எத்தனை படங்கள் பார்த்து ரசித்தாலும் சில படங்கள் எப்போதும் நம் மனதிற்கு மிகவும் நெருக்கமாக பிரத்யேகமாக இருக்கும். நம்மை பாதித்த படங்கள், பதின்ம வயதில் பார்த்த படங்கள், காதலன்/காதலியுடன் பார்த்த படங்கள் என்று நிறையவே இருக்கின்றன. அப்படி என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படங்கள் பல இருந்தாலும் நான் அப்படங்களைப் பார்த்த தேதிகள் முதற்கொண்டு அன்று நிகழ்ந்த சம்பவங்கள் வரை மீண்டும் மீண்டும் நினைத்து அசைபோடும் படங்கள் மிகச்சில. மௌன ராகம், அழகன், கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற என் பிரத்யேக படங்களை நான் இதில் சேர்க்கவில்லை. என் பதின்ம வயதில் நான் திரையரங்கில் பார்த்த இரண்டு Romance Genre படங்கள் – காதலுக்கு மரியாதை, அலைபாயுதே. நடிகை ஷாலினி மீது தீவிரமான காதல் கொண்டிருந்தேன். (பிரியாத வரம் வேண்டும் படத்தைக் கூட சேர்த்துக் கொள்ளலாம்). அப்போதெல்லாம் எனக்கொரு காதலி கிடைத்ததும் இவ்விரண்டு படங்களையும் அவளுடன் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். இதுவரை அது நிகழவில்லை. இனிமேல் அந்தக் கொடுப்பினை நமக்கு இல்லை என்றிருந்தபோது வந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா. என்னை மிகவும் பாதித்தது. அதைப் பார்த்ததும் ஒரு பெண்ணைத் துரத்தித் துரத்தி காதலிக்க வேண்டும் போலிருந்தது.
சென்ற ஆண்டு இதே நாளில் வெளியானது. என் நண்பர்களுடன் முதல் நாள் முதல் காட்சி பார்த்தேன். அதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு. முதலில் கௌதம் மேனன். மணிரத்னதிற்குப் பிறகு நகரத்துக் காதல் காட்சிகளைக் கவிதையாகக் காட்டியவர். Cute வசனங்களால் ஈர்த்தார். காக்க காக்க action படம் என்பதைவிட ஒரு Romance படமாகவே நான் பார்ப்பேன். திரையரங்கில் ஒரு முறை மட்டுமே அப்படத்தை முழுதாக பார்த்திருக்கிறேன். பின்பு டி.வி.டி வாங்கியதும் பலமுறை பார்த்திருந்தாலும் ஜோதிகாவைக் கடத்தும் காட்சி வரை மட்டுமே பார்ப்பேன். வேட்டையாடு விளையாடு படத்தில் கூட கமல்-கமலினி கமல்-ஜோதிகா காட்சிகள் ஹைக்கூ. வாரணம் ஆயிரம் சூர்யா-மேக்னா காட்சிகள், ப்ரியா-சூர்யாவிடம் காதலைச் சொல்லும் காட்சி என்று காதலுக்கு புதிய பரிமாணத்தைக் கொடுத்தார்.
விண்ணைத்தாண்டி வருவாயா ஒரு முழுநீளக் காதல் படம் என்றதால் எப்படியும் முதலில் பார்த்துவிட வேண்டும் என்று எண்ணினோம். அடுத்தது இசை. இரட்டை ஆஸ்கருக்குப் பின் ரஹ்மானின் முதல் தமிழ்ப் படம் என்பதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தன. அதுமட்டுமின்றி தன் ஆஸ்தான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிடம் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் ரஹ்மானிடம் இசையை ஒப்படைத்தார். சதுயமாக மன்னிப்பாயா தவிர வேறெந்த பாடலும் எனக்குப் பிடிக்கவில்லை. இரண்டு மாதங்களில் கேட்டுக் கேட்டு மிகவும் பிடித்து விட்டன. ரஹ்மானின் இசையிலுள்ள Magic அப்போதுதான் புரிந்தது. பாடல்களை எப்போதும் ஒரு அழகியல் தன்மையுடன் காட்சிப்படுத்துபவர் கௌதம். (மணிரத்னத்திற்கு அடுத்து என்று சொல்லத் தேவையில்லை) ஆனாலும் எனக்கு முற்றிலும் பிடிக்காத சிம்பு-த்ரிஷாவை திரையில் பார்க்க வேண்டுமே என்ற ஒருவிதமான எண்ணம் இருந்தது. பாடல்களை மட்டும் நம்பி படத்தை எதிர்பார்ப்பின்றி பார்க்கச் சென்றோம்.
ஆனால் எங்கள் எண்ணத்தைத் தவிடுபொடி ஆக்கிவிட்டார் கௌதம். அவ்வளவு அடக்கமான சிம்புவையும் அழகான த்ரிஷாவையும் அதுவரை பார்க்கவே இல்லை. அதுமட்டுமின்றி இருவரும் நன்றாக நடிக்கவும் செய்திருந்தனர். இறுதியில் வரும் எதிர்பாராத திருப்பம்தான் அப்படதின் அழகு. யே மாயா சேஸாவே என்று தெலுங்கில் இருவரும் இணைவதுபோல் காட்டி வழக்கமான சினிமாவகாமல் தனித்து நின்றது. ஒரே நாளில் சிம்புவும் த்ரிஷாவும் பலரது உள்ளங்களையும் கார்த்திக் ஜெஸ்ஸியாக கொள்ளை கொண்டனர். என்னைப் பொறுத்தவரை அலைபாயுதேவிற்கு அடுத்து சிறந்ததொரு காதல் படம் என நிச்சயம் சொல்வேன். கார்த்திக் என்ற பெயர் ராசிதானோ என்னமோ 😉 இரண்டாம் நாள் கல்லூரி நண்பர்களுடன் பார்த்தேன். மூன்றாம் முறை அம்மா மற்றும் தம்பியோடு பார்த்தேன். நான்காம் முறை அதன் நூறாவது நாள் பார்த்தேன். பின் இணையத்திலிரிந்து தரவிறக்கி தோன்றும்போதெல்லாம் பார்ப்பேன். நேற்று கௌதம் மேனனின் பிறந்தநாள். நடுநிசி நாய்கள் பார்த்துவிட்டு இரவில் வந்து இப்படத்தைப் பார்த்தேன், சலிக்கவே இல்லை.
சென்ற வருடம்தான் இணையத்தில் நிறைய தமிழ் வலைப்பூக்களைத் தேடித் தேடித் படித்தேன். அப்படி விண்ணைத்தாண்டி வருவாயா விமர்சனத்தைத் தேடிக்கொண்டிருக்கும்போது பலதரப்பட்ட விமர்ச்னன்களைக் காண நேர்ந்தது. நான் அதுவரை படித்துக் கொண்டிருந்த பதிவர் சரவண கார்த்திகேயன் படத்தை குப்பை என்று விமர்சித்திருந்தார். ஆனாலும் அவர் எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும். பதிவர் அரவிந்தனின் இப்பதிவைக் கண்டேன். இவர் கௌதம் மேனனை விட உருகி எழுதியிருந்த விமர்சனமும் அவரது எழுத்துகளும் என்னை அவரது நண்பராக்கியது. பல தருணங்களில் படத்தின் சில காட்சிகளைப் பார்த்துவிட்டு அப்பதிவையும் படிப்பேன். மனதிற்கு இதமாக இருக்கும். பல நாட்கள் கழித்து பதிவர் சுரேஷ் கண்ணனின் பதிவைப் பார்க்க நேர்ந்தது. திருமணமாகிய அவருக்குக்கூட மீண்டும் ஒரு பெண்ணைக் காதலிக்கும் எண்ணத்தைத் தூண்டியது. இம்மூவரும்தான் நான் தமிழில் எழுத காரணமானவர்கள். இப்போதுகூட புதிதாக ஒரு வலைப்பூவைப் பார்த்தால் விண்ணைத்தாண்டி வருவாயா பற்றி எழுதப் பட்டிருக்கிறதா என்று பிப்ரவரி 2010ல் இருந்து எழுதப்பட்டுள்ள இடுகைகளைப் பார்ப்பேன். காதல் மன்னனான கார்க்கியின் பதிவு மட்டும் எனக்கு குழப்பத்தைத் தந்தது.
அடுத்தது காதல் படம்தான் என்று அறிவித்துள்ள கௌதமிடம் இருந்து இன்னொரு வி.தா.வா வை எதிர்பார்க்கிறேன் 🙂