RSS

எஸ்.ராமகிருஷ்ணன் நூல் வெளியீட்டு விழா

02 Jan

புத்தாண்டு தினத்தை சற்று வித்தியாசமாக கொண்டாட நினைத்திருந்த என் எண்ணத்தைப் பூர்த்தி செய்தவர் எஸ். ராமகிருஷ்ணன். அவரது நூல் வெளியீட்டு விழா பற்றி அவர் தளத்தில் பார்த்ததுமே போக வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன். மிஷ்கினால் சர்ச்சைகள் கொண்ட சாரு நிவேதிதாவின் நூல் வெளியீட்டு விழா போலில்லாமல் நிறைவாகவே இருந்தது எஸ்.ராவின் புதிய நாவலான ‘துயில்’ வெளியீட்டு விழா.

சரியாக 6.30க்கு தேவநேய பாவாணர் நூலகத்தை அடைந்தபோது அவ்வளவு கூட்டமாக இல்லை. பதிவர்களில் நர்சிம், அதிஷா, யுவகிருஷ்ணா மற்றும் விஜய மகேந்திரன் ஆகியோரை அடையாளம் கண்டுகொண்டேன். பதிவர் சுரேஷ் கண்ணனை எதிர்பார்த்தேன். தென்படவில்லை. வந்தாரா என்று தெரியவில்லை. சில நிமிடங்களில் அந்தச் சிறிய அரங்கு நிரம்பியிருந்தது. சாருவுக்கு வந்தது போல் கூட்டமில்லை என்றாலும் வந்திருந்தவர் அனைவரும் எஸ்.ராவையும் அவர் எழுத்துகளையும் உண்மையாக நேசிப்பவர்களாகவே இருந்தனர். ஜால்ரா கோஷ்டிகளும், விசிலடிப்பவர்களும் இல்லாமல் நிம்மதியாக இருந்தது.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக இந்திரா பார்த்தசாரதி அழைக்கப் பட்டிருந்தார். மனுஷ்யபுத்திரனின் வரவேற்புரையைத் தொடர்ந்து பேராசிரியர் சித்ரா நாவலைப் பற்றிய அறிமுக உரை வழங்கினார். அவரைத் தொடர்ந்து இயக்குனர்கள் ஜே.டி, ஜெர்ரி, முரளி அப்பாஸ், திரு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவுக்காக முகஸ்துதி செய்யாமல் உளமார வாழ்தியதுபோல் இருந்தது. இயக்குனர் முரளி, எஸ்.ராவுக்கு சாஹித்ய அகடெமி விருதும், அவர் எழுத்துகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நோபல் பரிசும் கிடைக்க வேண்டும் என்று கொஞ்சம் ஓவராவே பேசினார். பின் சிறப்புரை ஆற்ற வந்த இ.பா, சாஹித்ய அகாதேமி எல்லா ஒரு விருதே இல்லை. மக்கள் ஆதரவை விட சிறந்த ஒரு பரிசு இல்லை என்றார். நாவலைப் பற்றி தமிழும் கொஞ்சம் ஆங்கிலமும் கலந்து பேசினார். புத்தகத்தைப் படிக்காமல் அதைப் பற்றி பேசுவதில்லை என்று குறிப்பிட்டார். அதனால் ஒருவாரம் முன் கொடுக்கப் பட்ட புத்தகத்தை நான்கு நாட்களில் படித்துவிட்டு வந்ததாக சொன்னார். இதை மிஷ்கின் போன்றவர்கள் கற்றுக் கொள்வது நல்லது. இ.பா வின் ‘குருதிப்புனல்’ நாவலைப் படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
அவரைத் தொடர்ந்து ஈரோட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் குணசேகரன் பேச வந்தார். ஈரோடு என்றதும் உற்சாகமானேன். ஏனோ தெரியவில்லை அரசியல் மேடையில் பேசுவது போல் ஆவேசமாக பேசினார். எஸ்.ரா புராணம் பாடி அவரை நெளிய வைத்து விட்டார். கேப்டனுக்குப் போட்டியாக  புள்ளி விபரங்களைக் கூறினார். அதில் உருப்படியான இரண்டு இது எஸ்.ராவின் 50-வது நூல். உயிர்மை வெளியிடும் அவரது 27-வது நூல். அரங்கில் சிலர் அவரது நீ…ண்ட பேச்சைப் பொறுக்க முடியாமல் கைதட்டினர். அப்படியாவது அவர் உரையை முடித்துக் கொள்வாரென்று. ஆனால் அவரோ அதைப் பாராட்டு என்று தவறாக புரிந்துகொண்டு பேசிக்கொண்டே இருந்தார். ஒருவழியாக அவர் முடித்தபோது அப்பாடா என்று பலத்த கைதட்டல்கள்.
அதன்பின் ஒரு நிகழ்ச்சியின் இரண்டாம் அமர்வாக வாசகருக்கும் எழுத்தாளருக்கும் இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்று ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தார் எஸ்.ரா. இலக்கியம் சார்ந்த சிலருடன் நாவலைப் பற்றி மட்டுமின்றி பொதுவான இலக்கியச் சூழலைப் பற்றிய ஓர் உரையாடல். மனநல மருத்துவர் ருத்ரன், எழுத்தாளர்கள்  யுவன் சந்திரசேகரன் மற்றும் முருகேச பாண்டியனுடன் எஸ்.ரா உரையாடினார். மனுஷ்ய புத்திரன் ஒருங்கிணைத்தார். இதுபோல் வேறெந்த தமிழ்  நூல் வெளியீட்டு விழாவிலும் நடந்ததில்லை என்று குறிப்பிட்டார். மற்ற நூல் வெளியீட்டு விழாக்களும் இதுபோல் அனாவசிய அரசியல்களையும் ஜால்றாக்களையும் தவிர்த்து இருந்தால் ஆரோக்கியமாக இருக்கும்.
நாவல்களின் எண்ணிக்கை முன்பைவிட தற்போது மிகவும் குறைவாக உள்ளதைப் பற்றி ஆதங்கப் பட்டனர். வழக்கமாக நன்றாக பேசும் ருத்ரன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சரியாக பேசவில்லை. ஆனால் பெயரளவில் மட்டுமே நான் கேள்விப் பட்டிருந்த யுவன் சந்திரசேகர் நன்றாகவே பேசினார். ஹாரி போட்டருக்கு இருக்கும் தமிழ் வாசகர்கள் தமிழ் நாவல்களுக்கு இல்லை என்றனர். ஆனால் இளைஞரளிடம் வாசிப்பு ஆர்வமும், எழுதும் ஆர்வமும் நல்ல ரசனையும் இருப்பதாக கூறியவர், நாவல் எழுதுவது மிகவும் எளிது என்று எல்லோரையும் முயற்சிக்கச் சொன்னார். நல்ல எழுத்தாளனைப் பற்றி அவரது எழுத்துகளும் வாசகர்களும் தான் பேச வேண்டும். எஸ்.ரா. தன்னைப் பற்றிப் பெருமையடித்துக் கொள்ளவில்லை. சாருவைப் போலன்றி தன்னடக்கத்தின் மறு உருவமாக தெரிந்தார்
துயில் நாவல் நோயைப் பற்றி, மருத்துவம் பற்றி, நம்பிக்கை பற்றியது என்று குறிப்பிட்டார். அதனால்தான் தன் நாவலை ‘மருத்துவத்தை மக்கள் சேவையாக நினைக்கும் மருத்துவர்களுக்கு’ அர்பணித்துள்ளார். செவ்வியல் தரத்தோடு இருப்பதாக அனைவரும் கூறினர். 350 ரூபாய் நாவலை 300 ரூபாய்க்கு வாங்கி அதில் எஸ்.ராவின் கையெழுத்தைப் பெற்றுக் கொண்டேன். சுஜாதாவிடம் கிடைக்காத அந்த வாய்ப்பு எஸ்.ராவிடம் கிடைத்தது. மனம் வருடும் எழுத்துகளை எழுதும் அவர் கைகளையும் தொட்டுப் பார்த்துக் கொண்டேன் 🙂 நிகழ்ச்சிக்கு எஸ்.ராவின் ரசிகரான என் மாமாவையும் அழைத்துச் சென்றிருந்தேன். புத்தாண்டு தினம் வித்தியாசமாக இருந்தது என்று நன்றி தெரிவித்தார்.
 
2 Comments

Posted by on January 2, 2011 in Books, Functions

 

2 responses to “எஸ்.ராமகிருஷ்ணன் நூல் வெளியீட்டு விழா

  1. துளசி கோபால்

    February 2, 2011 at 11:20 am

    விழாவுக்கு வந்துருந்தேன். முதல் பகுதி முடிஞ்சதும் நேரமாகிருச்சுன்னு போகும்படியா ஆச்சு. பாக்கி நிகழ்ச்சிகளை உங்கள் பதிவின் மூலம் இப்போதான் தெரிஞ்சுக்கிட்டேன்.

    நன்றி.

     
    • Kaarthik Arul

      February 10, 2011 at 10:50 pm

      வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி! இரண்டாம் பகுதியை மிஸ் பண்ணிட்டீங்களே. சிறப்பாக இருந்தது 🙂

       

Leave a comment