பதிவர் மற்றும் நண்பர் சரவண கார்த்திகேயன் (Writer CSK) எழுதிய முதல் புத்தகமான ‘சந்திரயான்‘ தமிழக அரசின் சிறந்த புத்தகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இவ்விருது பல்வேறு பிரிவுகளில் எழுதப்பட்ட நூல்களுக்கு வழங்கப்படுகிறது. 2009-ல் அறிவியல் பிரிவில் சிறந்த புத்தகமாக சந்திரயான் CSKவிற்குக் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.
சந்திரயானை விட சரவண கார்த்திகேயனின் இரண்டாம் புத்தகமான பரத்தை கூற்று கவிதைத் தொகுப்பு நல்ல வரவேற்பைப் பெற்றது. நானும் அதைத்தான் முதலில் படித்தேன். சனியன்றுதான் இப்புத்தகத்தை புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். இன்று இந்த நற்செய்தியைக் கேட்டதும் எல்லோரிடமும் பெருமையாக பகிர்ந்து கொண்டேன். நாஞ்சில் நாடனுக்கு சாஹித்ய அகாடெமி விருது அறிவித்ததில் அவர் நண்பர்கள் அடைந்த மகிழ்ச்சியை நானும் அடைந்தேன். அவர் மேலும் பல புத்தகங்களை எழுதி பல விருதுகளைப் பெற மனமார வாழ்த்துகிறேன்.
பதிவர்கள் எழுதும் புத்தகத்தில் தரம் இல்லை என்று ஒரு கட்டுரையைப் பிரசுத்திருந்த அதே தினமணியில் இச்செய்தியும் வந்திருப்பது இனிய முரண். சில பிரபல எழுத்தாளர்களை விடவும் நன்றாக எழுதுகின்ற பதிவர்களுக்கு CSKவின் இவ்விருது ஊட்டமும் நம்பிக்கையும் அளிக்கும். தனது எண்ணத்தை தினமணியும் மாற்றிக் கொள்ளுமென நம்புவோம்.
தினமணி கட்டுரை : http://idlyvadai.blogspot.com/2011/01/blog-post_8292.html
விருது பற்றிய செய்தி : http://thoughtsintamil.blogspot.com/2011/01/2009.html