படத்தின் விளம்பரங்களே ‘அட’ போட வைத்தன. இருந்தும் டைரக்டர் A.L.விஜய்யின் முந்தைய படங்களான கிரீடம் மற்றும் பொய் சொல்லப் போறோம் என்னை அதிகம் கவராததால் பெரிய எதிபார்ப்பு ஏதுமில்லை. இருந்தும் என்னை ஈர்த்த விஷயம் அதன் களம். மேலும் சென்னை எனக்கு மிகவும் பிடித்த இடம் என்பதால் பழங்கால மதராசபட்டினதைக் காண வேண்டுமென்ற ஆவலே மேலோங்கி இருந்ததால் நான்கு நாட்கள் முன்பே ரிசர்வ் செய்து நேற்று சென்றேன்.
டைட்டில்களே பிரமாதம். லண்டனில் ஒரு முதியவரின் funeral -ல் ஆரம்பிக்கிறது கதை. முதியவரின் மனைவியான ஏமி ஸ்மித்தின் மூளையில் blood clot ஆகி உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலையில் அவர் மதராசபட்டினம் செல்ல வேண்டுகிறார். அங்கு அவர் பேத்தியுடன் பரிதி என்பவரை கையில் ஒரு தாலியுடன் தேடுகிறார். சென்னை வந்ததும் அவருடைய flashback ஆரம்பமாகிறது. 1945 ல் மதராசபட்டினத்தில் ஆங்கிலேய கவர்னர் வில்கின்சனின் மகளான ஏமி அங்கு சலவைத் தொழிலாளி, மல்யுத்த வீரன் ஆர்யாவின் வீரத்தைக் கண்டு ரசிக்கிறாள். இருவருக்கும் இடையே மொழி, இன வேறுபாடுகளையும் மீறி காதல் மலர்கிறது. ஏமிக்கும் Comissioner Robertக்கும் திருமணம் நிச்சயிக்கப் படுகிறது. ஆனால் கவர்னருக்கு இருவரின் காதல் பற்றி ஆகஸ்ட் 14-ம் தேதி தெரிய வருகிறது. ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் என அறிவிக்கப் பட்ட நிலையில் வெள்ளையர்கள் அனைவரும் இங்கிலாந்து செல்லவேண்டிய நிலையில் முதலில் ஏமியையும் தன் மனைவியையும் டில்லிக்கு அனுப்பி வைக்கிறார். விடிவதற்குள் பரிதியைக் கொல்லவும் உத்தரவிடுகிறார். வழியில் தப்பி வரும் ஏமி பரிதியைத் தேட, எமியைப் பரிதி தேட, இருவரையும் வெள்ளையர்கள் விரட்ட ஆகஸ்ட் 15 அன்று என்ன நடந்தது, இருவரும் சேர்ந்தனரா, ஏமி ஏன் இங்கிலாந்துக்குச் சென்றாள், மூதாட்டி ஏமி முதியவர் பரிதியைச் சந்தித்தாரா என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் தொய்வின்றி சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
Period Film என்றாலே சற்று நீளமாகவும் சலிப்புறச் செய்வதாகவும் இருக்கும் என்ற எண்ணத்தை உடைத்தெறிந்திருக்கிறது இப்படம். அதுவும் முதல் பாதியின் ஒன்றரை மணி நேரம் போனதே தெரியவில்லை. ஆர்யாவும் ஏமியும் நன்கு நடித்துள்ளனர். நான் கடவுளை விட ஆர்யாவிற்கு இதில் அதிக Scope உள்ளது. அதை நன்றாக பயன்படுத்தியும் உள்ளார். சொல்லப்போனால் ஆர்யாவை விட ஏமிதான் score செய்கிறார். கொள்ளை அழகுடன் நம் மனதையும் கொள்ளை கொள்ளுகிறார். மொழி பெயர்ப்பாளராக வரும் ஹனீபா (அவரது கடைசி படம்), குஸ்தி வாத்தியாராக வரும் நாசர், ஆர்யாவின் நண்பர்கள், பாலசிங் அனைவரும் நிறைவாக நடித்துள்ளனர்.
படத்தின் இரு முக்கிய நாயகர்கள் – கலை இயக்குனர் செல்வகுமார் மற்றும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா. 65 வருடங்களுக்கு முன்னிருந்த மதராசபட்டினத்தை நம் கண் முன் வைக்கிறார். அன்றைய சென்ட்ரல் ஸ்டேஷன், ஸ்பென்சர் பிளாசா, டிராம் வண்டி, புகைவண்டி, கூவம் நதி, அதில் படகு சவாரி என அனைத்தையும் காட்டுவதில் நிறைய மெனக்கெடல் தெரிகிறது. அதனை மிக அழகாக மிகையின்றி ஒளிப்பதிவு செய்து நம் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார் நீரவ் ஷா. முழுவதும் flashback ஆக காட்டாமல், அன்றும் இன்றுமாக காட்சிப்படுத்திய விதம் நன்றாக உள்ளது. அதற்கு ஆண்டனியின் நேர்த்தியான படத்தொகுப்பு அருமை.
ஜி.வி.பிரகாஷின் இசையில் பூக்கள் பூக்கும் தருணம் மனதை வருடுகிறது. வாம்மா துரையம்மா பாடலில் உதித் நாராயணனிற்கு பதில் தமிழறிந்த பாடகர் பாடி இருந்தால் நன்றாக ரசித்திருக்கலாம். மேகமே மேகமே பாடலில் மாணிக்க விநாயகம், M.S.V இவர்களுடன் நாசர் விக்ரம் ஆகியவர்களைப் பாட வைத்து சபாஷ் பெறுகிறார். உச்சக்கட்டத்தில் chasing காட்சியில் வரும் காற்றிலே காற்றிலே பாடல் மிக அற்புதம். ஹரிஹரன் – Hats Off. சோனு நிகம் மற்றும் சைந்தவி பாடியுள்ள ஆருயிரே பாடல் சுமார். பின்னணி இசை திருப்திகரமாக இல்லை. Period படத்திற்கு உண்டான பிரத்யேக இசை missing.
முதல் காட்சியிலிருந்து பல காட்சிகள் Titanic படத்தைப்போலவே அமைந்திருப்பது ஒரு குறை. முதிய ஏமியின் flashback, அதில் Jack கொடுக்கும் Chainபோல், இதில் பரிதி கொடுக்கும் தாலி. ராபர்ட்டுக்கும் பரிதிக்கும் இடையே நடக்கும் மல்யுத்தப் போட்டி Lagaan படத்தை நினைவு படுத்துகிறது. பரிதியை ஆங்கிலேயர்களிடமிருந்து ஏமி காப்பாற்றுவது சமீபத்தில் Kites படத்தில் பார்பரா மோரி ஹ்ரிதிக்கைக் காப்பாற்றும் காட்சி போல் உள்ளது. இறுதியில் கொஞ்சம் Commercial படம் மாதிரி ஆகிவிட்டது. முதிய ஏமி தானாக பரிதியைத் தேடிப் போவதும், அங்கு அவள் காணும் காட்சிகளும் சற்று சினிமாத்தனமாக இருக்கிறது. நல்ல வேளையாக முதிய ஆர்யாவை வயதான மேக்கப்போடு காட்டாமல் விட்டதற்கு கோடி நன்றிகள்.
அக்காலச் சென்னையைக் கண் முன் நிறுத்த, இயக்குனர் எடுத்துக் கொண்ட முயற்சிகளில் கொஞ்சம் அக்கால வட்டார வழக்கில் கதாபாத்திரங்களைப் பேச வைக்க முனைந்திருக்கலாம். சில குறைகள் இருந்தாலும் நிறைவான நிறைகளால் நம் மனதில் பதிகிறது. இப்படத்தை சுதந்திரப் போராட்டப் படமாக பார்க்காமல், சுதந்திரத்தின் போது நிகழ்ந்த ஒரு காதல் கதையாக மட்டுமே பார்க்கவும். படம் முடிந்த பிறகு, நாமும் மதரசபட்டினத்தில் வாழ்ந்திருக்கலாமே என்ற ஆதங்கம் எழுவதைத் தவிர்க்க முடியாது. A Must Watch and not to be missed. Enjoy the journey from Chennai to Madrasapattinam.
பிற்சேர்க்கை : இயக்குனர் விஜய் தனது மூன்றாவது படத்தில் கவனத்தை ஈர்த்து, எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். அடுத்த படத்தில் அதனைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
My Rating: 7.5/10