வாரம் ஒரு படம் பார்த்துக் கொண்டிருந்த என்னை. உலகக் கோப்பை, தேர்தல் போன்றவை இரண்டு மாதங்களாக பட்டினி போட்டுவிட்டன. அப்படியோர் அகோரப் பசியில் இருந்த எனக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் கிடைத்த Continental Delight – கோ. படம் அவ்வளவு Rich & Colourful ஆக உள்ளது. முதல் பந்திலேயே சிக்சர் அடித்து விசில் போட வைத்துவிட்டார் இயக்குனர். ரஜினி, கமல், இளையராஜா, ஜெயகாந்தன், சச்சின், டோனி என அமர்க்களமான ஸ்டில் புகைப்படங்கள் டைட்டிலிலேயே அசத்திவிட்டார். நல்ல ஒரு Appetizer போல் பசியை மேலும் கிளப்பி விட்டது.
ஜீவா ஒரு புகைப்பட நிருபர் என்று அனைவரும் அறிந்ததே. முதல்வன் அர்ஜுனின் நினைவு வருவதைத் தடுக்க முடியவில்லை. முடிந்தவரை தன் தனித்தன்மையை வெளிப்படுத்திருக்கிறார் ஜீவா. அவருடன் சினிமா செய்திகள் எழுதும் பியா அவரை ஒருதலையாக காதலிக்கிறார். வி.தா.வா வில் கௌதம் மேனனின் படங்களைப் பரிகாசம் செய்வது போல் இதிலும் கே.வி.ஆனந்தின் முந்தைய படத்தை பரிகாசம் செய்து ஒரு வசனம் பேசுகிறார் பியா.
அரசியல் செய்திகள் எழுதும் ஒரு துணிச்சலான நிருபராக அவர்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் சேர்கிறார் கார்த்திகா. வழக்கமான சினிமா ஃபார்முலாவின்படி ஜீவாவுக்கும் கார்த்திகாவுக்கும் காதல் மலர்கிறது. ஆனால் பியாவின் காதல் அறிந்து கார்த்திகா விலக முயல்கிறார். ‘குவியமில்லாக் காட்சிப் பேழை’ என்று மதன் கார்க்கியின் அற்புதமான சொல்லாடலுக்குப் பொருத்தமாக அமைந்திருந்தன அந்த மாண்டேஜ் ஷாட்டுகள்.
அஜ்மலும் அவரது நண்பர்களும் அரசியலில் நுழைந்து ஊழலை ஒழித்து நல்லாட்சியைத் தரும் ஆர்வத்தில் முதல்வர் பிரகாஷ் ராஜ் (இருவர் தமிழ்செல்வன் Version 2.0) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் கோட்டா சீனிவாச ராவ் (நல்ல வேலையாக பெண் கதாபாத்திரம் இல்லை) இருவரையும் எதிர்த்து தேர்தலில் போட்டியிடுகின்றனர். (ஆய்த எழுத்து சூர்யா). அஜ்மல் தாக்கப் படுகிறார். பின் அவர் பேசும் மேடையில் வெடிகுண்டு வெடிக்கப்படுகிறது. அதனால் வெறுத்துப் பொய் தேர்தல் வேண்டாம் என்று ஒதுங்கும் அஜ்மலுக்கு ஜீவா ஆறுதலளித்து நிற்க வைக்கிறார். இளைஞர்கள் ஜெயிக்கின்றனரா என்பது பல சுவாரஸ்ய திருப்பங்கள் கொண்ட கிளைமாக்ஸ். இறுதியில் வரும் சண்டைக் காட்சிகளும், ஒளிப்பதிவும் A1. இந்தப் படம் மட்டும் தமிழகத் தேர்தலுக்கு முன் வெளியாகியிருந்திருந்தால் பல சலசலப்புகள் ஏற்பட்டிருக்கும்.
படத்தின் பெரிய பலங்கள் விறுவிறுப்பான திரைக்கதை, ஒளிப்பதிவு (இம்முறை கே.வி. ஆனந்த் ஒளிப்பதிவு செய்யாமல் ரிச்சர்ட் எம். நாதன் என்பவர் பிரமாதப் படுத்தி இருக்கிறார்), படத்தொகுப்பு (படத்தொகுப்பாளர் ஆண்டனி ஒரு காட்சியில் வருகிறார், வசனங்கள். ஐஃபோன், டேட்டா கார்ட், மேக்புக், பென் டிரைவ் என்று தொழில்நுட்ப வளர்ச்சியை மிகச்சிறப்பாக உபயோகப் படுத்தியுள்ளனர். குறிப்பாக இறுதிக் காட்சியில் 3G வீடியோ கால். ஜீவா தன் பாத்திரத்தை உணர்ந்து underplay செய்திருக்கிறார். ஜீவாவுக்கு இணையான மிகவும் பொருத்தமான கதாபாத்திரம் அஜ்மலுக்கு. அஞ்சாதேவிற்குப் பிறகு அசத்தியிருக்கிறார். இரண்டு கதாநாயகிகள் இருந்தும் அவர்களை ஊறுகாய் ஆக்காமல் நல்ல ஸ்கோப் உள்ள கதாபாத்திரங்கள் தரப்பட்டிருக்கின்றன. புதுமுகம் கார்த்திகா (என்ன ஹைட்) துணிச்சலான பெண் நிருபர் பாத்திரத்திற்குக் கச்சிதமாக பொருந்துகிறார்.ஆளை விழுங்கும் கண்களும் வில்லினையொத்த புருவங்களும் நிறைய பேசுகின்றன. (எனக்கு அந்தக் காலத்து மாதவியின் புருவங்கள் மிகவம் பிடிக்கும் :-)). சில கோணங்களில் அப்படியே ராதா. இருந்தாலும் ராதும்மா மாதிரி வராதும்மா. பியா இதிலும் நூடுல்ஸ் தலை, அரைகுறை ஆடைகளுடன் வருகிறார். ஆனால் செல்ல ராட்சசியாக நன்றாக நடித்திருக்கிறார். பிற்பாதியில் இவரால்தான் கதையே நகர்கிறது. நல்ல வேளையாக அஜ்மலுக்கு ஜோடியாக்கி டூயட் பாட வைக்கவில்லை 🙂
பாடல்கள் வெளிவந்த புதிதில் என்னமோ ஏதோ தவிர என்னக்கு எதையும் பிடிக்கவில்லை. அனால் காட்சிப்படுத்திய விதம் அற்புதம். முதல் பாதியின் பாடல்கள் நம்மை இருக்கையோடு கட்டிப் போட்டு விடுகின்றன. அக நக பாடலில் சூர்யா, கார்த்தி, தமன்னா, ஜெயம் ரவி, மிர்ச்சி சிவா, அப்பாஸ், இயக்குனர் சசிக்குமார், ஜெய், பரத், க்ரிஷ், அதர்வா, அனுஜா ஐயர் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே ஆடியிருக்கிறது. இவர்களுடன் ஹாரிஸ் ஜெயராஜும், மதன் கார்க்கியும் கூட வருகிறார்கள். என்னமோ ஏதோ பாடல் பற்றி முதலிலே சொல்லிவிட்டேன். ஜீவா அதில் uber cool. அமளி துமளி பாடல்களின் லொகேஷன்கள் WOW என்று வாய் பிளக்க வைக்கின்றன. பள்ளத்தாக்குகளின் முகடுகளில் காதலர்கள் ஆடுகையில் எங்கே கீழே விழுவிடுவார்களோ என்று நெஞ்சம் பதைபதைக்கிறது. குறிப்பாக இரண்டு மலைகளுக்கு நடுவே அந்தரத்தில் இருக்கும் பாறை – Marvelous! நெற்றிப் பொட்டில் பாடல் கதையுடன் நகரும் காட்சிகளைக் கொண்டது. ஃபேஸ்புக் ட்விட்டரை எல்லாம் பெரிய திரையில் பார்க்கையில் மனம் குதூகலிக்கிறது. இடைவேளைக்குப் பின் வரும் வெண்பனியே பாடல் பெரிய குறை. எக்ஸ்ப்ரெஸ் வேகத்தில் போய்க்கொண்டிருக்கும் திரைக்கதையில் ஒரு ஸ்பீட் பிரேக்கர். இரண்டாம் இடைவேளை போல் மக்கள் வெளியே போய் விட்டனர். அப்பாடலுக்காக மெனக்கெட்ட கலை இயக்குனரின் உழைப்பு வீணாகிவிட்டது. ஆனால் Frozen in Love என்பதற்கேற்ப அந்தப் பனிச் சிற்பங்கள் கொள்ளை அழகு. அந்தப் பாடலை நீக்கியிருந்தாலோ, வேறு சூழ்நிலையில் அமைதிருந்தாலோ இன்னும் நன்றாக இருந்திருக்கும். கார்த்திகாவிற்கு பின்னணி குரல் கொடுத்த சின்மயிக்கு ஒரு முழுப்பாடல் கொடுத்திருக்கலாம் 😦
கோட்டா சீனிவாச ராவும், பிரகாஷ் ராஜும் ஹை டெசிபெல்லில் அலறாமல், ஓவர் ஆக்க்ஷன் செய்யாமல் இருந்தது பெரிய ஆறுதல். ஜெகன் அயனில் வந்தது போலின்றி கொஞ்சமாக வந்து போகிறார், கொஞ்சம் வெந்தும் போகிறார். போஸ் வெங்கட் இறுதிக் காட்சியில் போற்றும் படியான நடிப்பு. அதேபோல் சன் மியூசிக்கில் Anchorஆக இருந்த காஜல் (எ) தமிழ்ச்செல்வி (மானாட மயிலாட புகழ் Sandy-யின் மனைவி?) ஆச்சரியப் படுத்திவிட்டார். வசனகர்த்தா சுபாவில் சுரேஷ் ஓரிரு காட்சிகளில் தென்பட்டார். அதேபோல் ஜீவாவின் அப்பா அம்மாவாக வரும் ‘பட்டிமன்ற’ புகழ் ராஜாவும், வனிதா க்ருஷ்ணசந்தரும் ஒரே ஒரு காட்சிக்கு மட்டும் வந்து போகின்றனர். பைக்கில் வீலிங் விட்டுக்கொண்டு புகைப்படம் எடுப்பதெல்லாம் கொஞ்சம் ஓவர். யார் கண்ணுக்கும் தெரியாத விஷயங்கள் ஜீவாவிற்கு மட்டும் தெரிகிறது. மென்பொருள் நிறுவனம் போல் இருக்கும் பத்திரிகை அலுவலகம் எங்கு இருக்கிறது?
முதல்வன் ஆய்த எழுத்து போன்ற படங்களை நினைவு படித்தினாலும், தன் விறுவிறு திரைக்கதையால் ஈர்க்கிறார் கே.வி.ஆனந்த். ஹாட் ட்ரிக் அடித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ‘கனா கண்டேன்’ ஹிட் ஆகவில்லை என்றாலும் கூட, மூன்று தரமான படங்களைக் கொடுத்த வகையில் கே.வி.ஆனந்துக்கு வாழ்த்துகள். படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரும் நம்பிக்கையை விதைத்திருக்கிறது.
நானும் ஓர் இதழாளர் ஆகாமல் விட்டேனே என்ற வருத்தம் எஞ்சியது!