RSS

Monthly Archives: October 2011

கங்கை நீரும் கானல் நீரும்

கல்லூரிப் பருவம் வரை தீவிர ரஹ்மான் ரசிகனாக இருந்த என்னை இளையராஜாவின் பக்தனாக மாற்றிய பாடல்களுள் ஒன்று. மனம் சரியில்லாத ஒரு நாள் இந்தப் பாடலைக் கேட்டபோது மயிலிறகால் வருடிய இதம் கிடைத்தது. அதிலிருந்து எப்போது மனது பாரமாக இருந்தாலும் நான் தேடும் சுமைதாங்கி ராஜாவின் இசையில் முதலில் இந்தப் பாடல்தான் கேட்பேன். சிந்து பைரவி ராகத்தில் அமைந்த அற்புதமான பாடல். குறிப்பாக இரண்டாம் இடையிசைச்சரத்தில் வரும் குழலோசை – Ultimate. வாலியின் வரிகளும் ராஜாவின் இசையும் இணைந்து மனதை இலேசாக்கும். பிரியமானவரின் தோளில் சாய்ந்துகொண்டு கவலைகளை மறப்பது போன்ற அனுபவத்தைக் கொடுக்கும்.

பல வருடங்களாக இப்பாடலின் ஒரு வரியில் ஒரு சந்தேகம் இருக்கிறது. கானல் நீரால் தீராத தாகம் கங்கை நீரால் தீர்ந்ததடி என்று ஒரு வரி வரும். இந்த வரி ஒரு பொதுவான உண்மை. கங்கை நீரால்தான் தாகத்தைத் தீர்க்க முடியும், கானல் நீரால் ஒருபோதும் முடியாது. அப்படியிருக்கையில் இந்த வரி மிகச் சாதாரணமாக இருக்கிறது. கதையின்படி மனைவியால் சந்தோஷத்தை இழந்த நாயகன் வழியில் சந்திக்கும் ஒரு பெண்ணிடம் தன் மன பாரத்தை இறக்கி வைக்கிறான். வாழ்க்கைத்துணையை கங்கை நீருக்கும், வழித்துணையை கானல் நீருக்கும் அல்லவா உருவகப் படுத்தியிருக்க வேண்டும்? அதுவே கங்கை நீரால் தீராத தாகம் கானல் நீரால் தீர்ந்ததடி என்றிருந்தால் கவித்துவமாக இருந்திருக்கும்.

இரண்டு வருடங்களுக்கு முன் நண்பர் மகேஷ் தன் பதிவொன்றில் இந்தப் பாடலைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தபோதும் இதைப் பின்னூட்டமாக இட்டேன். இப்போது அவர் வலைப்பூவை நீக்கிவிட்டார். விகடன் மேடையில் வாசகர் கேள்விகளுக்குப் பதிலளித்த கே.பி.யிடம் கேட்கத் தோன்றியது. சோம்பேறித்தனத்தால் எழுதிப் போடவில்லை. ட்விட்டரில் மதன்கார்க்கியிடம் இதுபற்றி கேட்டபோது என்னுடன் அவர் உடன்பட்டார். வாலியைச் சந்திக்க நேர்ந்தால் இந்தச் சந்தேகத்தைக் கேட்கச் சொல்லியிருக்கிறேன். பார்ப்போம்!

என்.சொக்கனின் தாள்/தாழ் சந்தேகத்திற்குப் பிறகு இதைப் பதிவு செய்யத் தோன்றியது.

 
10 Comments

Posted by on October 23, 2011 in Chummaa, Ilayaraja, K.Balachander, Music

 

அவள் ஒரு தொடர்கதையும் நானும்

அவள் ஒரு தொடர்கதை – என்னுள் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய படம். எனது 12-வது வயதில் பார்த்து பிரமிப்பூட்டி இயக்குனர் ஆகும் ஆசையைத் தூண்டியது. அதுவரை பாலசந்தரின் சின்னத்திரை மூலமாகத்தான் அறிமுகமாகி இருந்தார். அதன்பின் கே.பி.யின் படங்களைத் தேடித் தேடித் பார்த்தேன். அப்போது சன் மூவீஸ் சேனல் மிகவும் உதவியாக இருந்தது. 13 வயதைத் தொட்டிருக்கும் என் மாமா பெண் இன்னும் Harry Potter-ஐயும் கார்ட்டூனையும் மட்டுமே பார்க்கிறாள் 😦
அவள் ஒரு தொடர்கதை இரவுக்காட்சி பார்த்துவிட்டு சைக்கிளை திரையரங்கிலேயே விட்டுவிட்டு, வீட்டுக்கு வந்து தன் அப்பாவிடம் டோஸ் வாங்கியதாகவும், பின் பாலசந்தரிடம் உதவி இயக்குனராகும் வாய்ப்பு கேட்டு சென்றதாகவும் இயக்குனர் வஸந்த் ஒரு பேட்டியில் சொன்னார். அதைக் கேட்டதும் என்னைப் போலவே இன்னொருவருக்கும் அதே போன்ற தாக்கம் இருந்திருக்கிறதே என்று என் பிரமிப்பு இரட்டிப்பானது.
எம்.எஸ்.பெருமாளின் மூலக்கதையைக் கொண்டு கே.பி. திரைக்கதை-வசனம் எழுதி இயக்கிய இப்படம்  மலையாளத்தில் Aval oru Thudarukatha (Dubbing), தெலுங்கில் Anthu leni Katha, கன்னடத்தில் Benkiyalli Aralida Hoovu, ஹிந்தியில் Jeevan Dhaara, பெங்காலியில் Kabita என்று பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரித்விக் கட்டக்கின் Meghe Dhaka Tara படத்தின் தழுவல்தான் இப்படம் என்று சொல்லப்பட்டாலும் (நான் இன்னும் பார்க்கவில்லை) பெங்காலியிலும் ரீமேக் ஆனது ஆச்சரியம்.
பெங்காலி உட்பட அனைத்து மொழிகளிலும் கமல் ஒரு பாத்திரத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் மேலாளர் கதாபாத்திரம், கன்னடத்தில் பஸ் கண்டக்டர் கதாபாத்திரம், பெங்காலியில் அதே விகடகவி கதாபாத்திரம் என்று செய்தவர் ஹிந்தியில் மட்டும் தவற விட்டுவிட்டார். கன்னட அ.ஒ.தொ சுஹாசினியும் கமல்ஹாசனும் இணைந்து நடித்த இரண்டே படங்களில் ஒன்று. மற்றொன்று Y.Gee.மகேந்திரன்-சுஹாசினி நடித்த உருவங்கள் மாறலாம். சிவாஜி கடவுளாக நடித்தார். ரஜினி, கமல், ஜெயஷங்கர் உள்ளிட்டோர் Cameo Appearance செய்தனர். நல்ல வேளையாக அவள் ஒரு தொடர்கதை படத்தில் இப்படி ஒரு பாட்டு இல்லாமல் போனது.
கே.பி.யின் பெண் கதாபாத்திரங்களில் எனக்கு மிகவும் பிடித்தது கவிதா – நடமாடும் நெருப்புராட்(ச்)சஸி (அடுத்து சிந்து) அண்ணியின் காய்ச்சலுக்கு மருந்து வாங்க பணம் கொடுக்காமல் உதட்டுச்சாயம் வாங்க பணம் கொடுத்தனுப்புவது செயற்கையான, சினிமாத்தனமான குணாதிசயம் என்றாலும் அவளது திமிர் எனக்கு மிகவும் பிடிக்கும்.  முதல் படத்திலேயே கனமான கதாபாத்திரத்தை சுஜாதா அனாயாசமாக செய்திருப்பார். அவர் வாழ்நாள் முழுவதற்கும் இந்தப் படமே போதும். ஜெயப்ரதாவுக்கும், மாலா சின்ஹாவுக்கும் சுஜாதா அளவுக்கு திமிரும் மிடுக்கும் இல்லை. தெலுங்கில் மூர்த்தியாக ரஜினி கலக்கியிருப்பார் 🙂 கன்னடத்திலும் ஹிந்தியிலும் பார்த்ததில்லை. சுஹாசினியும் ரேகாவும் திறமையான நடிகைகள் என்றாலும் சுஜாதா அளவுக்குச் செய்திருப்பார்களா என்று பார்க்க வேண்டும். CD/DVD பல நாட்களாகத் தேடுகிறேன். பெங்களூருவில் கூட கிடைக்கவில்லை 😦
இன்றைய காலக்கட்டத்திற்கும் Relevant-ஆக இருக்கும் இப்படத்தை ரீமேக் செய்தால் இப்போதுள்ள கதாநாயகியரில் கவிதா கதாபாத்திரத்திற்கு யார் பொருந்துவார்? இப்போது இருப்பவர்கள் எல்லாம் எங்கே நடிக்கிறார்கள் என்று கேட்கிறீர்களா?. சில நாட்கள் முன்பு வரை என் சாய்ஸ் ஸ்நேஹா, பின் பத்மப்ரியா. இப்போது அனுஷ்கா 😉
 
4 Comments

Posted by on October 9, 2011 in Chummaa, Movies

 

வசந்தபாலனும் வணிகக் குப்பைகளும்

இன்று மாலை பலரும் சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளில் முறையே சந்திரமுகி மற்றும் சிவாஜி படங்களை விளம்பர இடைவேளைகளில் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர். ட்விட்டரிலும் கூட இப்படங்கள் இடைவேளை இன்றி ஓடிக்கொண்டிருந்தன. அறை நண்பர்கள் அனைவரும் டிவி முன் இருக்கையில் நான் மட்டும் மற்றொரு அறையில் பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்தேன். சந்திரமுகி இறுதிக் காட்சி மட்டும் ஜோதிகாவுக்காக பார்க்கச் சென்றேன். நண்பர் ஒருவர் ‘உடம்பு சரியில்லையா?‘ என்று கேட்டார். இல்லை என்றதும் ‘அப்பறம் ஏன் இவ்ளோ நேரம் படம் பாக்க வரல?’ என்றார். இரண்டு படங்களும் எனக்குப் பிடிக்காது என்று சொன்னதும் ஒரு வினோத ஜந்துவைப் பார்ப்பது போல் பார்த்தனர்.

சந்திரமுகியின் ஒரிஜினல் மணிச்சித்ரத்தாழ் தான் பிடிக்கும். ரஜினிக்காக வைக்கப்பட்ட    ஹீரோயிசக் காட்சிகளும் வடிவேலுவுடன் தோன்றும் மட்டமான நகைச்சுவைக் காட்சிகளும்  எரிச்சலின் உச்சம். ஆனாலும் ஜோதிகாவையும் ரஜினியின் வில்லத்தனமும் மிகவும் பிடிக்கும் என்பதால் இறுதிக் காட்சி மட்டும் பார்ப்பேன். தனது அனேக மலையாளப் படங்களைத் தமிழிலும் இயக்கும் ஃபாசில் ஏன் மணிச்சித்ரத்தாழை மட்டும் விட்டு வைத்தார்? ஷோபனாவையே நடிக்க வைத்திருக்கலாம். அல்லது அன்றைய பானுப்ரியா கூட அழகாகப் பொருந்தியிருப்பார்.

ஷங்கர் படத்தில் எனக்குப் பிடிக்காத படம் சிவாஜி. அதற்கு முன் வரை பாய்ஸ். நான் முதல் நாள் முதல் ஷோ பார்த்த முதல் ரஜினி படம் சிவாஜி. கல்கத்தாவில் இருந்தபோது தமிழ்ப் படங்களே வராது. நான் இருந்த மூன்று வருடங்களில் வெளியான இரண்டே படங்கள் சிவாஜி மற்றும் தசாவதாரம். அதனால் இரண்டையும் முதல் நாளே பார்த்தேன்.  தசாவதாரத்தை நான்கு முறை பார்த்தேன். ஆனால் சிவாஜியை ஒரு முறைக்கு மேல் பார்க்க முடியவில்லை. அது போன்ற ஒரு பிரம்மாண்டக் குப்பையை எடுக்க ஷங்கர் தேவையில்லை  ரஜினியின் ஒப்பனையில் மட்டுமே ஷங்கர் தெரிந்தார். இறுதியில் வரும் மொட்டை பாஸாக ரஜினி வரும் காட்சிகள் மட்டும் பிடிக்கும். ஆனால் எந்திரனில் ரஜினி தன்னை முழுவதும் இயக்குனரிடம் ஒப்படைத்து கடினமாக உழைத்திருந்தது Making of Endhiran-ல் பார்த்து பிரமித்துவிட்டேன்.  இனிமேலாவது ஹீரோவாக நடிக்காமல் அமிதாப் பச்சன் போல் கதையின் நாயகனாக படங்களைத் தேர்வு செய்து அவர் நடிக்க வேண்டும்.
இரண்டு படங்கள் முடிந்ததும் ஜெயா டிவியில் அரவான் இசை வெளியீட்டு விழா கொஞ்சம் பார்க்க நேர்ந்தது. அதற்கு சற்று முன் தான் பாடல்களைத் தரவிறக்கிக் கொண்டிருந்தேன். அறை நண்பர் ஒருவர் வசந்தபாலன் யார் என்று கேட்டார். ‘வெயில்‘, ‘அங்காடித் தெரு‘ படங்களை இயக்கியவர்.ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர். ஆல்பம் என்ற படத்தை முதலில் இயக்கினார்’ என்றேன். ‘அங்காடித் தெரு’ மட்டும் கேள்விப் பட்டிருப்பதாகவும் மற்ற எதுவும் ஹிட் ஆகவில்லையே என்றார். ஹிட் ஆகும் படங்கள் எல்லாம் நல்ல படங்கள் அல்ல என்று சொன்னேன். நல்ல படங்கள் தோல்வியடைந்து வணிகக் குப்பைகள் வெற்றிபெறும்போது ஒரு சினிமா ஆர்வலனாக மிகுந்த வேதனை அளிக்கிறது.
 ‘நல்ல படங்களை மட்டுமே எடுப்பேன் என்று ஒரு வெறியோடு இருப்பவர் வசந்தபாலன்’ என்று சேரன் சொன்னார். சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் என்ற நாவலில் ஒரு பகுதியை அரவான் படத்தின் கருவாக்கியுள்ளார். வசந்தபாலன் வணிகரீதியாக சமரசமும் செய்துகொள்ளாமல் தரமான படைப்புகளைக் கொடுக்க முயற்சிக்கும் ஓர் இயக்குனர். என்னைப் பொறுத்தவரை பாலு மகேந்திரா, மகேந்திரன் போன்றவர்களைப் போல் வரக்கூடியவர். *ஈரம்* படத்திலிருந்து ஆதியைப் பிடித்தது, பிரத்யேகமாக அவரது குரல் மிகவும் பிடிக்கும். பன்னிரண்டாம் நூற்றாண்டில் நடக்கும் பீரியட் கதை என்பதும், என் அபிமான பாடகர் கார்த்திக் முதன்முறையாக இசை அமைத்துள்ளார் என்பதும் எதிர்ப்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. ஹிந்தி நடிகர் கபீர் பேடி, மலையாள நடிகை ஸ்வேதா மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நிடித்துள்ளனர். நடிகர் பரத் கேமியோ ரோலில் நடித்துள்ளார். தமிழ் இலக்கியவாதிகள் சிலர் கலந்து கொண்டிருந்தது ஆச்சரியத்தை அளித்தது. அரவான் வெற்றி பெற வாழ்த்துகள்!
 
Leave a comment

Posted by on October 7, 2011 in Chummaa, Movies