ஆம்! மிகவும் தாமதமான பதிவுதான். எந்திரன் பாடல்கள் வெளியாகி இன்றுடன் சரியாக ஒரு மாதமாகிறது. இப்போது இதைப் பற்றி பதிவு எழுதுவதன் காரணம் ரஹ்மானின் இசை அப்படிப்பட்டது. பொதுவாக கேட்டவுடன் பிடிக்கும், மனதில் பதியும் பாடல்களைத்தான் பலரும் விரும்புவர். இளையராஜாவின் இசை போல. எனக்கும் அப்படித்தான். இரண்டாம் முறை கேட்கும்போது அதனுடன் என்னால் பாட முடிந்தால் மட்டுமே ஒரு பாடலை மிக விரும்புவேன். ரஹ்மானும் அப்படிப் பட்ட பாடல்களைக் கொடுத்துள்ளார். ஆனால் பிறகு வந்த பெரும்பான்மையான ரஹ்மான் பாடல்கள் தனுஷ் போன்றவை. கேட்டதும் பிடிக்காமல் கேட்கக் கேட்கப் பிடித்துப் போயின. வெகு சமீபத்திய உதாரணம் விண்ணைத்தாண்டி வருவாயாவின் பாடல்கள். அப்பாடல்கள் வெளியான சமயம் மன்னிப்பாயாவைத் தவிர வேறெந்த பாடலையும் எனக்குப் பிடிக்கவில்லை. ரஹ்மானையும் கௌதம் மேனனையும் திட்டித் தீர்த்தேன். ப்ளாக்கிலும் கடுமையாக எழுதினேன். இருந்தும் அவற்றைக் கேட்காமல் இருக்கவில்லை. ஆனால் ஒரு மாதம் கழித்து கொஞ்சம் பிடித்து விட்டன. படம் பார்த்ததும் மிகவும் பிடித்து விட்டன. (ஆரோமலேவை இன்னமும் என்னால் விரும்ப முடியவில்லை). ராவணன் இசையை விட விண்ணைத்தாண்டி வருவாயா இசையைச் சிறந்ததது என்பதென் கருத்து (பாடல் வரிகளைச் சொல்லவில்லை).
அதனால்தான் எந்திரன் பாடல்கள் வந்ததும் இப்பதிவை எழுதாமல் ஒரு மாதம் கேட்டுவிட்டு எழுதுகிறேன். ஆனால் வி.தா.வ பாடல்கள் போலன்றி எந்திரன் பாடல்கள் மனதில் பதியவில்லை. பாடல் வரிகள் கூட சொல்லிக் கொள்ளும்படி இல்லாமல் ஹைக்கூ தோரணங்களாக தொங்குகின்றன.