RSS

Monthly Archives: December 2010

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

அடுத்த ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முன் கடந்த ஆண்டை நினைவுகூர எண்ணி இப்பதிவு.

பொதுவாக நாம் வருடத்தின் முதல் தினத்தில் எப்படி இருக்கிறோமோ அப்படித்தான் அந்த ஆண்டு முழுதும் இருப்போம் என்ற மூட நம்பிக்கையைத் தகர்த்தது இவ்வாண்டு. 2010-ன் ஆரம்பமே உடல் நிலை சரியில்லாமல் மந்தமாக தொடங்கியது. அலுவலகத்திற்கு மட்டம் போட மட்டும் பொய்க்காய்ச்சல் வரும். ஆனால் 2009  இறுதியில் நிஜமான குளிர் காய்ச்சல் வந்து டிசம்பர் 31 இரவு ஏற்காடு எக்ஸ்ப்ரஸில் ஈரோடு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தேன். அதனால் 12 மணிக்கு SMS-ல் மட்டும் நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை அனுப்பிக் கொண்டிருந்தேன். ஆனால் எல்லாவற்றையும் மீறி 2010 எனக்கு ஓர் ஆரோக்கியமான ஆண்டாக இருந்தது. Personal வாழ்க்கையிலும் Professional வாழ்க்கையிலும் நிறைய நல்ல மாற்றங்கள்.

2009-ல் அதீதமாக பணியிலிருந்த பளு 2010ல் பனிபோல் கரைந்தது. பெரிதாக ஒன்றும் இல்லையென்றாலும் தேவைக்கேற்ற சம்பள உயர்வு, பதவி உயர்வு, என் அலுவலகத்திலும் Client  அலுவலகத்திலும் நல்ல பெயர் என்று ப்ரோஃபஷனலாக நல்ல மாற்றங்கள் என்றால் அம்மாவின் பணி மாற்றம், சென்னையில் செட்டில் ஆகிக்கொண்டிருப்பது, ஊரிலுள்ள வீட்டைப் புதுப்பித்தது என்று சொந்த வாழ்க்கையிலும் பல நல்ல மாற்றங்கள். விட்டுப்போன சில உறவுகளையும் புதுப்பித்துக் கொண்டேன்.

நட்பு வட்டம் விரிந்து நிறைய நண்பர்கள், அதுவும் என் எண்ண அலைவரிசைகளுடன் ஒத்துப் போகும் நண்பர்கள் (Like-minded Friends) கிடைத்துள்ளனர். வாரம் ஒரு படமாவது பார்த்துவிட்டிருந்தேன். கல்லூரியை bunk செய்து  சினிமாவுக்குச் சென்றதுபோல் அலுவலகத்திற்கு மட்டம் போட்டு முதல் நாள் முதல் ஷோ பார்த்தது, (விண்ணைத்தாண்டி வருவாயா நூறாவது நாள் ஷோ பார்த்தது டூ மச் என்ற நண்பர்கள், முதல் நாளே தமிழிலும் ஹிந்தியிலும் ராவணன்/ராவண் பார்த்தது ட்வென்டி மச் என்றார்கள்). சனிக்கிழமையானால் அம்மாவே ‘இன்னைக்கு எந்த படம்?’ என்று கேட்பார். சனி இரவு வீட்டில் இருந்தால் பாட்டிகூட ஆச்சரியமாக பார்ப்பார். அந்த அளவுக்கு என் சினிமா பைத்தியத்துக்குத் தீனி போட்ட வருடம். சென்ற மூன்று வருடங்களில் நான் அதிகமாக பார்த்துக் கொண்டிருந்த ஹிந்தி படங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து விட்டதில் சிறு வருத்தமே.
பல வருடங்களாக விடுபட்டுப் போன புத்தக வாசிப்பு என் பாட்டியின் காரணமாக மீண்டும் கிடைத்தது அவருக்காக நான் விரும்பும் புத்தகங்கள் வாங்க ஆரம்பித்து என்னளவில் ஒரு குட்டி நூலகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். (வாங்கிய சில நூல்களை இன்னும் படிக்கவில்லை என்பது வேறு விஷயம்) சுஜாதாவைத் தாண்டியும் மற்ற எழுத்தாளர்களையும் தேடித் பிடித்து படிக்க ஆரம்பித்திருக்கிறேன். இதற்குப் பெரிதும் உறுதுணையாய் இருப்பது இணையம். மூலம் பல இணைய நண்பர்களின் ஆரோக்கியமான நட்பு  கிடைத்துள்ளது. ட்விட்டரில் சென்ற வருடமே கணக்கைத் துவங்கியிருந்தாலும் இந்த ஆண்டுதான் அதிகமாக அதில் இயங்கியுள்ளேன். சென்ற வருடம் சீந்தப்படாமல் இருந்த ஃபேஸ்பூக் நான்கு ஆண்டுகள் என் சுவாசமாக இருந்த ஆர்க்குட்டை மறக்கச் செய்துவிட்டது. தமிழில் என்னை பதிவெழுதத் தூண்டிய சில பதிவர்களுக்கு என்றும் கடமைப்பட்டவனாவேன்.
முறையாக சங்கீதம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற பல வருடக் கனவையும் நிறைவேற்றிக் கொண்டேன். கிட்டார் வாசிக்கும் ஆசியில் கிட்டார் வாங்கி விரல்களில் ஏற்படும் வலி பொறுக்காமல் கைவிட்டுவிட்டேன். பாடினால் மற்றவர்களுக்குத்தானே காது வலி ஏற்படும் 😉 அர்த்த ஜாமத்தில் பாடி, பதிவு செய்த கோப்புகளை நண்பர்களுக்கு அனுப்பி அவர்களைக் கேட்க வைத்து இம்சித்தேன். கேட்ட அனைவருக்கும் என் மன்னிப்பு கலந்த நன்றிகள்.
முத்தாய்ப்பாக இவ்வாண்டை நிறைவு செய்தது டிசம்பர் மாதம். அதற்குத் தனிப் பதிவே எழுதலாம். சங்கீதக் கச்சேரி, சர்வதேச திரைப்பட விழா, நூல் வெளியீட்டு விழா என்று களை கட்டியது. என் வாழ்க்கையில் செய்யவே மாட்டேன் என்று தீர்மானமாக நம்பிக் கொண்டிருந்த Trekking நண்பர்களின் அன்புத் தொல்லையால் நிறைவேறியது. நிறைய இன்பச் செலவுகள் செய்தது மனநிறைவைத் தந்தது. என் அபிமான இணைய நண்பர்களுடன் நட்பு வலுப்பெற்றது. ஆறு மாதமாக மைசூரில் Training-ல் இருந்த என் தங்கைக்கு சென்னையில் posting கிடைத்து நேற்று முன்தினம் வந்து சேர்ந்தாள்.
காதல் வாழ்க்கை மட்டும் வழக்கம்போல் இருந்தது. Single-ஆக இன்னொரு வருடம் கழிந்தது. Numerology-ல் எனக்குக் கொஞ்சம் நம்பிக்கை உண்டு. என் ராசி என் 1 என்பதால் 1, 10, 19, 28 வயது நடக்கையில் என் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் இருக்கும். 1வது வயது எனக்கு நினைவில்லை, 10-வது வயதில் பள்ளி, இருப்பிடம், நண்பர்கள் என மாற்றங்கள், 19-வது வயதில் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு என் பொற்காலம் என்றே கூறலாம். இப்போது 28-வது வயதிலும் நினைத்தது போல் இனிய மாற்றங்கள் நடந்தது இன்னும் ஆறு மாதங்களில் காதல் வாய்க்கிறதா என்று பார்ப்போம். இந்த ஆண்டைப் போலவே அடுத்த ஆண்டும் இனிதாக அமைய வேண்டுகிறேன்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 🙂
 
4 Comments

Posted by on December 31, 2010 in Celebrations, Chummaa, Memories n Memoirs

 

சென்னையில் திருவையாறு – நித்யஸ்ரீ மகாதேவன் – 18.12.10

நான் ஈரோட்டிலும் கோவையிலும் சில கச்சேரிகளுக்குச் சென்றிருந்தாலும் சென்னையில் இதுவரை ஒரே ஒரு கச்சேரிதான் கேட்டிருக்கிறேன். சென்ற வருடம் சுதா ரகுநாதனின் மார்கழி மஹா உற்சவம் நிகழ்ச்சியின் கச்சேரி. அதன் பிறகு இன்று நித்யஸ்ரீ மகாதேவன் காமராஜர் அரங்கில் பாடிய ‘சென்னையில் திருவையாறு’ கச்சேரி. இதுநாள் வரை அனுமதி இலவசம் கச்சேரிகளுக்கு மட்டுமே போய்க்கொண்டிருந்தேன். டிக்கெட் வாங்கிக் கொண்டு போன முதல் கச்சேரி என்ற பெருமைக்குள்ளாகிறார் நித்யஸ்ரீ. சுதாவிற்குக் கிட்டாத பெருமை!

அம்மாவுக்கு சென்னையில் முதல் கச்சேரி.  அம்மாவுக்கும் எனக்கும் ஒரு வாரம் முன்பே ஆன்லைனில் டிக்கெட் புக் செய்து கொண்டேன். பாட்டிக்கு நெடுநாளாக பாம்பே ஜெயஸ்ரீயின் கச்சேரியை மியூசிக் அகாடெமியில் கேட்க வேண்டுமாம்.  மியூசிக் அகாடமியில் டிக்கெட்டை நேரில் போய் காலையில் வாங்க வேண்டுமாம். அதனால் அவரது ஆசையை இம்முறை நிறைவேற்ற முடியவில்லை. மாமாவின் நண்பர் மனைவியான ரஞ்சனி (காயத்ரி) கச்சேரிக்கு இலவசமாக டிக்கெட் கிடைத்தாலும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்!

திரைப்பட விழாவின் நிகழ்ச்சி நிரல் அப்போது தெரியாததால் கச்சேரிக்கு புக் செய்துவிட்டேன். பின்புதான் ஷெட்யூல் கிடைத்தது. அதனால் சனிக்கிழமை அரை நாள் வேலை முடிந்ததும் உட்லண்ட்ஸ் சென்று போலந்து படமான ALL THAT I LOVE மற்றும் பிரெஞ்சு படமான QUEEN OF HEARTS பார்த்துவிட்டு காமராஜர் அரங்கம் வந்தடைந்தபோது சொல்லிவைத்தார் போல் அம்மாவும் வந்து சேர்ந்தார். கச்சேரிக்கு வந்திருந்த கூட்டத்தைக் கண்டதும் திகைத்துத்தான் போனேன். காரணம் இலவசக் கச்சேரிக்குக் கூட ஈரோட்டிலும் கோவையிலும் இந்த அளவு கூட்டத்தைப் பார்க்க முடியாது. சென்னையில் இலவசக் கச்சேரியொன்றை ஒன்றரை மணி நேரம் அரங்கின் வெளியில் டிவியில் சுதாவைப் பார்த்துக் கேட்டுக் கொண்டிருந்தது வேறு விஷயம். தள்ளுமுள்ளுகளுக்கிடையே அம்மாவுடன் இருக்கையில் அமர்ந்தேன். ‘பட்டுப்புடவை சரசரக்க மாமிகளும் வெள்ளை ஜிப்பாக்கள் மாமாக்களும்’ என்பது குறைந்து ஜீன்ஸ் அணிந்த இளைஞர் இளைஞிகளையும் அதிகமாக காண முடிந்தது. நான்கு நாட்கள் முன் சாருவின் நூல் வெளியீட்டு விழாவில் வெறிச்சோடி இருந்த அரங்கமா இது என்று ஆச்சரியப்பட்டேன்!

சிந்துபைரவி படத்தில் ஜே.கே.பி அறிமுகமாகும் மஹா கணபதிம் பாடல் போல் நித்யஸ்ரீயின் ச-ப-ஸ ஆலாபனையுடன்  திரை உயர்ந்தது. பிரம்மாண்டமான மேடையில் பக்க வாத்தியக் கலைஞர்கள் (வயலின், மிருதங்கம், கடம், கஞ்சிரா) புடைசூழ நடுவில் அமர்ந்திருந்த நித்யஸ்ரீயைப் பார்க்கையில் அல்லிக் குளத்தில் மலர்ந்திருந்த தாமரை போல் இருந்தார். அருகில் ஒரு குமுதமலர் தம்புராவில் சுருதி சேர்த்துக் கொண்டிருந்தது. முதல் பாடலாக கம்பீர நாட்டையில் ஊத்துக்காடு வேங்கட கவி இயற்றிய ‘ஸ்ரீ விக்னம் ராஜம் பஜே’வில் துவங்கினார். தொடர்ந்து மலயமாருதத்தில் தியாகராஜ சுவாமிகளின் கீர்த்தனை. இளையராஜாவின் ஊமை நெஞ்சின் சொந்தம் மற்றும் கண்மணி நீ வர காத்திருந்தேன் நினைவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து விஸ்தாரமாக நளின காந்தியில் ஆலாபனை செய்து முத்துத்தாண்டவர் ஈசன் மேல் இயற்றிய பாடலைப் பாடினார். நளின காந்தியை நித்யஸ்ரீ பாடும்போது கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பாடலும், அப்படத்தில் ஐஸ்வர்யா ராய் சங்கீதம் கற்றுக் கொள்ளும் இடத்தில் வரும் நளினகாந்தி ஆலாபனையை (அதிலும் நித்யஸ்ரீ) நினைவூட்டியது. அம்மா சரியாக ‘எந்தன் நெஞ்சில் நீங்காத..’ நளினகாந்திதானே ?’ என்றார் நூற்றி எட்டாவது முறையாக! கேதாரத்தை ஒத்து இருக்கும் நளின காந்தியின் ஆலாபனையில் தேஷ் ராகம் ஒரு கணம் தோன்றி மாயமானது போல் உணர்ந்தேன்.
அதன் பின் முத்துச்வாமி தீட்சிதரின் மிக பிரபலமான கீர்த்தனை ‘ஸ்ரீ ரங்கபுர விஹாரா’ பாடலை பிருந்தாவன சாரங்காவில் துவங்கியதும் ரசிகர்கள் ‘உச்’ கொட்டினர். மத்யமாவதி போலிருந்த பிருந்தாவன சாரன்காவைத் தழுவியது ‘நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்’. பின் ஜிங்காளா என்னும் அரிய ராகத்தில் தியாகராஜரின் பாடலொன்றைப் பாடினார். நாட்டுப்புறப் பாடலின் தாள லயம் போலிருந்தது. ரசிகர்கள் அதற்கேற்ப கைதட்டி மகிழ்ந்தனர். அதைத் தொடர்ந்து ஆபேரி/கர்நாடக தேவகாந்தாரி/பீம்ப்ளாஸ் என்றெல்லாம் அழைக்கப்படும் ராகத்தில் ஒரு பாடல் பாடினார். எப்படி பாடினரோ என்ற கீர்த்தனையைப் போலவே இருந்தது. பின் கச்சேரியின் முக்கியமான அம்சமான ராகம் தானம் பல்லவிக்கு சிம்மேந்திர மத்யமம் ராகத்தை எடுத்துக் கொண்டார். சுவாதி திருநாள் மகாராஜாவின் கீர்த்தனை. ஆலாபனையின்போது ‘அசைந்தாடும் மயில் ஒன்றா’ என்று அம்மா அபத்தமாக கேட்டார். ‘அது ஊத்துக்காடு பாடல்’ என்றேன் சற்று சலிப்புடன். சிம்மேந்திர மத்யமத்தில் அமைந்த அற்புதமான பாடலான ஆனந்த ராகத்தையும் அதன் ஹிந்தி பாடலுமான சாரா ஏ ஆலம், நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே, தாலாட்டும் பூங்காற்று நானல்லவா, இளையராஜாவின் பாடல் என்று வெகு நாட்கள் எண்ணிக் கொண்டிருந்த அந்த டெம்ப்ளேட்டில் பாலபாரதி இசையமைத்த தாஜ்மஹால் தேவையில்லை என்று அசை போட்டுக்கொண்டிருந்தேன். இந்த ராகத்தை மற்ற இசையமைப்பாளர்கள் கையாண்டதுபோல் தெரியவில்லை. நெரவலின்போது ஸ்வரஜதியில் அமர்க்களப்படுத்தி விட்டார். லோக்கலாக பின்னி பெடல் எடுத்துவிட்டார்! ஆலாபனையின்போது சிலர் எழுந்து சென்றனர். பாடகர் ஓய்வு எடுத்துக் கொள்ளும் தனியாவர்தனத்தின் போது சிலர் பலராயினர். ஆனாலும் கூட்டம் இருந்தது. மிருதங்கக் கலைஞர் அபாரமாக வாசித்தார். அவர் நித்யஸ்ரீயின் தகப்பனார், டி.கே.பட்டம்மாளின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகம் தானம் பல்லவியால் களைப்புற்ற ரசிகர்கள் அடுத்து பாரதியார் பாடல் என்றதும் History Class முடிந்து P.E.T Period வந்தது போல் உற்சாகமாகும் பள்ளிக் குழந்தைகள் போல் உற்சாகமாயினர். தனம் தரு கல்வி தரும் என்ற அபிராமி அந்தாதி விருத்ததைத் தொடர்ந்து பிருந்தாவனியில் ஓம் சக்தி ஓம் சதி ஓம் பாடலைப் பாடினார். எனது மூன்றாம் வகுப்பு நியாபகம் வந்தது. ஒரு ஃப்ரீ பீரியடில் எங்கள் தமிழ் ஆசிரியை சொல்லிக் கொடுத்த பாடல் பசுமையாக நெஞ்சில் இருந்தது. பல வருடங்கள் கழித்துக் கேட்டாலும் நினைவில் இருந்தது சில வார்த்தைகளைத் தவிர. பலத்த கரகோஷத்தில் முடிந்தது.
அடுத்து அவர் பாடிய பாடல்தான் கச்சேரியின் ஹைலைட். ராகமாலிகை என்று ஒன்றுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடுவது வழக்கம். பொதுவாக சரணங்களில் ராகங்கள் மாறும் அல்லது பல்லவி ஒரு ராகத்தில் அனுபல்லவி ஒரு ராகத்தில் சரணம் ஒரு ராகத்தில் என்றிருக்கும். ஆனால் இரண்டு ராகங்களை எடுத்துக் கொண்டு ஒரு வரி ஒரு ராகம் பாடி அடுத்த வரி இன்னொரு ராகமாக மாறி மாறி பாடுவதை நான் கேட்டதில்லை. கந்தனும் கண்ணனும் என்ற தலைப்பில் ஷண்முகப் ப்ரியா ராகத்தை முருகனுக்கும் மோகனம் ராகத்தைக் கண்ணனுக்கும் எடுத்துக் கொண்டு ராகம் மாற்றி மாற்றிப் பாடி பிரமாதப் படுத்தினார். இதுபோன்ற வித்தியாசமான முயற்சிகளையும் அரிய ராகங்களைப் பாடுவதிலும் நித்யஸ்ரீக்கு நிகரில்லை. கேட்டவர் அனைவரும் மெய்மறந்து போனோம். வரிகளும் அருமையாக இருந்தன. புதிய வார்ப்புகள் படத்தில் வரும் தம்தன தம்தன தாளம் வரும் ஷண்முகப்ரியாவிலும் வான் மேகங்களே மோகனத்திலும் அமைந்தது. பிறகுதான் என் மாமா மூலம் தெரிந்தது இப்பாடலை முன்பே ஜெயா டிவியின் மார்கழி மஹா உற்சவம் நிகழ்ச்சியில் பாடியுள்ளார்.
மீண்டும் ஒரு பாரதியார் பாடல் என்று திலங் ராகத்தில் ஆலாபனை செய்தார். சாந்தி நிலவ வேண்டும் என்று நினைத்தேன். மாறாக பாரத சமுதாயம் வாழ்கவே என்று தன் குருவும் பாட்டியுமான டி.கே பட்டம்மாள் திரைப்படத்தில் பாடிய பாடலைப் பாடினார். ரசிகர்களிடையே மீண்டும் உற்சாகம் ஊற்றெடுத்தது. அதன் பின் கலைஞர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியின் இறுதியாக அமரர் கல்கியின் வரிகளில் எம்.எஸ் சுப்புலக்ஷ்மியால் புகழ்பெற்று அமரத்துவம் வாய்ந்த பாடலான காற்றினிலே வரும் கீதம் பாடலோடு மங்களம் பாடி நிறைவு செய்தார். மூன்று மணி நேரம் ஆகியிருந்ததே தெரியவில்லை.
நிகழ்ச்சி முடிந்தும் அரங்கில் சாருவின் விழாவை விட அதிக கூட்டமிருந்ததைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. என்ன இது?! நூல் வெளியீட்டு விழாவில் எண்ணிக்கை பற்றியே பேசிக்கொன்டிருந்தவர்களிடமிருந்து தொற்றிக்கொண்டது என்று நினைக்கிறேன்! நிகழ்ச்சி முடிந்தது வீடு செல்ல 200 ரூபாய் கேட்ட ஆட்டோக்காரரிடம் 150-க்கு பேரம் பேசிவிட்டு வழியில் அம்மா சொன்னார் ‘ஆசைக்கு ஒரு தடவ வந்தாச்சு. இதை விட நல்லா வீட்லயே LCD TV-ல பாத்துக்கலாம்.’ மனதிற்குள் மட்டும் சிரித்துக்கொண்டு தலையசைத்தேன்! வெற்றிகரமாக இந்த வாரம் புத்தக வெளியீட்டு விழா, திரைப்பட விழா, இசைக் கச்சேரி என்று நிறைவாகக் கழிந்தது. நாளை திரைப் பட விழாவில் ஐந்து படங்களைப் பார்க்கும் எண்ணம்!
 
2 Comments

Posted by on December 19, 2010 in Music

 

8th Chennai International Film Festival

சினிமாவுக்கும் எனக்கும் ஒரு பூர்வ ஜென்ம பந்தம் உள்ளது என்றே எனக்குத் தோன்றும். அந்த அளவுக்கு சினிமா மோகம் உள்ளவன். வெகு நாட்களாகவே திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ளும் ஆசை இருந்தாலும் இம்முறைதான் வாய்ப்பு கிடைத்தது. சென்ற வருடம் பணிச்சுமையின் காரணமாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள முடியாமல் போனது. 8வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் விளம்பரத்தை இணையத்தில் பார்த்ததும் நீண்ட நாள் ஆசை நிறைவேறிவிட்டது போல் உணர்ந்தேன். திரைத்துறையினரைப் பார்க்கும் போது ஏதோ என் குடும்ப உறுப்பினரைப் பார்ப்பதுபோல் ஒரு பரவசம் அடைவேன். படங்கள் பார்ப்பதைவிட அங்கு வரும் நடிகர், நடிகையர், இயக்குநர்களைப் பார்க்கவே சென்றேன்.

அலுவலகத்திலிருந்து அவசரமாகக் கிளம்பி மழை காரணமாக ஆட்டோவில் சென்று 6.45-க்கு வண்ண விளக்குகளால் ஜொலி ஜொலித்த உட்லண்ட்ஸ் அடைந்து Delegate Pass கிடைக்கும் Counterக்குச் சென்றால் பூட்டப்பட்டிருந்தது. நாளை வரவும் என்று ஒரு பெரியவர் சொன்னார். ஏமாற்றத்துடன் நின்றிருந்தேன். இவ்வளவு தூரம் வந்துவிட்டோம், குறைந்த பட்சம் சினிமா பிரமுகர்களையாவது பார்த்துவிட்டுச் செல்லாலாம் என்று நின்றிருந்தேன். அப்போது ஒருவர் அருகில் வந்து ‘Pass வேணுமா?’ என்றார். நண்பனுக்காக வாங்கினேன், அவர் வரவில்லை என்றும் 500 ரூபாய் Pass-ஐ 4oo ரூபாய்க்குத் தருவதாக கூறினார். முதலில் சற்று தயங்கினேன். காரணம் அவர் நண்பர் புகைப்படத்துடன் பெயர் எழுதப் பட்டிருந்தது. யாரேனும் கண்டுபிடித்துவிட்டால் மானம் போய்விடும் என்று தயங்கினேன். இவ்வளவு கூட்டத்தில் யாரும் பார்க்க மாட்டார்கள், கழுத்தில் அணிந்திருந்தால் போதுமானது என்று சொல்லி வாங்க வைத்துவிட்டார். அவர் சொன்னது போல் யாரும் கண்டுகொள்ளவில்லை. அரங்கில் நுழைந்து ஓர் ஓரமான இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டேன். அடுத்த நாள் என் பெயரில் என் புகைப்படத்துடன் ஐநூறு ரூபாய்க்கு ஒரு வாங்கிக் கொள்ள எண்ணினேன்.

அரங்கில் நுழைந்த போது வயலின் கலைஞர் லலிதா நின்றுகொண்டே காபியையும் சாருகேசியையும் தவழ விட்டுக் கொண்டிருந்தார். காதல் ரோஜாவே, ஏதோ ஏதோ ஒன்று, ஆருயிரே என்று முடியும் தருணத்தில் சென்றதால் முழுவதும் கேட்க முடியவில்லை. மேடையின் பின் இருளில் இரு தொகுப்பாளர்களில் விஜய் டிவி ரம்யா மட்டும் மின்னினார். (நல்லவேளை DD இல்லை!)  கோட் அணிந்த ஆண் தொகுப்பாளர் யாராக இருக்குமென்று யோசித்துக் கொண்டிருந்தேன். வெளிச்சத்தில் வந்ததும்தான் தெரிந்தது அது Maddy!தனக்கே உரிய ஸ்டைலில் சிறப்பு விருந்தினர்களை மேடைக்கு அழைத்தார் மாதவன். ஜெர்மன் நாட்டிலிருந்து இருவர் வந்திருந்தனர். மீசையின்றி ஸ்மார்ட்டாக வெள்ளை கோட்டில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், வெள்ளை கோட் அணிந்து, முகத்தை மறைக்கும்  தொப்பி காண்ணாடியுடன் நடிகர் விக்ரம் (உயரம் சற்று குறைவாகவும் மெலிந்தும் காணப்பட்டார். பெயர் சொல்லாவிட்டால் அடையாளம் தெரிந்திருக்காது), கேரள சர்வதேச திரைப்பட விழா முடித்த கையோடு நடிகர் ஜெயராம், எஸ்.வீ .சேகர் மற்றும் சில உறுப்பினர்கள் மேடையில் இருந்தனர். அனைவரும் தொலைதொடர்பு அமைச்சர் பரிதி இளம்வழுதிக்காக காத்திருந்தனர்.  வழக்கம்போல் அமைச்சர் தாமதமாக வந்ததும் அனைவரும் பேசத் தொடங்கினர்.
சரத்குமாரும் விக்ரமும் நல்ல தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசினர். எஸ்.வீ சேகர் வந்ததும் அரங்கில் கலகலப்பு கூடியது. அவர் வழக்கமாக சொல்லும் திரைப்பட தயாரிப்பாளர் பற்றிய ஜோக்கை சொன்னார். திரைப்பட விழாக்களின் இன்றைய நிலை குறித்து ஜெயராம் பேசினார். 20 வருடங்களுக்கு முன் தில்லியில் தான் பங்குகொண்ட ஒரு திரைப்பட விழா பற்றி பேசினார். குளிக்காமல் நீண்ட தலைமுடி தாடி வளர்த்தவர்கள் மட்டுமே கலந்து கொண்ட ஐம்பது வயதைக் கடந்தவர்கள் இவரை ஒரு மாதிரி பார்த்ததாகவும் கூறினார். நகைச்சுவைக்காக எதையாவது பேசி இப்படி மாட்டிக் கொள்வார் போலும். மலையாள சேனலில் தன் வீட்டில் வேலை செய்யும் தமிழ்ப்பெண்ணைப் பற்றி சொன்னது போல்! அந்நிலைமை மாறி இப்போது இளைஞர்களே அதிகம் தென்படுகிறனர் என்றார். சாருவின் விழாவில் கேட்டதுபோல் இருந்தது. இவ்விழாவிற்கு கலைஞர் 25 லட்சம் ரூபாய் நிதி கொடுத்ததாக பரிதி இளம்வழுதி கூறினார். சந்தடி சாக்கில் எஸ்.வீ. சேகர் காலையும் வாரினார். இவர் எப்போதும் இதே ஜோக்கையே சொல்கிறார் என்றார். அரங்கில் மக்களுடன் அமர்ந்திருந்த இயக்குனர் ஷங்கரை மேடைக்கு அழைத்தனர். போட்டியில் பங்குபெறும் தமிழ்ப்படங்களைத் தேர்வு செய்யும் நடுவர் குழுவில் சிங்கீதம் சீனிவாச ராவ்,  சாருஹாசன் மற்றும் நடிகை அர்ச்சனா ஆகியோரை அறிமுகம் செய்தனர். அன்று அர்ச்சனா வரவில்லை.
‘களவாணி LC112’ ஓவியாவும் ‘கற்றது தமிழ் ஆனந்தி’ அஞ்சலியும் குத்து விளக்கேற்றி விழாவை ஆரம்பித்தனர். பேசிய அனைவரும் விழாவிற்கு ஏற்பாடு செய்து முன் நின்று நடத்தும் சுஹாசினி மற்றும் ரேவதிக்கு நன்றி கூறினர். ரேவதி மேடையில் தோன்றி மாதவனுக்கும் ரம்யாவுக்கும் நன்றி கூறினார். பின் சினிமா பிரமுகர்கள் அனைவரும் பால்கனிக்குச் சென்றனர். ரோஹிணி, பார்த்திபன், பூர்ணிமா ஜெயராம், லிஸி ப்ரியதர்ஷன், லிங்குசாமி, உமா பத்மநாபன், லக்ஷ்மி (பாஸ் படத்தில் ஆர்யா அம்மா) ஆகியோர் தென்பட்டனர்.  சுஹாசினி தோன்றி அன்றைய திரைப்படமான Soul Kitchen பற்றி பேசினார். விழாவின் Logo Film-ஐ கௌதம் மேனன் இயக்கியதாக கூறினார். விளம்பரங்கள் முடிந்ததும் உடனே படம் ஆரம்பித்து விட்டனர். பிறகுதான் தெரிந்தது அந்த விளம்பரன்களுள் ஒன்றுதான் அந்த லோகோ படம். புது வசந்தம் படத்தில் வரும் வானொலியில் லைஃப்பாய் பாடல் மாதிரி ஆகிவிட்டது. சுமார் 7.45க்கு படம் ஆரம்பித்தது. Balck Comedy Genre-ல் அமைந்த ஒரு படம். Soul Kitchen was not Soul Touching  😦

இப்படி ஒரு விழா நடக்கையில் திரையரங்கைச் சீர் செய்யும் பணியை மேற்கொண்டிருக்கலாம். வெளி அலங்காரம் பார்த்துவிட்டு  உள்ளே சென்றால் திரையும் இருக்கைகளும் பல்லிளித்தன. அரங்கில் ரங்குஸ்கி தொல்லை வேறு! INOX-ல் VIP-க்களுக்காக Red Carpet Screening ஏற்பாடு செய்திருப்பதாக சுஹாசினி சொன்னார். துவக்க விழாவை மட்டுமாவது INOX-ல் ஏற்பாடு செய்திருக்கலாம். சில அயல்நாட்டு முகங்களும் தென்பட்டன. தம் உடல் வாகிற்குப் பொருந்தாத ஆடையணியும் நம் நாட்டுப் பெண்களை விட சுடிதாரில் தென்பட்ட அயல் நாட்டுப் பெண்கள் மிகவும் பாந்தமாக இருந்தனர். முக்கியமாக அவர்கள் துப்பட்டாவை அழகாக அணிந்திருந்தனர். நம் பெண்கள் அதை அணிவதே இல்லை.

படம் பார்க்கும்போது ஒரு விஷயம் தோன்றியது. சர்வதேச திரைப்படங்கள் அரிதாக இருந்த காலக்கட்டத்தில் இதுபோன்ற விழாக்களைக் கொண்டாடினர். அரிதாக கிடைக்கும் வீடியோ காசெட்டுகளை வைத்து சிறிய Projector-ல் திரையிட்டனர். தொழில்நுட்பம் வளர்ந்தவிட்ட இக்காலத்திலும் அதே போன்று சிறிய Projector  வைத்து திரையின் முக்கால்வாசி அளவு மட்டும் திரையிடுவது வேடிக்கையாக இருக்கிறது. இணையத்தில் குவிந்திருக்கும் டாரெண்டுகளின் மூலம் எந்த ஒரு சிறந்த உலகப் படத்தையும் காணும் வாய்ப்புகள் இன்று இருக்கின்றன. விழாவில் பார்ப்பதைவிடத் தரமான பிரிண்ட்களை  நம் மடிக்கணினியில் காணலாம். அதனால் அரங்கில் பார்க்கும்போது ஒருவிதமான Uncomfortable Feeling-ஐத் தவிர்க்க முடியவில்லை. இருந்தாலும் பலபேருடன் ஆங்கிலம் அல்லாத ஓர் அயல் மொழித்திரைப்படத்தைக் காண்பது ஒரு வித்தியாச அனுபவம்தான்.

 
Leave a comment

Posted by on December 15, 2010 in Functions, Movies

 

சாரு நிவேதிதா நூல் வெளியீட்டு விழா – 13.12.2010

Charu’s wife Avantika receives Book from Nalli Kuppuswamy

நான் முதன் முதல் ஒரு புத்தக வெளியீடு விழாவிற்குச் சென்றது என்றால் பதிவர் சரவணா கார்த்திகேயனுடைய (Writer CSK)  “பரத்தை கூற்று” வெளியீட்டு விழாதான். வெளியிட்டவர் சாரு. ஒரு புகழ் வாய்ந்த எழுத்தாளருடையது என்றால் நேற்று காமராஜர் அரங்கில் நடந்த சாருவின் (Notorious?!?!) புத்தக வெளியீட்டு விழாதான். எனக்கு சாரு மேல் நல்ல அபிப்ராயம் இல்லை. அவரது புத்தகங்களைப் படித்ததில்லை. அவரது தளத்தில் மற்றும் மனங்கொத்தி பறவை மட்டுமே அவரைப் படித்திருக்கிறேன். அதனால் எல்லோராலும் பரவலாகச் சொல்லப்படும் ஸீரோ டிகிரியை CSK-யின் விழாவில் வாங்கினேன். மூன்று பக்கங்களுக்கு மேல் படிக்கவில்லை. வீட்டில் யாரும் அதை படித்துவிடக் கூடாதென்று மறைத்து வைத்தேன். எல்லோரும் ஒருமித்து சொல்லும் கருத்து அதை முழுமையாக படிக்க வேண்டும் என்று. அதற்காக அவரது சிறந்த படைப்புகளான ராசலீலாவைப் படித்துவிட்டுப் பிறகு ஸீரோ டிகிரியைத் தொடலாம் என்றிருந்தேன். இந்நிலையில் அவரது ஏழு புத்தகங்கள் வெளியீட்டு விழ பற்றி அவர் விளம்பரப் படுத்தியதைக் கண்டேன். அவரது புதிய நாவலுடைய கருவை CSK-யின் விழாவில் சொன்னார். அது ஒரு காரணமாக இருந்தாலும் முழு முதற் காரணம் நான் மிகவும் மதிக்கும் சமகால எழுத்தாளரான  எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றுவதாக அறிந்ததே. இரண்டாவது மிஷ்கின். மூன்றாவது பதிவர்கள் பலரைச் சந்திக்கலாம் என்று. அடுத்து மனுஷ்யபுத்திரன். அவரது பேச்சு நீயா நானாவில் அருமையாக இருந்ததென்று என் மாமா கூறியிருந்தார். உயிர்மையை பல இன்னல்களுக்கிடையில் நடத்துகிறார் என்று அறிந்து கொண்டேன். குஷ்பூ முக்கிய காரணம் இல்லை.

வெளியிடப் பட்ட புத்தகங்கள் :
1. தேகம் (நாவல்) – வாதையின் எண்ணற்ற ரகசியங்களைத் திறக்கும் கதை
2. ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி – புதிய & தொகுக்கப்படாத சிறுகதைகள்
3. சரசம்-சல்லாபம்-சாமியார் – நித்தியானந்தர் குறித்த குமுதம் ரிப்போர்ட்டர் தொடர்
4. கனவுகளின் நடனம் – சமகால தமிழக, இந்திய, உலக சினிமா குறித்த பார்வைகள்
5. கலையும் காமமும் – விவாதங்கள்
6. மழையா பெய்கிறது – சர்ச்சைகள்
7. கடவுளும் சைத்தானும் – கட்டுரைகள்
ஆறு மணிக்கே என்னால் அலுவலகத்தில் இருந்து கிளம்ப முடிந்ததால் சுமார் ஏழு மணியளவில்தான் அரங்கில் நுழைந்தேன். பெரிய அரங்கம். அந்த அளவு கூட்டம் இல்லை. பின்வரிசையில் அமர்ந்து சுற்றும் முற்றும் பார்த்தேன். தெரிந்த முகங்களே இல்லை. மேடையில் தெரிந்த முகங்கள் சாரு, மிஷ்கின், மதன், மனுஷ்யபுத்திரன் கனிமொழி, தமிழச்சி, எஸ்.ரா. புகைப்படத்தில் மட்டுமே பார்த்திருந்த அவரை முதன்முதலாக நேரில் பார்த்தேன். கொஞ்சம் பருமனாக இருந்தார். அவரை விட பருமனான குஷ்பூவை கண்கள் தேடியலைந்தன. எங்கு தேடியும் தென்படவில்லை. பெருத்த ஏமாற்றம் 😦 எழுத்துச் சித்தர் பாலகுமாரன் வந்திருப்பதாக சொன்னார்கள். அட! காலையில்தான் தேன்கிண்ணம் நிகழ்ச்சியில் அவரைப் பார்த்தோம். இப்போது நேரில் பார்க்கப் போகிறோம் என்று எட்டிப் பார்த்ததில் அவர் வெண்பட்டுத் தலைதான் தெரிந்தது. விசிலடித்து கைதட்டி ஆரவாரித்துக் கொண்டிருந்த திசையை நோக்கினேன். பதிவர் கூட்டம். ஜாக்கி சேகர், அதிஷா, லக்கிலுக் ஆகியோரைத் தெரிந்தது. CSK- வைப் பார்க்கவில்லை. இவ்வளவு கம்மியான கூட்டம் இருக்கிறதே. காமராஜர் அரங்கம் பத்தாமல் வெளியில் பலர் நிற்பார்கள் என்று எஸ்.ரா. சொன்னதாக சாருவின் தளத்தில் படித்ததை எண்ணி உள்ளுக்குள் சிரித்தேன்.
Audience in Charu’s Book Release Function
இருப்பினும் புத்தக வெளியீட்டு விழாவிற்கு சற்று அதிகமான கூட்டம் என்று அனைவரது பேச்சிலிருந்து அறிந்து கொண்டேன். நான் செல்லும் முன் மனுஷ்யபுத்திரன் தன் உரையை முடித்துவிட்டார். அடுத்து நல்லி குப்புசாமி _________ பேசிக்கொண்டிருந்தார் (சமீபத்தில் தி.ஜா.வின் மிஸ்டர் கோடு கோடு கோடு படித்ததன் விளைவு) அதன் பின் எழுத்தாளரும் சட்ட மன்ற உறுப்பினரான ரவிக்குமார் (எனக்கு தெரியாது) சரசம்-சல்லாபம்-சாமியார் பற்றி பேசினார். ஏன் ஏழு புத்தகங்களை வெளியிட்டார் என்று ஒரு காரணம் சொன்னார். இது சங்கீத பருவம், அவ்வரங்கில் அடுத்த வாரத்திலிருந்து ‘சென்னையில் திருவையாறு’ நடக்க விருப்பதால் சங்கீதத்தின் ஏழு ஸ்வரங்களைக் குறிக்கும் விதமாக ஏழு புத்தகங்களை வெளியிடுகிறார் என்று சாருவே எண்ணாத ஒரு மொக்கையைப் போட்டார். மிஷ்கினே அறியாத குறியீடு. சுரேஷ் கண்ணன் அறிந்திருக்கலாம். ரவிக்குமாரை விடவும் சுமாராக நடராசன் பேசினார் (அவர் எங்கள் தூ…..ரத்து உறவினர் என்று இன்று அம்மா சொன்னார்)
Thamizhachi Thangapandiyan Speech

தமிழச்சி தங்கபாண்டியன் – எனக்குப் பிடித்த அழகான தமிழச்சிகளுள் ஒருவர். ஆனால் அவர் பேசி நேற்றுதான் கேட்டேன். தமிழ் மட்டும் அல்ல ஆங்கிலத்திலும் நன்றாக ‘மழையா பெய்கிறது’ பற்றி பேசினார். சாருவின் தளத்தில் வாசகர்களுடைய கேள்வி பதில்கள் புத்தக வடிவில் வந்துள்ளது. சில பகுதிகளை வாசித்துக் காண்பித்தார். A good speech, they say, should be like a mini-skirt, short enough to be interesting, and long enough to cover the essentials என்று சொன்னவர் தன்னுடைய உரையை மினி ஸ்கர்ட் போலின்றி புடவையாக்கிவீட்டார். தமிழச்சி ஆயிற்றே. (ஆனால் சல்வாரில் வந்திருந்தார் என்பது வேறு விஷயம்).

Kanimozhi Speech
அடுத்து பேச வந்த கனிமொழி எந்தப் புத்தகத்தைப் பற்றியும் பேசாமல், பொதுவாக சாருவைப் பற்றியும், அவர்களது நட்பைப் பற்றியும், தமிழ் இலக்கிய சூழல் பற்றியும் பேசினார். தமிழச்சி போல் எந்தவித தயாரிப்புமின்றி பேசியதுபோல் இருந்தது. மீன்குஞ்சுக்கு நீந்தக் கற்றுக்கொடுக்க வேண்டுமா என்ன? தான் அதிகம் சண்டைபோட்ட நண்பர் சாரு என்றும், அவருடன் பல விஷயங்களில் உடன்பாடு இல்லை என்றும் பேசினார். இலக்கியம் குறித்த விழாக்களுக்கு பெரும்பாலும் பார்த்த முகங்களும் வயதானவர்களுமே தென்படுவர். ஆனால் அங்கிருந்த புதிய இளைய முகங்களைப் பார்ப்பது இன்பமாக இருப்பதாக சொன்னார். சாரு அடிக்கடி தன்னை இளைஞன் என்று சொல்லிக் கொள்வது பற்றியும் சொன்னார்.
Speech by Madhan
பேசிய அனைவரும் தனது உரை முடிந்ததும் கிளம்பிக் கொண்டிருந்தனர். கனிமொழி பேசியதும் சாருவும் தமிழச்சியும் அவரை வழியனுப்பப் பொய் விட்டனர். அடுத்து உரையாற்ற வந்த மதன் வந்ததும் பலத்த கரகோஷம். மேடையிலுள்ள அனைவருக்கும் என்று சொல்ல மேடயில் எஸ்.ரா மற்றும் ம.பு தவிர யாரும் இல்லை என்று நகைச்சுவையாக ஆரம்பித்தார். சற்று முன் வரை colourful-ஆக இருந்தது இப்போது இல்லை என்றும் கூறினார். கனவுகளின் நடனம் புத்தகம் பற்றி பேசினார். சாருவின் தைரியமான தில்லான attitude மிகவும் பிடிக்கும் என்று சொல்லி, அதுபோல் எல்லா நேரங்களிலும் இரக்க வேண்டாம் என்று சொன்னார். சாருவிற்கு கதாநாயகனாகம் ஆசையிருப்பதால் எல்லோரிடமும் பகைமையை வளர்த்து முகத்தை சேதப் படுத்திக் கொள்ளவேண்டாம் என்றும் கூறினார். Inception மற்றும் நந்தலாலா பற்றிய சாருவின் விமர்சனம் நன்றாக இருந்ததாகவும், மிஷ்கின் தன் நண்பர் என்பதற்காக அவரது குறைகளைச் சுட்டிக்காட்டாமல் இருக்கக் கூடாது என்றும் சொன்னார்.
Speech by Mysskin

எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த மிஷ்கின் வந்தார். மிஷ்கின் கனவுகளின் நடனம் பற்றி பேசுவார் என்றெண்ணி இருந்தேன். ஆனால் முக்கிய நூலான தேகம் பற்றி பேசினார். அவர் ஒரு சிறந்த வாசகர் என்று பரவலாக பேசப்படுவதால் இப்புத்தகத்தைப் பற்றி சாரு பேசச் சொல்லியிருப்பார் என நினைத்தேன். ஆனால் அவர் நூலைப் பற்றி பேசாமல் நந்தலாலாவினால் அவர் நொந்தலாலா ஆனா கதையை இருபது நிமிடங்கள் புலம்பித் தீர்த்தார். நந்தலாலாவைப் பலர் காப்பியடித்திருப்பதாகச் சொன்னது அவருக்கு வேதனை அளித்ததாம். ஒரு தந்தையிடம் பிள்ளை கற்றுக் கொள்வதற்குப் பெயர் காப்பியா என்று கேள்வி எழுப்பினார். அவர் குரோசோவாவையும் கிடாநோவையும் மட்டுமே பார்த்து திரைப்படம் கற்றுக் கொண்டாராம். அதனால் அவர்கள் படம் போல் தெரியலாம் என்று மழுப்பினார். சாருவின் நூலைப் பற்றி பேசாமல் இதையே பேசி வெறுப்படையச் செய்தார். என்ன படித்து என்ன புண்ணியம். மேடை நாகரிகம் தெரியவில்லை. CSK நூல் வெளியீட்டு விழாவில் சாரு செய்ததுபோல் சாருவுக்கு மிஷ்கின் செய்துவிட்டார். சாரு எத்தன் என்றால் மிஷ்கின் எத்தனுக்கு எத்தன் என்று நிரூபித்து விட்டார். சரவணகார்த்திகேயன் போல் சாருவும் நினைத்திருப்பார் ‘இவனையும் மதிச்சு கூப்ட்டோமே. எம்புத்திய….”  என்று. சாருவின் நடிப்புத் திறனைப் பற்றியும் கூறினார். அவருக்கு நடிப்பு சுட்டுப் போட்டாலும் வரவில்லையாம். அவர் பல டேக்குகள் வாங்கியதால் யுத்தம் செய் படத்திற்கு நஷ்டமாம். தேகம் பற்றி அவர் சொன்னது: ‘சரோஜா தேவி’ என்ற காமக்கதைகள் இடம்பெறும் புத்தகமே (சத்தியமாக நான் படித்ததில்லை) தேவலாம், வீட்டில் வைத்து படிக்க முடியாது என்று. இதைவிட ஒரு எழுத்தாளரை அவமதிக்க முடியாது. சபை நாகரிகமற்ற இவரது இலக்கிய அறிவை மெச்சிய, படத்தைக் கொண்டாடிய சாருவுக்கு சவுக்கடி. இதுபோல்  எத்தனையோ பேரை சாரு காட்டமாக தாக்கியிருக்கிறார் என்று நினைத்தாலும் முதன் முதலாய் சாரு மீது எனக்கு பரிதாபம் ஏற்பட்டது. நாவலைப் படிக்கும் எண்ணமே போய்விட்டது. மிஷ்கின் மீதிருந்த மதிப்பும் உடைந்து விட்டது.

Speech by S.Ramakrishnan
அடுத்து என்னைப்போல் பலர் ஆவலோடு காத்திருந்த எஸ்.ரா பேரைத் தொகுப்பாளினி சொன்னதும் அரங்கம் முழுக்க கைதட்டல். சாருவே எதிர்பார்த்திருக்க மாட்டார். நிகழ்ச்சியின் Show Stopper அவர்தான். அவரது எழுத்துகள் போல் அவர் குரல் மென்மையாக இல்லை. ஆனால் பேச்சு அப்படியே இருந்தது. வதை பற்றி அவர் பேசியதில் மயங்கித்தான் போனேன். அதனாலேயே முழுவதுமாக புரியவில்லை. ஜி.நாகராஜன் பற்றி அவர் கூறிய சம்பவம் நெகிழச் செய்தது. பாலுணர்வையும் கடவுளையும் பற்றி அருமையாக சொன்னார். இரண்டையுமே நாம் தலைமேல் தூக்கி வைத்துக் கொள்கிறோம் இல்லை, காலில் போட்டு மிதிக்கின்றோம். கமல் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. செக்ஸ் போல் பக்தியையும் வீட்டோடு வைத்துக் கொள்ள வேண்டும். எஸ்.ரா பேசிய பின்தான் நாவலை வாங்கப் படிக்கும் எண்ணம் வந்தது.
இறுதியாக சாரு நன்றியுரை ஆற்ற வந்தார். CSK-வின் விழாவில் சாரு உளறிக் கொட்டினார். சரியாக தயார் செய்துகொண்டு வரவில்லை. ஆனால் நேற்று சற்று சுவாரசியமாகவே பேசினார். அவரது பேச்சில் இளமையும் வசீகரமும் ததும்பியது. வந்த அனைவருக்கும் நன்றி சொன்னவர் கடைசிவரை இருந்த தமிழச்சிக்கு நன்றி சொன்னதாக தெரியவில்லை. ஆனால் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய சாரதாவுக்குச் சொன்னார். பின் தன் சுயதம்பட்டத்தை ஆரம்பித்துவிட்டார். Economic Times பத்திரிகையில் தனது முழுப்பக்க பேட்டி வந்ததை வெட்டியெடுத்து ஜெராக்ஸ் செய்து கொண்டுவந்ததை மேடையிலிருந்த அனைவருக்கும் வழங்கினார். ஸீரோ டிகிரியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததும் எல்லோரும் கொண்டாடினர், வாடா இந்தியாவில், கேரளாவில் கொண்டாடுகின்றனர். ஆனால் தமிழ் நாட்டில் யாரும் மதிக்கவில்லை, கண்டுகொள்வதில்லை என்று குற்றம் சாட்டினார். தமிழர்களுக்கு இலக்கிய அறிவு மற்ற மாநிலக்காரர்கள் அளவுக்கு இல்லை என்று தமிழர்கள் முன் சொன்னது மிகுந்த வருத்தத்தை அளித்தது. மணி வரை அவர்குக்காக உட்கார்ந்திருந்த தமிழ் வாசகர்களை அவமானப் படுத்தும் விதமாக இருந்தது. இவ்வளவும் மீறி அங்கு உட்கார வேண்டுமா என்று தோன்றியது. பின் தேள் சாமியார் கதையை நினைத்துக் கொண்டேன். ஒருவழியாக நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்து தேகம் நாவல் மட்டும் வாங்கலாம் என்று நினைத்தேன். ஆனால் உயிர்மைக்காகவும், மனுஷ்யபுதிரனுக்காகவும் ஏழு நூல்களையும் வாங்கிகொண்டு புறப்பட்டேன். வெளியில் CSK-வைப் பார்த்தேன். ஊருக்குப் போகும் அவசரத்திலிருந்த அவரிடம் கைகுலுக்கிவிட்டு வீடு வந்தடைந்தேன். பதிவர் சுரேஷ் கண்ணன் வந்திருந்தது வீடு வந்ததும் அவரது buzzஐப் பார்த்து அறிந்தேன். முன்பே தெரிந்திருந்தால் சந்தித்திருப்பேன்.
இது வரை முக்கிய எழுத்தாளர்களின் நூல் வெளியீட்டு விழாவைக் காணாததால் இது சற்று வித்தியாசமான அனுபவமாக இருந்தது. எழுத்துகள் மூலம் மனம் வருடும் எஸ்.ராவின் கைகளைப் பற்றி வருடவேண்டும் போல் இருந்தது. ஆனால் நேரமின்மை காரணமாக பாலகுமாரன் முகத்தைக்கூட பார்க்காமல் வந்துவிட்டேன். தேன்கிண்ணம் மறுஒளிபரப்பில் மீண்டும் பாலகுமாரன். புத்தாண்டன்று நடக்கவிருக்கும் எஸ்.ரா.வின் “துயில்” புத்தக வெளியீட்டு விழாவிற்கு கண்டிப்பாக செல்ல வேண்டும்.
Love him or Hate him, but you can’t Ignore Charu 🙂

படங்கள் உபயம் : http://kaveriganesh.blogspot.com/2010/12/7.html
 
2 Comments

Posted by on December 14, 2010 in Books, Functions