சில படங்கள் பாடல்களுக்காகவே பார்க்கத் தூண்டும். சென்ற வருடம் பையா படம் அப்படித்தான் கதையே இன்றி பார்க்க நேர்ந்தது. இந்த வருடம் எங்கேயும் காதலைத் தொடர்ந்து 180. (நூற்றெண்பது என்று தலைப்பை மாற்றியது பிடிக்கவில்லை) எங்கேயும் காதல் பார்ப்பதற்கு முதல் நாள் ‘வானம்’ படத்தின் இடைவேளையில் 180 trailer பார்த்து பிரமித்து விட்டேன். அதி அற்புதமான ஒளிப்பதிவுதான் காரணம். ‘மணிரத்னம் படமா?’ என்று அம்மா சந்தேகமாக கேட்டார். அதுவே படத்திற்கு மிகப் பெரிய பிளஸ். ஆனால் அடுத்த நாள் எங்கேயும் காதல் பார்த்து நொந்து போனதால், 180-௦க்கு ஒளிப்பதிவு பாடல்களைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்கக் கூடாது என்று முடிவு செய்தேன். சத்யம் திரையரங்கின் கூட்டுத் தயாரிப்பு என்பதால் சத்யம்-ல் தான் பார்க்க வேண்டும் என்று முதல் நாள் முதல் ஷோ பதிவு செய்தேன். நான் எதிர்பார்த்த இரண்டு விஷயங்கள் நிறைவைத் தந்ததால் படம் பெரிய ஏமாற்றம் அளிக்கவில்லை.
சமீபமாக தமிழ் சினிமாவில் யதார்த்தம் என்ற பெயரில் சவரம் செய்யாத முகம், பரட்டைத் தலையுடன் இருக்கும் அழுக்குக் கதாநாயகர்களைக் காட்டி, மதுரையைக் களமாகக் கொண்டு அரிவாள், கத்தி, ரத்தம், வன்முறை, பஞ்ச டயலாக், என்றெல்லாம் காட்டி உயிரை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். அவற்றிலிருந்து மிகப் பெரிய ஆறுதல் இப்படம். சென்னையில் உயர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அழகான நாயகன் நாயகியைப் பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. விண்ணைத்தாண்டி வருவாயாவிற்குப் பிறகு, சொல்லப்போனால் அதைவிட கலர்ஃபுல்லான அட்டகாசமான ஒளிப்பதிவுடன் மிகுந்த அழகியல் தன்மையுடன் உள்ளது இப்படம். அதற்காகவே இயக்குனர் ஜெயேந்திராவைப் பாராட்டலாம். ராஜீவ் மேனன் போல் இவரும் விளம்பரப் படங்களை இயக்கியுள்ளார் என அறிகிறேன்.
தான் ஆறு மாதத்தில் (நூற்றெண்பது நாட்களில்) இறந்து விடுவோம் தெரியும் ஒருவன், நேற்றைப் பற்றி யோசிக்காமல், நாளை பற்றி கவலைப் படாமல், இன்று, இப்போது ஒவ்வொரு கணங்களையும் சந்தோஷமாக கழிக்கிறான். இதுதான் படத்தின் ஒன்லைன். பல நாட்களுக்குப் பின் தமிழில் சித்தார்த். கச்சிதமாகப் பொருந்துகிறார். நாயகி நித்யா மேனனும் இளம் பெண் பத்திரிகையாளர் பாத்திரத்திற்கு பாந்தமாக இருக்கிறார். இவருக்கு அழகான பேசும் கண்கள். கேரளா கஃபே என்ற மலையாளப் படத்தில் பத்து குறும்படங்களுள் ஒன்றில் ஜெகதியுடன் பஸ்ஸில் கலாய்க்கும் ஒரு குறும்புப் பெண்ணாக நடித்தபோதே கவர்ந்தார். இதில் சற்று பூசினாற்போல் இருக்கிறார். இப்படி இருந்தால்தான் தமிழ் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்று யாராவது சொல்லி விட்டார்களா? பல காட்சிகளில் அன்தஹீன் என்ற பெங்காலிப் படத்தில் நடித்த ராதிகா ஆப்தேவை நினைவு படுத்துகிறார். இன்னொரு கதாநாயகியாக வரும் ப்ரியா ஆனந்த் ‘லீடர்’ படத்தில் செய்த துரு துரு பெண் கதாபாத்திரத்தில் வந்து உயரம் குறைவாக இருந்தாலும் தம் பாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். மௌலி, கீதாவும் வந்து போகிறார்கள்.
படத்தின் முக்கிய இரு நாயகர்கள் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் மற்றும் இசையமைப்பாளர் ஷரத் மதன் கார்க்கியின் பாடல் வரிகளையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். கடைசியில் வரும் போர்ச்சுகீசியப் பாடலுக்கும் சேர்த்து. உவேசுலா ஊது, சந்திக்காத கண்களில், நீ கோரினால் பாடல்கள், ஏஜே பாடல்கள் படமாக்க பட்ட விதம் அருமை. பாலசுப்ரமணித்திற்கு படத்தைப் போலவே வண்ணமயமான எதிர்காலம் இருக்கிறது. காட்சிகள் ஒவ்வொன்றையும் கண்களில் ஒற்றிக் கொள்ளலாம். Crystal Clear! ஹாசினி பேசும் படம் நிகழ்ச்சியில் வந்தால் சுஹாசினி கொண்டாடி விடுவார். பாடல்களில் கவர்ந்த ஷரத் பின்னணி இசையில் அவ்வளவாக கவரவில்லை.
கண்களுக்கும் காதுகளுக்கும் ராஜபோக விருந்தளித்த இயக்குனர் கதை திரைக்கதை விஷயத்தில் பத்திய சாப்பாடு போட்டுவிட்டார். மிகவும் சாதாரண கதை, தொய்வான திரைக்கதை படத்தின் மைனஸ். ‘அயன்’, ‘கோ’ படங்களுக்கு விறுவிறுப்பான திரைக்கதை, வசனம் எழுதிய எழுத்தாளர்கள் சுபா இதில் கோட்டை விட்டது வருத்தமாக உள்ளது.
சில காட்சிகள் கிங், ஓய் படங்களை நினைவு படுத்துகின்றன. மெஸ் வைப்பது, ஒரே பாடலில் குழந்தைத் தொழிலாளர்களுக்கு கல்வி அளிப்பது என்று நாகடத்தனமான விக்ரமன் பாணி காட்சிகள் சகிக்க முடியவில்லை. இரண்டாம் பாதி ஆரம்பித்ததும் முதல் பாதியே பரவா இல்லை என்றாகி விட்டது. ஒரு மருத்துவர் தம் உடல்நிலையைப் பற்றி அறிந்தால் இவ்வளவு பாதிக்கப் படுவாரா? எமனாக ஒரு கோட் அணிந்த நீக்ரோவைக் காண்பிக்கின்றனர். அவைதான் படத்தின் மிகப் பெரிய காமெடிக் காட்சிகள்.
பாடல்கள் மற்றும் ஒளிப்பதிவில் இருந்த புதுமை காட்சிகளில் இருந்து கொஞ்சம் சுவாரசியம் கூட்டியிருந்தால் நிச்சயம் ரசித்திருக்கலாம். நல்ல வேளையாக இறுதிக் காட்சி அழுவாச்சியாக இல்லாமல், இரண்டு நாயகியரில் ஒருவருடனும் சேராமல் பாசிட்டிவாக முடிக்கப் பட்டது சற்று ஆறுதலளித்தது. ஆனால் ஒரு காட்சியில் ஆறு மாதம் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. படத்தின் தலைப்பு Justify செய்யப்படவில்லை அட்டகாசமான ஒளிப்பதிவுக்காகவும் பாடல்களுக்காகவும், திரையரங்கு முழுதும் விசிலடித்து ஆரவாரம் செய்யும் சித்தார்த் ரசிகைகளை சைட் அடிப்பதற்காகவும் படத்தை ஒரே ஒரு முறை பார்க்கலாம். இல்லாவிட்டாலும் தீபாவளிக்குள் விஜய் டிவியில் ஒளிபரப்பினால் பார்க்கலாம்! சென்னை வாசிகள் சத்யம்/எஸ்கேப் திரையரங்குகளில் பார்த்தால் தெள்ளத் தெளிவான ஒளிப்பதிவை ரசிக்கலாம்.