பொதுவாக பாலச்சந்தரின் படங்களில் திரையில் தோன்றாத உருவமில்லாக் கதாபாத்திரங்கள் இருக்கும். க்ளீஷேவாக இருந்தாலும் ரசிக்கும்படி சித்தரித்திருப்பார். படத்தின் மற்ற கதாபாத்திரங்கள் அக்கதாபாத்திரத்தைப் பற்றி அடிக்கடி சொல்லியோ, வெறும் குரலை மட்டுமே கேட்கச் செய்தோ Invisible Character-களைப் படைப்பதில் கே.பி.க்கு நிகர் அவரே. சில பிரத்யேக குணாதிசயங்களுடன் அழகாக Characterization செய்யப்பட்டு, திரையில் தோன்றாமலே நம்மை ரசிக்க வைக்கும்.
எதிர் நீச்சல் படத்தில் ‘இருமல்’ தாத்தா, தில்லு முல்லுவில் ரஜினியின் அப்பா அய்யம்பேட்டை அறிவுடை நம்பி, சொல்லத்தான் நினைக்கிறேன்-ல் சமையல்காரர் ஆனா ரூனாவின் மனைவி, மனதில் உறுதி வேண்டும்-ல் எஸ்.பி.பி.யின் மனைவி(One of the best), அழகன்-ல் மம்மூட்டியின் மனைவி, கல்கியில் ஃபாத்திமா பாபுவின் கணவர் போன்றவை திரையில் தோன்றாமலே படம் நெடுக குறிப்பிடப்படும்.
அதுமட்டுமன்றி உர்யிரற்றப் பொருட்களைக் கூட கதாபாத்திரம் ஆக்கி உயிரூட்டி விடுவார். அவர்கள் ‘ஜூனியர்’, அச்சமில்லை அச்சமில்லை ‘அருவி’ (டைட்டிலில் இவர்களுடன் ‘குற்றாலம் அருவி’ என்று போடப்படும்’!), அழகன் ‘தொலைபேசி’ (இதுவும் டைட்டில் கார்டில் இடம்பெறும்), அபூர்வ ராகங்கள் ‘நாற்காலி’, வானமே எல்லை ‘பணப்பெட்டி’, இருகோடுகள் FILE-ஐயும் புதுப் புது அர்த்தங்க ‘அமலா கட் அவுட்’டையும் கூட சேர்த்துக் கொள்ளலாம்.
தெய்வத்திருமகள் படத்தில் விக்ரம் மனைவி கதாபாத்திரமான பானுவை இறுதி வரைக் காட்டாமல் என் Curiosity-ஐ அதிகரித்துவிட்டனர். ஏற்கனவே இதுபோல் சில படங்களில் நடிகர்களைத் திரையில் காட்டாமல் புகைப் படங்கள் மட்டும் காட்டப் பட்டுள்ளன. மகாநதியில் கமலின் மனைவியாக ஜெயசுதா புகைப்படத்தில் மட்டும் காட்டப் படுவார். அதுபோல் ‘மேட்டுக்குடி’யில் ஜெமினியின் மனைவியாக கே.ஆர்.விஜயாவின் படம், ‘நினைவிருக்கும் வரை’யில் சுஜாதாவின் கணவராக முத்துராமனின் படம், ‘சிறுத்தை’-ல் கார்த்தியின் இறந்துபோன மனைவியாக பூமிகா போன்றவர்களின் புகைப்படங்கள் மட்டும் காட்டப்பட்டுள்ளன.
ஆனால் ‘தெய்வத்திருமகள்’-ல் ஃபோட்டோவில்கூட பானு காட்டப் படமாட்டார். அழகன் அளவுக்கு ஈர்க்காவிட்டாலும் என் மண்டைக்குள் நண்டைப் பிராண்டவிட்டதில் இயக்குனர் ஜெயித்துவிட்டார்! அந்தப் புகைப்படத்தை யார் பார்க்கிறார்களோ அவர்களது பிம்பம் மட்டுமே தெரியும். பின் நவீனத்துவம் அடிப்படையில் அலசி ஆராய்ந்ததில் சில குறியீடுகள் புலப்பட்டன. குழந்தை பிறந்து பானு இறந்ததும் அதை விக்ரம் பார்க்கும்போது அவர் பிம்பம் தெரியும். அப்போது அவர்தான் குழந்தைக்கு அம்மாவாகவும் இருக்கிறார். பின் நிலா வளர்ந்து அந்த ஃபோட்டோவைப் பார்க்கும்போது அவள் பிம்பம் தெரிகிறது. அப்போது அவள் விக்ரமுக்கு அம்மாவாக இருக்கிறாள். பின் அமலா பால் அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போது அவரது பிம்பம் தெரிகிறது. அதிலிருந்து நிலாவுக்கு அமலா பால்தான் அம்மா ஸ்தானத்தில் இருந்து பார்த்துக் கொள்கிறார் இதுபோன்ற பின் நவீனத்துவக் குறியீடுகள் வேறு யாருக்காவது தோன்றியதா? 😉
கடைசி இரண்டு பத்திகளைக் கண்டு கொள்ளாமல் தமிழ்த் திரையில் தோன்றாத மற்ற கதாபாத்திரங்களை மறுமொழியிடவும் 🙂