுக்கு நிச்சயம் வெற்றிதான். குருநாதர் பெயரை மீண்டும் காப்பாற்றியுள்ளார். Hat-trick அடிக்க வாழ்த்துகிறேன்.
சா.கந்தசாமியின் தக்கையின் மீது நான்கு கண்கள்தி.ஜானகிராமனின் பாயாசம் போன்ற சிறுகதைகளை  நினைவு படுத்தியது (தக்கையின் மீது நான்கு கண்கள் சிறுகதையை படம் பார்க்கும் முன் பேருந்தில் செல்லும்போது படித்தது தற்செயலாக நடந்தது என்று ஏனோ மனம் நம்ப மறுக்கிறது!)
மைனஸ் : படத்தில் சில குறைகள் இருந்தாலும் பல நிறைகள் இருப்பதால் மன்னிக்கலாம் (சுஹாசினி Effect?!). மிகப் பெரிய மைனஸ் பாயின்ட் சன் பிக்சர்ஸ். கலாநிதி மாறனின் அதிகப்பிரசங்கித்தனமான மார்க்கெட்டிங் உத்தி இல்லாமலே இப்படம் வெற்றி பெறும். ஆனால் அளவுக்குமீறிய அமுதம் விஷமாவது போல் அது பலரை எரிச்சலூட்டிவிடும் அபாயம் உள்ளது (என் ஆதர்ச பதிவர் சுரேஷ் கண்ணன் மற்றும் சிலர் எந்திரன் பார்க்காதது போல்!)
டிஸ்கி 1 : சங்கம் திரையரங்கில் ரசிகர்களின் கூச்சல்களுக்கிடையில் பார்த்ததால் முதல் பாதியில் பல வசனங்கள் புரியவில்லை. அதிலும் Hardcore Madurai Slang! சாந்தம்  எலைட்டில் இன்னொரு முறை பார்க்க வேண்டும்.
டிஸ்கி 2 : படம் முடிந்ததும் போடப்படும் End Credits-ல் Filmography என்று பல திரைப்படங்களின் பெயர்கள் வந்தன. ஆனால் முழுவதும் பார்க்க முடியாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதையும் இரண்டாம்
முறை பார்க்க வேண்டும்!
ஈகோ, பொறாமை, வன்மம், காழ்ப்புணர்வு போன்ற தீய எண்ணங்களை போகித்தீயில் எரித்து, நிம்மதியும் இன்பங்களும் கலந்த இனிமையான பொங்கல் தங்கள் வாழ்வில் என்றும் பொங்கிட வாழ்த்துகிறேன். அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் 🙂
 
7 Comments

Posted by on January 15, 2011 in Movie Reviews, Movies

 

நந்தலாலா – என் அனுபவம்

அன்பிற் சிறந்தது அன்னையின் அன்பு. தம் உயிரையும்விட மேலாக பிள்ளையை நேசிக்கும் தாயின் பாசத்திற்கு ஈடில்லாத தாயன்பின்றி வாழும் இரண்டு குழந்தைகள் தத்தம் தாய்களைத் தேடி மேற்கொள்ளும் பயணமே நந்தலாலா. வாழ்க்கை என்னும் பயணத்தில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரிடமும் ஏதாவது ஒன்றை அறிந்தும் அறியாமலும் நாம் கற்றுக் கொள்கிறோம், கற்றும் தருகிறோம். அவ்வாறு தங்கள் பயணத்தில் அன்பைக் கொடுத்து பேரன்பைப் பெறும் அவ்விரு உள்ளங்களும் தாயன்பைப் பெறுகிறார்களா என்று நெகிழ்வுடன் சொல்லும் ஓர் உணர்ச்சிப்பூர்வமான அனுபவம்தான் நந்தலாலா. கன்னத்தில் முத்தமிட்டால் படம் போல தோன்றினாலும் இது மிகவும் வேறுபட்டது.

‘அகி’யாக அஸ்வத் ராமும் மன நலம் பிறழ்ந்த பாஸ்கர் மணியாக மிஷ்கினும் அற்புதமான நடித்துள்ளனர்.மிஷ்கினைத் தவிர வேறு யாரும் அக்கதப்பாத்திரத்தை உள்வாங்கி நடித்திருக்க இயலுமா என்பது சந்தேகம். படத்தில் ஹீரோ, ஹீரோயின், வில்லன், காமெடியன் என்று யாரும் இல்லை. கதை மாந்தர்களே உலவுகின்றனர். அனைத்து கதாபாத்திரங்களும் நமக்கு பரிச்சயமற்ற ஆனால் யதார்த்தமான முகங்கள் (சில நொடிகள் தோன்றும் நாசர் மற்றும் சில நிமிடங்கள் தோன்றும் ரோஹிணியைத் தவிர). ஸ்னிக்தா கூட இரண்டாம் பாதியில்தான் வருகிறார். மனிதர்கள் அனைவரும் நல்லவர்கள் இல்லை, கேட்டவர்களும் இல்லை. இரண்டும் கலந்த கலவைதான் நாம். அக்கலவையின்  விகிதாச்சாரமே நமக்கு நல்லவன் கேட்டவன் என்ற பிம்பத்தைத் தருகிறது. கதையினூடே மெலிதான நகைச்சுவையையும் தவழவிட்டிருக்கிறார். ஜப்பானியத் திரைப்படம் கிகுஜிரோவின் தழுவல் என்றாலும், தமிழுக்கு இது மிகவும் புதியதோர் அனுபவம். கிகுஜிரோவைவிட ஒரு படி மேலோங்கி இருப்பது மிஷ்கினின் வெற்றியே! மிஷ்கினுக்கு ஒரு பூச்செண்டு இல்லை பூந்தோட்டமே தரலாம்.

முதல் காட்சியே நம்மை நிமிர்ந்து அட போட வைக்கிறது. வசனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தே பழகிப்போன தமிழ் ரசிகர்களுக்கு காட்சிகளால் கதை நகர்த்தும் உத்தியை பாலுமகேந்திரா, மணிரத்னம்,பாலா போன்றவர்கள் சில காட்சிகளில் உபயோகித்திருக்கிறார்கள். ஆனால் நந்தலாலாவில் படம் முழுவதுமே அவ்வாறு அமைந்துள்ளது. ஒவ்வொரு காட்சியும் ஒரு ஹைக்கூ போல் கவிதையாய் இருக்கிறது. (காட்சிகளெல்லாம் ஜென் தத்துவத்தைப் பிரதிபலிக்கின்றது என்று சொல்லப்படுகிறது. ஆனால் எனக்கு ஜென் தத்துவத்தைப் பற்றி தெரியாததால் அவ்வாறு சொல்லமுடியவில்லை) இதற்குப் பெரிதும் பக்க(கா)பலமாக இருப்பவர் இசைஞானி இளையராஜா. படம் நெடுக வியாபித்து விஸ்வரூபமெடுத்திருக்கிறார். கதாபாத்திரங்கள் பேசுவதைவிட ராஜாவின் இசைதான் அதிகம் பேசுகிறது. சில சமயம் பேசாமலும் உணரச் செய்கிறது. மெல்ல ஊர்ந்து ஊர்ந்து என்னும் பாடல் தொடங்கும் பொது நாமும் அவர்களுடன் சேர்ந்து ஊர்ந்து பயணிக்கும் உணர்வைத் தருகின்றது. அன்பு மட்டும்தான் அனாதையா என்று ஜேசுதாஸ் பாடுகையில் அந்த வெறுமையை நம்மால் உணர முடியும். முத்தாய்ப்பாக தாலாட்டு கேட்க நானும் என்று ராஜா மேன்சொகமாக பாடுகையில் நம்மை அறியாமல் கண்ணீர் வருவதைத் தடுக்க முடியாது. பின்னணி இசைக்கான இரண்டாவது தேசிய விருதையும் பெறப்போகிறார் (விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் பின்னணி இசைக்காக ரகுமான் விருது பெறுவார் என்ற இதுவரையிலிருந்த எண்ணம் போய்விட்டது!)
இசைக்கு அடுத்ததாய் நம் கவனம் ஈர்ப்பது ஒளிப்பதிவு. காட்சிகள் மூலமே படம் நகர்வதால் ஒளிப்பதிவுக்கு முக்கியப் பங்குண்டு. மகேஷ் முத்துசாமி சிறப்பாக தம் வேலையைச் செய்துள்ளார். பல காட்சிகள் Long Shots -ஆகவும் அத்தியாவசியக் காட்சிகள் Close up-பிலும் உணர்சிகளைப் படம் பிடித்துள்ளார். ஒவ்வொரு காட்சிக்கான என் எண்ணத்தைப் பதிவிட விரும்பினாலும், படம் பார்க்காதவர் இதைப்படித்தால் படம் பார்க்கும்போது சுவாரசியம் குறையுமென்பதால் பதிவிடவில்லை.  பள்ளிச்சிறுமி வரும் காட்சி (அஞ்சாதே படத்தில் இறுதியில் கடத்தப்படும் இருவரில் ஒருவர்), ஊனமுற்றவர் வரும் காட்சி (கண்கலங்கிவிட்டது), இளநீர் வியாபாரி, ஐஸ் வண்டிக்காரர் வரும் காட்சிகள், ஸ்நிக்தாவைக் குளிக்கச் சொல்லும் காட்சி, குறவன் வரும் காட்சி, மிஷ்கின் தாயைக் காணும் காட்சி என்று பல காட்சிகளை மிகவும் ரசித்தேன். போலீஸில் பிடிபடும் காட்சி மட்டும் சுவையான உணவில் இடறிய கல். மேலும் படத்தில் பல குறியீடுகள் உள்ளன. அன்னைவயல், தாய்வாசல் போன்ற நேரிடையான குறியீடுகளைத் தவிர சில சூசகமான சில குறியீடுகளும் உள்ளன. முதன் முறையே எல்லாவற்றையும் அறிவது எனக்குக் கடினமாவதால் இன்னொரு முறை காண வேண்டும். கூழாங்கற்கள் குறியீடு என்னவென்று என் சிற்றறிவுக்கு எட்டவில்லை . யாரேனும் விளக்கினால் கடமைப் பட்டவன் ஆவேன்.
இப்படத்தை தமிழின் ஆகச் சிறந்த படமாக சொல்ல முடியாது. சில லாஜிக் மீறல்களும் உள்ளன. எந்த ஊரில் கதை நிகழ்கிறதென்றே தெரியவில்லை. (இறுதியில் ஈரோடு-கோவை நெடுஞ்சாலை பெயரைப் பார்த்து கொஞ்சம் பெருமை கலந்த இன்பமடைந்தேன்) பெற்றோர்களின்றி கண்ணிழந்த பாட்டியுடன் வாழும் சிறுவன் நிறைய பணம் வைத்திருப்பது, மிஷ்கின் முற்றிலும் மனம் பிறழ்ந்தவரா இல்லை குணமடைந்து வருபவரா என்று தெளிவாக சொல்லப் படவில்லை. இருந்தாலும் பல நிறைவான காட்சிகள் இக்குறைகளை மறைத்துவிடுகின்றன. இது போன்ற தரமான படங்கள் உருவாவதற்கு சில குறைகளை மன்னிக்கலாம்.
தாய்மை என்பது பிள்ளை பெறுவதில் இல்லை; தூய்மையான அன்பு காட்டுதலில் உள்ளது என்றஅற்புதமான தத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அம்மாவுடன் நிச்சயம் பார்க்க வேண்டும்!
பி.கு. இப்படத்தை முதன்முறை பார்ப்பவர்கள் வழக்கமான மசாலா சினிமா விரும்பிகளுடன் பார்க்க வேண்டாம். நல்ல சினிமா விரும்புபவர்களுடன், அல்லது தனியாக பார்ப்பதே உத்தமம். நல்லதொரு திரையரங்கில் காண பரிந்துரைக்கிறேன். நான் சத்யம் திரையரங்கில் பார்த்தபோது ஒருவர் கூட கமென்ட் அடிக்காமல் கைகள் மட்டும் தட்டி ரசித்தனர். இறுதியில் கண்களைத் துடைத்துக்கொண்டு Standing Ovation அளித்தது நிறைவாக இருந்தது! மீண்டும் ஒரு முறை இவ்வனுபவத்தை உணர வேண்டும்!
 
Leave a comment

Posted by on November 30, 2010 in Ilayaraja, Movie Reviews, Movies

 

Tags: , , ,

எந்திரன்

‘ஹாலிவுட் படங்களுக்கு நிகராக’ என்று இந்திய இயக்குனர்கள் சொல்லிக் கேட்டுக்கொண்டிருந்த நமக்கு உண்மையிலேயே அப்படி ஒரு படம் வெளிவந்து விட்டது. அதுவும் ஒரு தமிழ் படம், டிக்கெட் விற்பனையில் உலகையே கலக்கிக் கொண்டிருக்கிறது என்று நாம் பெருமையோடு காலரைத் தூக்கி விட்டுக்கொள்ளலாம். இந்த எந்திரன் என்பவன் இந்திய சினிமா படைப்புகளின் உச்சம். இப்படி ஒரு படைப்பை உருவாக்கியதற்கு ஷங்கருக்கும் அவரது குழுவினருக்கும் ஒரு Royal Salute.

நான் ரஜினி  ரசிகன் அல்லன். அனால் இப்போது ரசிகன் ஆகிவிட்டேன். ஸ்டைல் மற்றும்  சண்டைக் காட்சிகளை விட தேர்ந்த நடிப்பைத்தான் ஒரு நடிகரிடம் விரும்புவேன். அவ்வகையில் நான் தீவிர கமல் ரசிகன், இல்லை வெறியன். ரஜினியை எனக்கு வில்லனாக மிகவும் பிடிக்கும். அவர்கள், மூன்று முடிச்சு, 16 வயதினிலே போன்ற படங்களில் அவரது நடிப்பை மிகவும் ரசித்துள்ளேன். அவரது நகைச்சுவையும் பிரமிக்கத் தக்கது. தில்லு முல்லு, நினைத்தாலே இனிக்கும், நெற்றிக்கண் போன்றவை சாட்சி. இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் அவரை நன்றாக mould செய்து வைத்திருந்தார். பிறகு அவர் சூப்பர் ஸ்டார் என்ற பிம்பத்தினுள் நடித்த படங்களை நான் விரும்பியதில்லை. ஒரு நடிகன் தன்னை முழுமையாக எவ்வித குறுக்கீடுமின்றி இயக்குனரிடம் ஒப்படைக்க வேண்டும். அப்படி ரஜினி கடைசியாக நடித்தது தளபதி. அதன் பிறகு 19 வருடங்கள் கழித்து எந்திரன். ஆம் இது வழக்கமான ரஜினி படமும் அல்ல, ஊழல் சமூகத்தைத் திருத்தும் வழக்கமான ஷங்கர் படமும் அல்ல. முழுக்க முழுக்க Science Fiction திரைப்படம். இந்திய ரசிகர்களுக்காக ஆங்காங்கே  சில மசாலாக்களைத் தூவியுள்ளனர்.  
 
மனிதனைப் போல் ரோபோக்களை உருவாக்கி, ராணுவத்திற்கு வீரர்களுக்கு பதில் அந்த எந்திரன்களை அனுப்பும் லட்சியம் கொண்ட விஞ்ஞானி வசீகரனாக ரஜினிகாந்த். அவரது வசீகரக் காதலி, மருத்துவக் கல்லூரி மாணவி சனாவாக ஐஸ்வர்யா ராய். அதற்காக முதலில்  ஒரு எந்திரனை (Chitti, the Robot- Speed 1 Tera Hertz, Memory – 1 Zeta Byte) உருவாக்கி மனிதனால் முடியும் அனைத்தையும் program செய்கிறார். தொல்காப்பியம் முதல் தொழில்நுட்பம் வரை அனைத்தையும் அதன் 1 Z B மெமரியில் பதிவு செய்கிறார். அவரது உதவியாளர்களாக சந்தானம் மற்றும் கருணாஸ். வசீகரனின் பேராசிரியர் போரா (டேனி) ரோபோக்களைத் தீவிரவாதத்திற்குப் பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர். தான் படைத்த ரோபோவைவிட சிட்டி அதிக ஆற்றலைப் பெற்றுள்ளதைக் கண்டு அதனைத் தவறாகப் பயன்படுத்துகிறார். விளைவு சிட்டி அசுரன் போல் உலகையே அழிக்கும் வல்லமை பெறுகிறான். வசீகரன் தன்னை விட பன்மடங்கு ஆற்றல் மிக்க சிட்டியை எப்படி அழிக்கிறார் என்பதை ஷங்கருக்கே உரிய பிரம்மாண்ட பாணியில் காட்சிப் படுத்தி கண்களுக்கு விருந்தளித்து உள்ளார்.
 
ரஜினி ஒரு எந்திரமாகவே மாறியுள்ளார். ஷங்கர் என்ற எஜமானர் இடும் அனைத்து கட்டளைகளையும் நிறைவேற்றியுள்ளார். ரஜினிக்கு 60 வயது என்று யாராவது சொன்னால் யாராலும் நம்ப முடியாதபடி மனிதர் நிறையவே மெனக் கெட்டிருக்கிறார். தான் மட்டுமே  தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். பத்து வருடங்களுக்கு முன் கமல்ஹாஸனுக்காக உருவாக்கப்பட்ட  இத்திரைப்படத்தில் கமல் நடித்திருந்தால் கூட இவ்வளவு சிறப்பாக அமைந்திருக்காது என்று நினைக்க வைத்துவிட்டார் ரோபோ ரஜினி. Hats Off Rajnikanth 🙂 More Accolades are on your way 🙂
 ஐஸ்வர்யா ராய் – இவருக்குப் பிறகு எத்தனையோ உலக, பிரபஞ்ச அழகிகள் வந்தாலும் வருடங்கள் கழித்தும் கூட இவரே உலக அழகிக்கு உதாரணம் ஆகிறார். வழக்கமான ரஜினி பட கதாநாயகிகள் போலின்றி படம் முழுவதும் வருகிறார். ராவணனில் கந்தல் துணிகளுடனும் ஒப்பனையின்றியும் ஐஸைப் பார்த்து நொந்த Eyes-க்கு எந்திரனில் குளிர்ச்சி குளிர்ச்சி கூல் கூல். Also she’s damn hot! ஒப்பனைக் கலைஞர்களுக்கு ரஜினியும் ஐஸ்வர்யாவும் தம் சம்பளத்தில் ஒரு தொகையை தாராளமாக வழங்கலாம்.  ஓரிரு காட்சிகளில் முதிர்ச்சி தெரிவதைத் தவிர்த்திருக்கலாம்.  ஐஸ்வர்யாவிற்கு ஒரு வேண்டுகோள். இனி தயவு செய்து தாங்கள் நடிக்கும் தமிழ்ப்படங்களுக்கு பெண் ஆடை வடிவமைப்பாளரை நியமிக்கவும். சப்யஸாச்சி, மனிஷ் மல்ஹோத்ரா போன்றவர்கள் தங்களது முன்னழகைக் காட்டுவதிலேயே முனைப்பாக உள்ளனர். எனது விருப்பம் . தமன்னா, த்ரிஷா போன்றவர்களையே தேவதைகளாக மாற்றும் நளினி ஸ்ரீராமைப் பரிந்துரைக்கிறேன்.
To be contd…
 
Leave a comment

Posted by on October 2, 2010 in Movie Reviews, Movies