நண்பர் மகேஷ் அனுப்பியிருந்த கேள்விகள்.
1.எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள் ?
வயது நினைவில்லை. என் நினைவறிந்து என் தந்தை மற்றும் பாட்டியுடன் (அவர் ஒரு சினிமா பைத்தியம்) திரைஅரங்கில் நான் அடிமை இல்லை, ஊமை விழிகள் பார்த்த ஞாபகம் உள்ளது. சிறுவயதில் ஊமை விழிகளின் கதையை, காட்சி மாறாமல் கோவையாக சொல்வேனாம். அம்மா சொல்லுவார், எனக்கு அது நினைவில்லை.
என இளமைப் பருவத்தை சினிமாவே ஆக்கிரமித்தது எனலாம். தமிழ் எழுதப் படிக்கக் கற்றுக் கொடுக்கும்போதுகூட என் அப்பா சினிமாவின் பெயர்களும் நடிக நடிகையரின் பெயர்களும்தான் எழுதப் படிக்க வைத்தார். கமல், ரஜினி என்று எழுதும்போது பிழைகள் வரும். ஆனால் அம்பிகா, ராதா, மாதவி என்று பிழையின்றி எழுதுவேன். தேர்வில் முதல் மதிப்பெண் வாங்கினால் வீட்டில் சினிமாவுக்குக் கூட்டிச்செல்வார்கள். அதற்காகவே நன்றாக படித்தேன்.
2.கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
சுதந்திர தினத்தன்று DVD-ல் “அங்காடித் தெரு” பார்த்தேன். ஏர்டெல் DTH வேலை செய்யாததால் டிவியில் சிறப்பு நிகழ்ச்சிகளைக் காண முடியாமல் போயிற்று. வீட்டில் பொழுது போகாமலிருந்த தாத்தா பாட்டிக்காக அங்காடித் தெரு புதிய LCD TVயில் திரை இட்டுக் காண்பித்தேன். மிகவும் சோகம் என வருத்தப் பட்டனர். அற்புதமான முயற்சி. அதீத சோகத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம் என தோன்றியது.
அன்றிரவு மூன்று முடிச்சு படம் பார்த்தேன். நூறு தடவைக்கு மேல் பார்த்தாலும் அலுக்காத சில படங்களுள் இதுவும் ஒன்று. காரணம் நடிகர்களின் மிகச் சிறந்த நடிப்பாற்றல், கூர்மையான வாசனைகள், இனிமையான பாடல்கள், எல்லாவற்றிற்கும் மேலாக கே.பி. – The Real Star Maker!
3.கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
மதராசபட்டினம். இரண்டாம் முறை பார்த்தது மிகவும் ஸ்பெஷல். அன்று இயக்குனர் மணிரத்னத்தையும் நடிகை சுஹாசினியையும் காண நேர்ந்தது (Courtesy: Inception Preview Show). மூன்றாம் முறையாக 14 ஆகஸ்ட் அன்று இரவுக் காட்சி காண விழைந்தேன். ஆனால் நண்பர்கள் Grown Ups என்ற ஆங்கிலப் படத்திற்கு அழைத்துச் (in fact இழுத்து) சென்று விட்டனர்.
4.உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
சினிமாவிற்கும் எனக்கும் உள்ள உறவு “சிந்து பைரவி” சிந்துவுக்கும் சங்கீதத்துக்கும் உள்ள உறவு போன்றது (சுவாசம் மாதிரி). அரசியலுக்கும் எனக்கும் உள்ள உறவு பைரவிக்கும் சங்கீதத்துக்கும் உள்ள உறவு போன்றது (கிலோ என்ன விலை?). பொதுவாக சினிமாவால் நான் தாக்கப்படுவதில்லை. எந்திரன் இசை வெளியீட்டு விழாவில் சுஜாதா இல்லையே என்ற ஆதங்கம்தான் இருந்தது.
5.மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
அவள் ஒரு தொடர்கதை, அரங்கேற்றம், வறுமையின் நிறம் சிகப்பு, மூன்றாம் பிறை, வானமே எல்லை, மகாநதி, அன்பே சிவம், கன்னத்தில் முத்தமிட்டால்.
6.தமிழ் சினிமா இசை?
தாராளமாக காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம். அத்தகைய மகத்தான இசைஅமைப்பாளர்கள் நம் வசம் உள்ளனர். நினைவு தெரிந்த நாள் முதல் ஏ.ஆர்.ரஹ்மான் பிரியனாக இருந்து, பின் இசைஞானியின் வெறியனாக மாறியவன். நல்ல இசையையும் பாடல்களையும் மிகவும் ரசிப்பவன். பின்னணி இசை என்றால் ராஜா மட்டுமே ராஜாங்கம் செய்ய முடியும்.
உதாரணம்.
காதலுக்கு மரியாதை திரைப்படம் முதலில் மலையாளத்தில் வெளிவந்தது யாவரும் அறிந்ததே. அதன் உச்சக் கட்ட காட்சி அப்படத்தின் உயிர் நாடி போன்றது. அக்காட்சியை மலையாளத்திலும் தமிழிலும் பாருங்கள். பெரும்பாலும் அதே நடிகர்களே நடித்துள்ளனர். ஆனாலும் பின்னணி இசையினால் மலையாளத்திலிருந்து தமிழ் தனித்து நிற்கிறது.
http://www.youtube.com/watch?v=hTdKUMYIp04 (தமிழ்)
http://www.youtube.com/watch?v=udbcSZO2SCY (மலையாளம்)
7.தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தமிழ் சினிமாவில்தான் தேர்ச்சி பெற்ற கலைஞர்கள் உள்ளனர்.
நடிப்பு, இசை, நடனம், இயக்கம், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, படத்தொகுப்பு, கலை இயக்கம் என இந்தியாவையே, இல்லை உலகையே ஆளும் வல்லுனர்கள் நம்மவர்கள். ஆனால் அவர்கள் பாலிவுட், ஹாலிவுட் மோகத்தால் தமிழை மறந்து கொண்டு வருகின்றனர். அவர்கள் தமிழ்ப் படங்களில் மீண்டும் ஆர்வம் செலுத்தினால் நிச்சயம் தமிழ் சினிமாவின் எதிர்காலம் சிறப்பாக விளங்கும்.
8.தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
நிறைய வாசிப்பதுண்டு. இணையம், வலைப்பூக்கள், தினசரி, வார இதழ்கள், மாத இதழ்கள் என் எல்லாவற்றிலும் வாசிப்பதுண்டு. சமயத்தில் எனது வலைப்பூவிலும் பதிப்பதுண்டு. அலுவலகத்தில் வேலையைவிட சினிமா சம்மந்தப்பட்ட வலைதளங்கள்தான் அதிகம் பார்ப்பேன். நண்பர்கள் மத்தியில் நடமாடும் சினிமா என்சைக்ளோபீடியா என்ற பட்டப் பெயரும் உண்டு 🙂
9.அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. சினிமா என்ற ஊடகம் அசாத்திய வலிமை பெற்றது. தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலங்களில்கூட மக்கள் சினிமா பார்க்காமல் இருந்ததில்லை. என் பாட்டி வயிற்றில் என் அப்பா நிறைமாதமாக இருந்தபோதுகூட அவர் பாலும் பழமும் இரவுக்காட்சி பார்த்துவிட்டு அதிகாலையில் பெற்றெடுத்தார். நான் பிறந்த பத்தாவது நாளில் என் அம்மா, மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனவுடன் ‘சலங்கை ஒலி’ காணச் சென்றார். தமிழகத்தின் முதல்வர்களிலிருந்து அவர்கள் வாரிசுகள் வரை சினிமாதான் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. இவ்வளவு வலிமை வாய்ந்த சினிமாவை தமிழர்கள் என்றில்லாமல் மக்களிடமிருந்து பிரிப்பது சாத்தியமில்லை. அப்படி ஒன்று நடந்தால் நான் மற்ற மொழி திரைப்படங்களைப் பார்ப்பேன் (தமிழில் சினிமா கிடையாது என்பதுதானே கேள்வி).
12.965682
80.256958