RSS

வசந்தபாலனும் வணிகக் குப்பைகளும்

07 Oct

இன்று மாலை பலரும் சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளில் முறையே சந்திரமுகி மற்றும் சிவாஜி படங்களை விளம்பர இடைவேளைகளில் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர். ட்விட்டரிலும் கூட இப்படங்கள் இடைவேளை இன்றி ஓடிக்கொண்டிருந்தன. அறை நண்பர்கள் அனைவரும் டிவி முன் இருக்கையில் நான் மட்டும் மற்றொரு அறையில் பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்தேன். சந்திரமுகி இறுதிக் காட்சி மட்டும் ஜோதிகாவுக்காக பார்க்கச் சென்றேன். நண்பர் ஒருவர் ‘உடம்பு சரியில்லையா?‘ என்று கேட்டார். இல்லை என்றதும் ‘அப்பறம் ஏன் இவ்ளோ நேரம் படம் பாக்க வரல?’ என்றார். இரண்டு படங்களும் எனக்குப் பிடிக்காது என்று சொன்னதும் ஒரு வினோத ஜந்துவைப் பார்ப்பது போல் பார்த்தனர்.

சந்திரமுகியின் ஒரிஜினல் மணிச்சித்ரத்தாழ் தான் பிடிக்கும். ரஜினிக்காக வைக்கப்பட்ட    ஹீரோயிசக் காட்சிகளும் வடிவேலுவுடன் தோன்றும் மட்டமான நகைச்சுவைக் காட்சிகளும்  எரிச்சலின் உச்சம். ஆனாலும் ஜோதிகாவையும் ரஜினியின் வில்லத்தனமும் மிகவும் பிடிக்கும் என்பதால் இறுதிக் காட்சி மட்டும் பார்ப்பேன். தனது அனேக மலையாளப் படங்களைத் தமிழிலும் இயக்கும் ஃபாசில் ஏன் மணிச்சித்ரத்தாழை மட்டும் விட்டு வைத்தார்? ஷோபனாவையே நடிக்க வைத்திருக்கலாம். அல்லது அன்றைய பானுப்ரியா கூட அழகாகப் பொருந்தியிருப்பார்.

ஷங்கர் படத்தில் எனக்குப் பிடிக்காத படம் சிவாஜி. அதற்கு முன் வரை பாய்ஸ். நான் முதல் நாள் முதல் ஷோ பார்த்த முதல் ரஜினி படம் சிவாஜி. கல்கத்தாவில் இருந்தபோது தமிழ்ப் படங்களே வராது. நான் இருந்த மூன்று வருடங்களில் வெளியான இரண்டே படங்கள் சிவாஜி மற்றும் தசாவதாரம். அதனால் இரண்டையும் முதல் நாளே பார்த்தேன்.  தசாவதாரத்தை நான்கு முறை பார்த்தேன். ஆனால் சிவாஜியை ஒரு முறைக்கு மேல் பார்க்க முடியவில்லை. அது போன்ற ஒரு பிரம்மாண்டக் குப்பையை எடுக்க ஷங்கர் தேவையில்லை  ரஜினியின் ஒப்பனையில் மட்டுமே ஷங்கர் தெரிந்தார். இறுதியில் வரும் மொட்டை பாஸாக ரஜினி வரும் காட்சிகள் மட்டும் பிடிக்கும். ஆனால் எந்திரனில் ரஜினி தன்னை முழுவதும் இயக்குனரிடம் ஒப்படைத்து கடினமாக உழைத்திருந்தது Making of Endhiran-ல் பார்த்து பிரமித்துவிட்டேன்.  இனிமேலாவது ஹீரோவாக நடிக்காமல் அமிதாப் பச்சன் போல் கதையின் நாயகனாக படங்களைத் தேர்வு செய்து அவர் நடிக்க வேண்டும்.
இரண்டு படங்கள் முடிந்ததும் ஜெயா டிவியில் அரவான் இசை வெளியீட்டு விழா கொஞ்சம் பார்க்க நேர்ந்தது. அதற்கு சற்று முன் தான் பாடல்களைத் தரவிறக்கிக் கொண்டிருந்தேன். அறை நண்பர் ஒருவர் வசந்தபாலன் யார் என்று கேட்டார். ‘வெயில்‘, ‘அங்காடித் தெரு‘ படங்களை இயக்கியவர்.ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர். ஆல்பம் என்ற படத்தை முதலில் இயக்கினார்’ என்றேன். ‘அங்காடித் தெரு’ மட்டும் கேள்விப் பட்டிருப்பதாகவும் மற்ற எதுவும் ஹிட் ஆகவில்லையே என்றார். ஹிட் ஆகும் படங்கள் எல்லாம் நல்ல படங்கள் அல்ல என்று சொன்னேன். நல்ல படங்கள் தோல்வியடைந்து வணிகக் குப்பைகள் வெற்றிபெறும்போது ஒரு சினிமா ஆர்வலனாக மிகுந்த வேதனை அளிக்கிறது.
 ‘நல்ல படங்களை மட்டுமே எடுப்பேன் என்று ஒரு வெறியோடு இருப்பவர் வசந்தபாலன்’ என்று சேரன் சொன்னார். சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் என்ற நாவலில் ஒரு பகுதியை அரவான் படத்தின் கருவாக்கியுள்ளார். வசந்தபாலன் வணிகரீதியாக சமரசமும் செய்துகொள்ளாமல் தரமான படைப்புகளைக் கொடுக்க முயற்சிக்கும் ஓர் இயக்குனர். என்னைப் பொறுத்தவரை பாலு மகேந்திரா, மகேந்திரன் போன்றவர்களைப் போல் வரக்கூடியவர். *ஈரம்* படத்திலிருந்து ஆதியைப் பிடித்தது, பிரத்யேகமாக அவரது குரல் மிகவும் பிடிக்கும். பன்னிரண்டாம் நூற்றாண்டில் நடக்கும் பீரியட் கதை என்பதும், என் அபிமான பாடகர் கார்த்திக் முதன்முறையாக இசை அமைத்துள்ளார் என்பதும் எதிர்ப்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. ஹிந்தி நடிகர் கபீர் பேடி, மலையாள நடிகை ஸ்வேதா மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நிடித்துள்ளனர். நடிகர் பரத் கேமியோ ரோலில் நடித்துள்ளார். தமிழ் இலக்கியவாதிகள் சிலர் கலந்து கொண்டிருந்தது ஆச்சரியத்தை அளித்தது. அரவான் வெற்றி பெற வாழ்த்துகள்!
 
Leave a comment

Posted by on October 7, 2011 in Chummaa, Movies

 

Leave a comment