RSS

Category Archives: S.Ramakrishnan

எஸ்.ரா. தந்த இன்ப அதிர்ச்சி

இன்று காலை பாட்டி அவள் விகடன் கொடுத்து ‘என் மனைவி’ என்ற தொடரைப் படிக்கச் சொன்னார். அப்போது நான் அதன்பின் நிகழவிருக்கும் இன்ப அதிர்ச்சியை எதிர்பார்க்கவில்லை. என் ஆதர்ச எழுத்தாளர்களுள் ஒருவரான எஸ். ராமகிருஷ்ணன் தன் மனைவியைப் பற்றி எழுதி இருந்தார். எழுத்தாளனின் மனைவி ஒரே சமயத்தில் தேவதையாகவும் அடிமையாகவும் இரட்டை நிலையில் வாழ்கின்றனர் என்று வழக்கம்போல் அழகாக எழுதி இருந்தார். பின் அலுவலகம் சென்றதும் ஒரு மின்னஞ்சல் அந்த ஆச்சரியம் காத்துக்கொண்டிருந்தது. நண்பர் மகேஷ் அவர்கள் அனுப்பி இருந்த மின்னஞ்சலில் எஸ்.ரா.வின் வலைதளத்தில் என் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக வாழ்த்துகளுடன் அனுப்பியிருந்தார். நேற்றே இதைப் பார்த்ததாகவும் என் அலைபேசிக்கு அழைத்து அது அணைக்கப்பட்டிருந்ததாகவும் ஜிடாக்கில் தெரிவித்தார். நான் சற்று குழப்பமடைந்தேன். நம்மைக் கலாய்க்கிறாரா என்று கூட யோசித்தேன். பின் சாருவின் தளத்தில் வந்திருக்குமோ என்றும் யோசித்தேன். ஏனென்றால் சென்ற வாரம் சாருவுக்குதான் ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். தான் எப்போதும் பெருமையாக பேசிக் கொண்டிருக்கும் மகாநதி மற்றும் குருதிப் புனல் படங்களின் விமர்சனங்களைப் பதிவிடுமாறு கேட்டுக் கொண்டிருந்தேன். இன்னும் பதிவிடவில்லை.

பின் எஸ்.ரா. தளத்தைப் பார்வை இட்டேன். நீயா நானா நிகழ்ச்சியில் அவர் குறிப்பிட்ட நூறு சிறந்த தமிழ் நூல்களின் பட்டியலை அவரது பழைய பதிவிலிருந்து எடுத்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன். அப்படியலை வாசகர்களின் வேண்டுகோள்களுக்கிணங்க மீள் பதிவு செய்திருந்தார். அதில் இருக்குமோ என்ற ஐயத்துடன் பார்த்தேன். இல்லை. பின் ‘மேடைப்பேச்சு’ என்ற தலைப்பில் எழுதி இருந்த பதிவைப் படித்தேன். அதன் இறுதியில் “இலக்கியக்கூட்டங்களில் எனது உரையைக் கேட்டவர்களுக்கும், அதைக் குறித்து சிறப்பாக பதிவிட்ட சுரேஷ் கண்ணன், பத்ரி சேஷாத்ரி , கார்த்திக் அருள். தமிழ் ஸ்டுடியோ அருண், உயிரோசை உள்ளிட்ட நண்பர்களுக்கும். தினமணி, தினமலர்,. தினகரன், உள்ளிட்ட நாளிதழ்களுக்கும். என்னைப் பேச அழைத்தவர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முடித்திருந்தார்.

இதைப் படித்ததும் கொஞ்ச நேரம் வரை கால்கள் தரையில் இல்லை. இதை என் ஆதர்ச பதிவரான சுரேஷ் கண்ணனிடம் மின்னஞ்சலில் தெரிவித்தேன். ஏற்கனவே ஒருமுறை ஜெயமோகன் பதிவுலகில் திரைவிமர்சனங்கள் குறித்த தனது கட்டுரையில் சுரேஷ் கண்ணனின் விமர்சனங்களைப் பாராட்டி இருந்தார். அதையும் முதலில் நான்தான் அவரிடம் ட்விட்டரில் (அப்போது இருந்தார்) தெரிவித்தேன். அவரது எழுத்துகளை மிகவும் விரும்பி வாசிப்பவன். அவரது விமர்சனங்கள் எஸ்.ராவின் விமர்சனங்களைப் போல் இருப்பவை. கிழக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் பத்ரி சேஷாத்ரி மற்றும் உயிரோசை சிற்றிதழ் உரிமையாளர் போன்றவர்களுடன் என் பெயர் வந்ததே எனக்கு பெருமையாக இருந்தது.

எஸ்.ரா மற்ற பதிவர்களின் பதிவுகளைப் பார்ப்பார் என்றுகூட அறிந்திருக்கவில்லை. ஆனால் எங்கள் பெயர்களைக் குறிப்பிட்டு எழுதுவார் என்று சற்றும் எதிபார்க்கவில்லை. இப்படி ஓர் அங்கீகாரம் எனக்கு மிகவும் அதிகம் என்று சொல்வதுகூட குறைவுதான். Milliblog-ல் என் பெயர் வந்ததற்கே பீற்றிக் கொண்டிருந்தேன், இப்போது கேட்கவே வேண்டாம் 🙂 சில நாட்களாக ‘என் பையனும் இலக்கிய விழாவுக்கும் புத்தகத் திருவிழாவுக்கும் போறான்!’ என்றிருந்த அம்மா Very good சொன்னார். இப்போது இந்த ச்சும்மாவை கொஞ்சம் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஓர்  உத்வேகத்தை அளித்துள்ளது. நண்பர் மகேஷிற்கு மீண்டும் நன்றிகள் பல. பெங்களூருவில் சந்திக்கையில் நிச்சயம் ட்ரீட் 🙂

பிற்சேர்க்கை: அவள் விகடனில் அவர் “கௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள் கூட நினைவிருக்கிறது ஆனால் நண்பர்களின் பிறந்த நாட்கள் நினைவில் இருப்பதில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார். அதைப் படித்ததும் அந்த நூறு பெயர்களையும் பகிர்ந்து கொள்ளுமாறு அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப நினைத்திருந்தேன்.

 
2 Comments

Posted by on January 20, 2011 in Books, Milestones, S.Ramakrishnan, Writers